காந்தி - பகத்சிங் உரையாடல்
“பாபுஜி - வணக்கம், இன்றைக்கு என்ன காலையிலயே தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளீர்கள்?” ’‘யார் அது?” ”உங்களுக்கு ஒருபோதும் பிடிக்காத ஒருத்தன்” ”எப்பவும் யாரையும் நான் வெறுத்ததே இல்லை” ”உண்மையாகவா, வெள்ளைக்காரர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டியில உட்கார்ந்ததற்காக, உங்களை அதிலிருந்து வெளியில் தள்ளிவிட்டவர்களைக் கூடவா?” ”ஆம், அவர்களையும் நான் வெறுத்ததில்லை” ”நான் அதை நம்பவில்லை. அந்த சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் மாறிவிட்டீர்கள். அதை எதிர்த்துப் போராடுவது என்ற பாதையை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். இது உங்களது கோபத்தை விளக்குகிறது.” ”உன்னோடு நான் வாதிட விரும்பவில்லை. ஆனால், யார் நீ?” ”நான்.. பகத்சிங்..” ”ஓ.. அப்படியா.. நீ எப்படி இங்கு சொர்க்கத்தில் இருக்கிறாய்?” “எந்த கற்பனையான இடத்திலும் நாம் இல்லை என நினைக்கிறேன்‘’- “என்ன சொல்கிறாய் நீ?” “சொர்க்கம் – நரகம் என்று எதுவுமே இல்லை. இது எல்லாம் கட்டுக்கதையே”. “அட – இளைஞனே, நீயும் என்னைப் போலவே உலகத்திலிருந்து வெளியே வந்துவிட்டாய்.. எனவே, இதற்குப் பழகிக் கொள். உனது நாத்திகம் என்பது போலியானதாகும்.” “நான் உங்களை மதிக்கிறேன். நாம் எந்த மாயையான இடத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.. மாறாக வேறு ஒன்றைப் பகிர்ந்து கொள்கிறோம்-” “அப்படியா – அது என்ன ?” “ஒரு செயற்கை நுண்ணறிவு உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது அறிவியல் சார்ந்த மக்களின் கட்டுப்பாட்டில் முழுமையாக உள்ளது.” “உன்னைப் போன்றதொரு தீவிரமான நபரோடு விவாதிப்பதில் அர்த்தமில்லை. இறப்பிற்குப் பிறகும் நீ அதைப் புரிந்து கொள்ளவில்லை.” ’‘நல்லது – தூக்கிலிடப்படுவதற்கு சற்று முன்பு எனது நாத்திகம் பற்றிய கட்டுரை ஒன்றை நான் எழுதினேன். எனவே, எனது கொள்கைகளின்படியே நான் நடந்து கொள்கிறேன்.” “உனக்கு அது நல்லது.. ஆனால், நான் அதை ஏற்கவில்லை.” “அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. நாம் இத்தோடு அதை விட்டுவிடுவோம். ஆனால், எனது கேள்விக்கு நீங்கள் இன்னமும் பதில் அளிக்கவில்லை. நீங்கள் ஏன் உங்கள் தலையை சொறிந்து கொண்டு இருக்கிறீர்கள்?” “கீழே பூலோகத்தில் நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்”. “அது எனக்கும் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி ஆச்சரியப்பட எது உங்களுக்கு தூண்டுதலாக இருந்தது?” “எனது மாநிலத்தைச் சார்ந்த – இப்போது இந்தியாவின் தலைவராக இருக்கும் அந்நபர் என் சிலைகளுக்கு மாலைகளை அணிவித்து, என்னைப் பற்றி நல்ல விஷயங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.” “பாபுஜி, உங்கள் சிலைகளுக்கு மட்டுமல்ல. எனது சிலைகளுக்கும் கூட அப்படித்தான் செய்கிறார். நான் சொல்வதைக் கேட்டு என் மீது நீங்கள் பொறாமை கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்? ஹா ஹா ...” “உன் மீது எனக்கு பொறாமையா? இல்லவே இல்லை.. காலனியாதிக்கத்திலிருந்து நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கு நாம் இருவரும் நமது பங்களிப்பைச் செய்தோம்.” “அப்படியானால், உங்களுக்கு எது கவலையை அளிக்கிறது?” “என்னைக் கொன்றவர்களை போற்றுபவர் அவர். அவர்களது வன்முறை தத்துவத்தையும், ‘மற்றவர்கள்’ என அவர்களால் கருதப்படுபவர்களை விலக்கி வைக்கும் ஒரு சமூக அமைப்பையும் அவர் நம்புகிறார். எனது சொந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களை அவர் கொலை கூட செய்தார். தற்போது அவர் ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றுகிறார். அப்படி இருக்கும்போது ஏன் இத்தகைய பாசாங்குத்தனம்?” “அவருக்கும், அவரது கட்சிக்கும் அவர்களுக்கென்று சொந்தமாக எந்த ஹீரோவும் கிடையாது. மாறாக, அவர்கள் எங்களது முதுகில் குத்தினார்கள். எங்கள் நோக்கத்தை ஒருபோதும் அவர்கள் ஆதரிக்கவில்லை. இந்து ராஷ்டிரத்தை நிறுவிட ஆங்கிலேயர்களை மனமகிழ்வோடு இருக்கச் செய்யவே முயன்றார்கள். ” “கீழே பூலோகத்தில் உள்ள மக்கள் ஏன் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.” “இதைப் புரிந்து கொண்டு, சவால் விடுக்கும் மக்கள் அங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருப்பதோடு, அவர்கள் பிளவுபட்டும் உள்ளனர். இது அவருக்குத் தெரியும் என்பதோடு, அவர் இதைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறார். “ “அப்படியானால் அவர்கள் முட்டாள்கள் ஆவர். நமது போராட்ட இயக்கங்களிலிருந்து அவர்கள் எந்த படிப்பினையையும் பெற முடியாதா? ஆங்கிலேயர்கள் தங்களது பிரித்தாளும் சூழ்ச்சியில் வெற்றி பெற ஒருபோதும் நாம் அனுமதிக்கவில்லை.” “பிரச்சனையே அதுதான் பாபுஜீ. காலம் கடந்து போய்விடுவதற்கு முன் அவர்களை வழிநடத்தவும், கற்பிக்கவும் ஒரு வழியை நாம் கண்டுபிடிப்போம் என நான் நம்புகிறேன்.” “பகத்சிங்.. ஏற்கனவே காலம் கடந்துவிட்டது. அது உனக்குத் தெரியவில்லையா?” “எனக்கு அது தெரிகிறது. ஆனால், நீங்களும் இந்த நிலைக்கு கொஞ்சம் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.”
ஏன் அப்படி? இதன் மூலம் நீ என்ன சொல்ல விரும்புகிறாய்?” “மதத்தை அரசியலோடு கலக்க நீங்கள் முயற்சித்தீர்கள். ராம ராஜ்ஜியத்தையும், பசு பாதுகாப்பையும் ஆதரித்தீர்கள். ஆக இதற்கான அடித்தளத்தை நீங்கள் அமைத்தீர்கள்.” “ஆனால், நான் அந்த அளவுக்கெல்லாம் போகவில்லை. இஸ்லாமியர்களை இந்தியாவில் வைத்துக் கொள்ளவே நான் எப்போதும் விரும்பினேன். மேலும், அவர்கள் இந்துக்களிடமிருந்து பிரிக்கப்படுவதை ஒருபோதும் நான் விரும்பியதில்லை. இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையைக் கண்டித்து நான் உண்ணாவிரதம் இருந்தேன். அதனால்தான் என்னை அவர்கள் சுட்டுக் கொன்றார்கள்.” “பாபுஜி, அதை நான் மறுக்கவில்லை. நீங்கள் படுகொலை செய்யப்பட்டபோது நான் உயிரோடு இருந்திருந்தால், உங்கள் கொலைக்கு அவர்களை பழிவாங்கியிருப்பேன்.” “அப்படியா? என்னுடைய அகிம்சை வழிப் போராட்டத்தில் உனக்கு உடன்பாடில்லை என்றபோதும் கூடவா?” “ஏன் பழிவாங்கியிருக்க மாட்டேன்? லாலா லஜபதி ராய் அவர்களின் மரணத்திற்கு நான் பழி வாங்கியிருப்பேன் என்றால் உங்களுக்காகவும் நான் அதைச் செய்திருப்பேன். லாலா லஜபதி ராய் அவர்களது வைதீக மத நம்பிக்கைகள் காரணமாக நாங்கள் இருவரும் ஒருபோதும் ஒத்துப்போனதில்லை.” “ம்ம்ம்.. ஆனால், தற்போது ஏன் மக்கள் பிளவுபட்டு இருக்கிறார்கள்?” “பாபுஜி, அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால், தங்களை மிக நியாயமானவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களும் கூட சித்தாந்த அடிப்படையில் பிளவுபட்டிருக்கின்றனர். இதுவே எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது.” “எதைப் போன்று …?” “நாம் தற்போது விவாதித்தவற்றைப் போன்றதாகும். உங்களை மிகவும் மதிப்பதாகச் சிலர் கூறுகின்றனர். அதே நேரத்தில் வேறு சிலர் என் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். தற்போதைய சூழலில், நமக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும் பொதுவான தளத்தில் நாம் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட்டோம் என்பதை அவர்கள் பார்க்க வேண்டும்.” “நாம் மற்றொரு அவதாரத்தை உருவாக்கி, அதை கீழே பூலோகத்திற்கு அனுப்பி வைத்து மற்றொரு சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் மக்களை வழிநடத்தச் செய்ய ஏதேனும் வாய்ப்புள்ளதா?” “இது அறிவுபூர்வமானதாக இல்லையே..” “பகத்சிங், இத்தனை பிடிவாதமாக இருக்காதே. இந்தியர்கள் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர்கள் ஆவர். அவர்களை வழிநடத்த ஆன்மீகத் தலைவர்கள் அவர்களுக்குத் தேவை”. “நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனாலும் எனக்கு இது ஏற்புடையதாக இல்லை. நாம் பொருள் மற்றம் யதார்த்தமான அடிப்படையில் சிந்திக்க வேண்டும். வாதத்திற்காக கூட பார்த்தாலும், கேள்விகளை எழுப்பியதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் எழுப்பியதற்காகவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படும் அறிஞர்கள் எல்லாம் நீங்கள் சொல்லும் அவதாரங்களுக்கு குறைவானவர்கள் அல்ல”. “இளைஞனே, நீ சொல்வதை நான் கேட்கிறேன். நமது கருத்து வேறுபாடுகளை ஒத்துக் கொண்டு முன்னேறுவோம்”. “இப்போதைக்கு, நமது தார்மீகக் கருத்துக்களையும், கருத்து வேறுபாடுகளையும் தள்ளி வைத்துவிடலாம். அநீதிக்கு எதிராகப் போராட வெகுமக்களை மீண்டும் அணி திரட்டுவதற்கான வழிகளை நாம் கண்டறிய வேண்டும். இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற அவர்களுக்கு நாம் இருவருமே தேவை என நான் நம்புகிறேன். அம்மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க நமது பாரம்பரியம் இன்னும் அங்கு உயிரோட்டத்தோடு இருப்பதால் உண்மையில் நாம் அதிகம் எதுவும் செய்யத் தேவையில்லை”. “ஆனால், மனிதர்களின் பூலோகத்திலிருந்து இவ்வளவு தொலைவில் உட்கார்ந்து கொண்டு நம்மால் என்ன செய்ய இயலும்? “நான் முன்பே சொன்னதைப் போல், பூமியில் உள்ள மனிதர்களால் கட்டுப்படுத்தப்படும் ஓர் செயற்கை நுண்ணறிவு இடமாகும். இது பாசிஸ்டுகளால் முழுமையாகக் கைப்பற்றப்படுவதற்கு முன்பு, மாற்றப்பட வேண்டிய மனிதர்களை நாம் சென்றடைந்திட இதனைப் பயன்படுத்த முயற்சி செய்வது நல்லதாகும்.”