articles

img

சகிப்புத்தன்மையும் சாமர்த்தியமும் - பெரணமல்லூர் சேகரன்

சகிப்புத்தன்மையும்  சாமர்த்தியமும்

அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் ஒருவர் சகிப்புத்தன்மையைப் பற்றி விரிவாக மாணவர்களுக்குக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது ‘சகிப்புத்தன்மை மட்டும் போதாது சாமர்த்தியமும் வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார். மாணவன் மணிக்கு ஒரு சந்தேகம். ‘என்ன இவர் சகிப்புத்தன்மை என்றும் கூறுகிறார் அதே நேரத்தில் சாமர்த்தியம் வேண்டும் என்றும் சொல்கிறாரே ஒன்றும் புரியவில்லையே’ என்று குழம்பினான். ஆசிரியரிடம் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை கேட்டான் மணி.  ஆசிரியர் ஒரு தம்ளரில் அழுக்குத் தண்ணீரைக் கொண்டு வருமாறு மணியிடம் கூறினார். மணியும் அவ்வாறு எடுத்து வந்தான். அதை அனைத்து மாணவர்களும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆசிரியர் அவனிடம், “இப்போது நான் இந்த அழுக்குத் தண்ணீரை என் விரல் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அருவருப்பு இல்லாமல் என் நாக்கில் வைத்துக் கொள்வேன். அதுதான் சகிப்புத்தன்மை என்பது.” என்று கூறிவிட்டு அவ்வாறு செய்யவும் செய்தார். பின்னர், “எங்கே இதே போல நீயும் செய் பார்க்கலாம்” என்றார். உடனே மணியம் அதேபோல அவனது விரலைத் தண்ணீருக்குள் வைத்து அதனை அப்படியே தனது வாயிலும் வைத்தான். இதனைப் பார்த்த ஆசிரியர், “உன்னிடம் சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதை நான் புரிந்து கொண்டேன். ஏனென்றால் நீயும் என்னைப் போல அருவருப்பின்றி அழுக்குத் தண்ணீரில் விரல் நனைத்து அதனை உனது வாயிலும் வைத்துக் கொண்டாய். ஆனாலும் உன்னிடம் சாமர்த்தியம் இல்லை என்பதையும் நான் இப்போது புரிந்து கொண்டேன்.” என்றார். மாணவன் மணிக்கு ஒன்றுமே விளங்கவில்லை. மற்ற மாணவர்களுக்கும் தான்.  “எனக்குப் புரியும் படியாகக் கூறுங்கள்” என்றான் மணி. அதற்கு பதில் கூறிய ஆசிரியர், “அந்த அழுக்குத் தண்ணீரை நான் தொட்டது நடு விரலால். ஆனால் எனது வாயில் வைத்துக் கொண்டது ஆள்காட்டி விரலை. நீயோ நடு விரலால் தொட்டுக் கொண்டு அதே விரலையே வாயில் வைத்துக் கொண்டாய். அப்படியானால் உனக்கு சாமர்த்தியம் போதாது தானே” என்றார்.  இப்போது மணிக்கு மட்டுமல்ல. அனைத்து மாணவர்களுக்கும் விளக்கமாகத் தெரிந்து விட்டது. சகிப்புத்தன்மையோடு சாமர்த்தியத்தையும் கடைப்பிடித்து வாழ்க்கையில் வெற்றியைக் குவிக்க வேண்டும் என்று எண்ணினான் மணி.