ஒரு சுற்று... சொட்டு உயிர்...
நம்மிடம் என்ன சொல்லிவிட்டுப் போனது இந்த ஞாயிற்றுக்கிழமை யார் அனுப்பி வைத்தது திங்களை..? காதலிகளுக்கு கைக்குட்டைகளை மாறி மாறி பரிசளிப்பது போல அல்லது காதலிகளை மாற்றிக் கொள்வது போல நேற்றுண்ட வெடக்கோழி வாசம் மாறுவதற்குள் இன்றைய தயிர் வாசம் வீசுகிறது விடிகாலை வாசலருகே கிழமைகளுக்கும் வயசாகிறது சிறுவயதில் பார்த்த ஞாயிற்றுக்கிழமையின் கையில் இருந்தது அயிரை மீன் பிடித்த ஆறுகளும் தொபீர் என விழுந்து முங்கி எழுந்த தோப்புக் கிணறுகளும் இன்றுள்ள ஞாயிறுகளின் வயிறு வீங்கி இருக்கிறது மின்காந்த சுறா எலும்புகளால்.... நகரமுடியா உடலோடு வார நாட்களில் ஏறி பயணிக்கிறோம் மிக மிக களைப்பாகி விடுகின்றன நொடி முட்கள் விடுமுறை நாட்களில் சோம்பல் முறிக்கின்றன. கடிகாரம் காலத்தைத் தின்கிறது ஒரு சுற்றில் ஒரு சொட்டு உயிர் உதிர்கிறது ஓர் ஆண்டுக்கு ஒரு நரைமுடி என கணக்கிட்டு மொத்தமாய் வெள்ளையாய் பூத்து விடுகிறது அறுபதாம் ஆண்டு. காலத்தை நாம் கடத்துகிறோம் காலம் நம்மைக் கடத்துகிறது இந்த ஓயாத விளையாட்டைத்தான் வாழ்க்கை என கைப்பிள்ளை பொம்மையாய் பற்றிக் கொண்டிருக்கிறோம் பற்று விடச் சொன்ன பட்டினத்தார் சமாதி அருகே ஒரு சக்கரம் எத்தனை மைல்களைக் கடந்திருக்கும் சாலையில் எனிலும் சுற்று ஒன்றுதானே. உயிர் கூட ஒன்றுதான் உனக்கும் ஒரு பூரானுக்கும் கொள்ளளவு வேறுபாடு உண்டா என்ன?