‘இந்த இனப்படுகொலை நம் அனைவரையும் குற்றவாளியாக்குகிறது’
380 எழுத்தாளர்கள் வேதனை
ஹனீஃப் குரேஷி, சாடி ஸ்மித், இயன் மெக்வான், மரினா வார்னர், பென் ஒக்ரீ மற்றும் ஸ்காட்டிஷ் பென் உள்ளிட்ட 380 எழுத்தாளர்கள் அமைப்புகள் மீடியம் தளத்தில் ஒரு திறந்த கடிதத்தை வெளியிட்டுள்ளனர். இதில் பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களை ‘இனப்படுகொலை’ என்று அழைத்து உடனடி போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
கவிஞர் ஹிபா அபு நாடாவின் நினைவாக
ஒரு வருடம் ஏழு மாதங்களுக்கு முன்பு, பாலஸ்தீனக் கவிஞர் ஹிபா அபு நாடா இஸ்ரேலிய வான் தாக்குதல் களால் கொல்லப்பட்டார். அவரது கவிதையான “ஒரு நட்சத்திரம் நேற்று கூறியது” என்பதில், அவர் காசா மக்களுக்கு ஓர் அண்ட புகலிடத்தை கற்பனை செய்தார்: “ஒரு நாள், ஓ ஒளியே, முழு பிரபஞ்சத்தின் அனைத்து விண்மீன் கூட்டங்களிலும் எங்களுக்கு இடமில்லை யென்றால், நீ கூறுவாய்: ‘என் இதயத்தில் நுழையுங்கள், அங்கே நீங்கள் இறுதியாக பாதுகாப்பாக இருப்பீர்கள்.’” இந்த கவிதையை குறிப்பிட்டுள்ள எழுத்தாளர்கள், இஸ்ரேலுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
சர்வதேச அமைப்புகளின் அங்கீகாரம்
இஸ்ரேல் அரசாங்கம் கட்டுப்பாடற்ற கொடூரத்துடன் காசாவின் மீதான தாக்குதலை புதுப்பித்துள்ளது. இஸ்ரேலிய அமைச்சர்கள் பெசலேல் ஸ்மோட்ரிச், இட்டமார் பென் க்விர் ஆகியோரின் பொதுக் கூற்றுகள் வெளிப்படையாக இனப்படுகொலை நோக்கங்களை வெளிப்படுத்துகின்றன. காசாவில் நடப்பதை “இனப்படுகொலை” என்று விவரிப்பது இனி சர்வதேச சட்ட நிபுணர்களால் விவாதிக்கப்படுவதில்லை. அம்னெஸ்டி இன்டர்நேஷனல், மெடிசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ், ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கவுன்சில் மற்றும் பல நிபுணர்கள் காசாவில் இனப்படுகொலையை தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர்.
ஐ.நா நிபுணர்களின் கண்டனம்
40க்கும் மேற்பட்ட ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் சுதந்திர நிபுணர்கள் கூறுகின்றனர்: “அரசுகள் இது இனப்படுகொலையா இல்லையா என்று விவாதித்துக் கொண்டிருக்கும் போது, இஸ்ரேல் காசாவில் உயிர்களின் அழிவை தொடர்ந்து கொண்டிருக்கிறது. யாரும் விட்டு வைக்கப்படுவதில்லை - குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பாலூட்டும் தாய்மார்கள், பத்திரிகையாளர்கள், சுகாதார நிபுணர்கள், உதவி ஊழியர்கள் அல்லது பணயக்கைதிகள் என எவரும்.” மார்ச் 18, 2025 அன்று 24 மணி நேரத்தில் 600 உயிரிழப்புகள் பதிவானது, அவர்களில் 400 பேர் குழந்தைகள்.
இது ‘இனப்படுகொலை’ யே!
“இனப்படுகொலை” என்ற சொல் ஒரு முழக்கம் அல்ல. இது சட்ட, அரசியல் பொறுப்புகளை கொண்டுள்ளது. அக்டோ பர் 7, 2023 அன்று ஹமாஸ் செய்த அட்டூழியங்களை போர் குற்றங்கள் என்று அழைப்பது உண்மை என்பது போல், இன்று காசா மக்கள் மீதான தாக்குதலை இனப்படுகொலையின் அட்டூழியம் என்று பெயரிடுவதும் உண்மை என அந்த எழுத்தாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் “நாங்கள் பார்வையாளர் என்ற பொதுமக்க ளாக இருக்க மறுக்கிறோம். இது நமது காலத்தின் எழுத்தாளர்களாக நமது படைப்பாக்கத் தகுதி யைப் பற்றியது,” என்றும் கடிதம் கூறுகிறது. மூன்று அடிப்படை கோரிக்கைகள் கொல்லப்பட்ட கிட்டத்தட்ட 54,000 காசாவாசிகளுக்காக வும், உயிர் பிழைத்தவர்களுக்காகவும் எழுத்தாளர்கள் மூன்று கோரிக்கைகளை வைத்துள்ளனர்: 1. உடனடி உதவி: ஐ.நா மூலம் காசா முழுவதும் உணவு மற்றும் மருத்துவ உதவிகளின் கட்டுப்பாடற்ற விநியோகம். 2. பொருளாதார தடைகள்: இஸ்ரேலிய அரசாங்கம் போர்நிறுத்த அழைப்பை கவனிக்கவில்லையென்றால் இஸ்ரேல் மீது பொருளாதாரத் தடைகள். 3. விரிவான போர்நிறுத்தம்: அனைத்து பாலஸ்தீனர்களுக்கும் பாதுகாப்பு மற்றும் நீதி, அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளின் விடுதலை மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனக் கைதிகளின் விடுதலை. வெறுப்பை எதிர்க்கும் நிலைப்பாடு இந்த நிலைப்பாட்டை எடுப்பதில், எழுத்தாளர்கள் யூத-விரோதம் மற்றும் அனைத்து வகையான வெறுப்புக்கும் எதிரான தங்கள் முழுமையான எதிர்ப்பை வலியுறுத்தியுள்ளனர்.