... நேற்றைய தொடர்ச்சி
நாகாலாந்து- ஓர் எடுத்துக்காட்டு
நாடு முழுவதும் ஒரே சட்டம் என்ற ‘சீரான தன்மை க்கான’ தேவை குறித்து பிரதமரும், பாஜக தலைவர்களும் விரிவாகப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், பெண்களின் உரிமைகள் தொடர்பாக மிக கபடத்தனமான நாடகத்தை பாஜக நாகாலாந்தில் அரங்கேற்றிக் கொண்டிருந்தது. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நாகா மரபுவழி சட்டத் திற்கு எதிராக இருப்பதாக அதனை சில நாகா இனக் குழுக்கள் எதிர்த்து வருகின்றன. இதன் காரணமாக 2012ஆம் ஆண்டிலிருந்து அங்கு உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல்கள் நடைபெறவே இல்லை. ஆனால் இத்தகைய வியாக்கியானம் ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வந்தது என்றும், பெண்களுக்கு இத்தகைய இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிராக நாகா மரபுவழி சட்டத்தில் எதுவும் இல்லை என்றும் கூறி நாகா இனப் பெண்கள் தங்களது அமைப்பின் தலைமையில், நாடு முழுவதிலும் உள்ள பெண்கள் அமைப்புகளின் ஆதரவோடு 33 சதவீத இட ஒதுக்கீட்டை வலுவாகக் கோரி வருகின்றனர்.
இது தொடர்பான மனுவின் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சனையில் தனது வாக்குமூலத்தை வேண்டு மென்றே பதிவு செய்யத் தவறிய ஒன்றிய பாஜக அரசை கோபத்துடன் உச்சநீதிமன்றம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமர்சித்துள்ளது. இது பெண்களின் உரிமை கள் தொடர்பான தெளிவான பிரச்சனையாகும். “இஸ் லாமிய மகள்கள்” பற்றி பெருங்கவலை கொண்டுள்ள நமது பிரதமர், அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமை யான இடஒதுக்கீடு “நாகா இன மகள்களுக்கு” மறுக் கப்படுவது குறித்து வாய்மூடி மௌனியாக இருப்பது ஏன்? ஒன்றிய அரசு இதில் மௌனமாக இருப்பது ஏன்? இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இதே நாகா லாந்தில் பாஜகவை தனது கூட்டணியில் கொண்டு, அக்கட்சியின் தலைவரை துணை முதல்வராகக் கொண்டுள்ள புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசு, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மறுக்கும் தீர்மானத்தை நிறை வேற்றியுள்ளது. இது குறித்த விவாதத்தை பழங்குடி யின அமைப்புகளோடு நடத்த கூடுதல் கால அவகா சம் தேவை எனக் கூறி பாஜகவின் மாநிலத் தலைவர் டெம்ஜெம் இன்னா அரசின் செயலுக்கு ஆதரவு தெரி வித்துள்ளார். “இரட்டை நடைமுறை” என்பது எப்போ தெல்லாம் பாஜகவிற்கு வசதியானதாக இருக்கிறதோ அப்போதெல்லாம் அது சரியானதாகும். ஆனால், அது ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறி வைக்கும்போது ஒற்றைச் சட்டம் குறித்து பேசுகிறது.
நாகாலாந்தின் இந்த உதாரணம் எதை நிரூபிக்கி றது? முதலாவதாக, பெண்களின் உரிமைகளுக்கா கவே பொதுசிவில் சட்டம் கொண்டு வரப்படுவதாக சொல்லும் பாஜகவின் போலித்தன்மையை இது தோலுரித்துக் காட்டுகிறது. நாகா இன “மகள்கள்” கோருகிறபோதும், அவர்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை மறுப்பதன் மூலம் பெண்கள் மீதான ஆண்களின் உரிமைகளை அது ஏற்றுக் கொள்கி றது. இரண்டாவதாக, நாகாலாந்தில் மரபுவழி சட்டம் குறித்து ஆணாதிக்க சிந்தனையின் கண்ணோட்டத்தி லிருந்து வியாக்கியானம் செய்த அடிப்படைவாத சக்தி களோடு பாஜக உடனிருந்தது. மூன்றாவதாக, மாற்றம் ஏற்பட வேண்டுமெனில், சமூகத்தின் சரிபாதியின ரோடு – அதாவது, பெண்களோடு – பேச்சுவார்த்தை நடத் துவது அவசியமாகும் என்பதை இது காட்டுகிறது. குடும்ப சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மீது பழங்குடி யினத்தவருக்கு சிறப்பு பாதுகாப்பை அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவுகளை ஆதரிக்கும் அதே வேளையில், சமூகங்களுக்குள்ளே சீர்திருத்தங்கள் மூலம் பெண்களின் சம உரிமையை உத்தரவாதம் செய்ய செயல்படுபவர்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை அளிப்ப தோடு, ஊக்கத்தையும் அளிக்கிறது. முன்வைக்கப்படும் வாதம் என்பது மரபுவழிச் சட்டம் என்பது நீக்கப்பட வேண்டும் என்பதல்ல; மாறாக, அதில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதேயாகும்.
தனிநபர் சட்டங்களில் சீர்திருத்தமே உடனடித் தேவை
தனிநபர் மற்றும் மரபுவழி சட்டங்களில் சீர்திருத் தம் என்பது அவசரமாகத் தேவைப்படுகிறது. நாகா லாந்து பிரச்சனை காணப்படுவதைப் போன்று, பல்வேறு மக்கள் சமூகங்களில் அரசியல் செல்வாக் கோடு எந்தவொரு சீர்திருத்தத்தை மேற்கொள்வ தையும் எதிர்ப்பவர்களை பாஜகவும், அதன் அரசுக ளுமே ஆதரித்து வருகின்றன. தேவாலயங்கள் தொடர்பான சீர்திருத்தங்களைப் பொறுத்தவரையிலும் கூட, பழமைவாத கண்ணோட் டத்தை கொண்டிருப்பவர்களுடனேயே பாஜக உள்ளது. இஸ்லாமிய சமூகத்தினர் தொடர்பான சீர்திருத்தம் என்றால் மட்டுமே, பாஜகவும் அதன் அரசுகளும் தீவிர மாக அந்த சமூகத்தை குறி வைக்கின்றன. மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தத்தால் மதத் திற்கே ஆபத்து ஏற்படுவதாக அம்மதத்திற்குள் இருக்கும் பழமைவாதிகள் எதிர்ப்புக் கொடியை உயர்த்தி, அம்மாற்றத்திற்கு எதிராக அணிதிரட்டலை நடத்திட இது இடமளிக்கிறது. பாஜகவின் பெரும் பான்மை அரசியல் கட்டமைப்பு, மக்கள் சமூகங்க ளுக்குள்ளே உள்ள சீர்திருத்தவாதிகளை தற்காப்பு நிலைக்குத் தள்ளுகிறது என்பதும் உண்மையாகும்.
சீர்திருத்தத்திற்கான இஸ்லாமியப் பெண்களின் கோரிக்கையை செயல்படுத்த அச்சமூகத்தினுள் உள்ள அடிப்படைவாதிகள் மறுத்துள்ளனர். அதுமட்டு மின்றி, இஸ்லாமிய சமூகத்தினரின் பிரதிநிதிகளாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசி யல் சக்திகளும் சீர்திருத்தத்திற்கான தேவை குறித்து ஒருபோதும் பேசியதில்லை. மாறாக, பாரபட்ச நிலையை வலுப்படுத்த பாஜகவின் பெரும்பான்மை வாதத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளன. இத்தகைய பிற்போக்குத்தனமான நிலைபாடுகள் பாஜகவிற்கு அதன் குறிப்பான பிரச்சாரத்திற்கே உதவுகிறது. அனைத்து சமூகங்களைச் சார்ந்த பெண்களுக்கும் சமமான உரிமைகள் என்ற மிக முக்கியமான, அவசரமான பிரச்சனையிலிருந்து திசை திருப்பும் பல்வேறு போக்குகளை எதிர்கொள்வது மிகவும் அவசியமாகும். வரலாற்று ரீதியாக இது எதிர்க்கப்பட வேண்டிய பகுதிகளாகும். ஏனெனில், இறுதி பகுப்பாய்வில் இது பெண்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் குடும்பத்திற்குள் பெண்களின் தாழ்ந்த நிலைமையில் அடங்கியுள்ளது. அடிப்படைவாத சக்திகளுடன் சமரசம் செய்து கொள்ள முடியாது. ஆனால், சீர்திருத்த நடைமுறை முன்னோக்கி நகர் வதை உறுதி செய்திட பொருத்தமான நடைமுறை கள் நிறுவப்பட வேண்டும். தனிநபர் சட்டத்தில் உள்ள பெண்களுக்கு எதிரான பழக்கங்களுக்கும் நடைமுறைகளுக்கும் முடிவு கட்ட வேண்டுமென்ற இஸ்லாமியப் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகங்களின் பெண்களின் கோரிக்கை க்கு அரசியல் ஆதரவு அவசியமாகும்.
கோவா சிவில் சட்டம்
கோவா சிவில் சட்டம் பற்றி பாஜக நிறைய பேசு கிறது. அம்மாநிலத்திற்கான பொது சிவில் சட்டத்தை உருவாக்கிட முயற்சிகள் மேற்கொண்டதற்காக சமீபத்தில் உத்தர்கண்டில் பொதுக்கூட்டம் ஒன்றில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கோவா மாநில முதல்வரை பாராட்டினார். “கோவா மாநிலத்தில் ஒரு பொதுசிவில் சட்டம் இருக்கலாம் என்றால் ஏன் இந்தியாவின் இதர மாநிலங்களில் இருக்கக் கூடாது” என்று அவர் கேள்வி எழுப்பினார். இத்தகைய கேள்வியை எழுப்புவதற்கு முன் அவர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
சொல்லப் போனால், ஏன் இத்தகைய சட்டம் செயல்படாது என்பதற்கு கோவா சிவில் சட்டம் சிறந்த தொரு உதாரணம் ஆகும். கோவா சட்டத்தின் சில பகுதிகளில் பொது சட்டங்கள் பொருந்தினாலும் கூட, பல்வேறு சமூகங்களுக்கான பல வேறுபாடுக ளுடனான குடும்பச் சட்டங்களின் தொகுப்பாகவே அது உள்ளது. உதாரணமாக, திருமண சான்று குறித்து தனியான விதிகளை கத்தோலிக்க கிறிஸ்துவர்கள் கொண்டுள்ளனர். மேலும், தேவாலயங்களில் திரு மணம் செய்து கொள்பவர்களுக்கு சிவில் சட்டத்தின் கீழ் உள்ள விவாகரத்து என்பதிலிருந்து விலக்களிக்கப் படுகிறது. இஸ்லாமியர்கள் பலதார திருமணத்தை செய்து கொள்ள முடியாத அதே நேரத்தில், ஒரு சில சந்தர்ப்பங்களில் இருதார திருமணங்களை செய்து கொள்ள இந்து ஆண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். “யூதர் அல்லாத இந்து சமூகங்களின் பழக்கவழக் கங்கள் மற்றும் பயன்பாடுகள் சட்டம்” என்ற கோவா சட்டத்தின் தனிப் பிரிவில் இது இடம் பெற்றுள்ளது. இதன் அம்சங்கள் மிகவும் பிற்போக்கானவையாகும். ஓர் இந்து மனைவி தனது 25வது வயதிற்குள் குழந்தை ஒன்றை பெற்றெடுக்கத் தவறினாலோ அல்லது தனது 30வது வயதிற்குள் ஆண் குழந்தையொன்றை பெற்றெடுக்கத் தவறினாலோ, அவளது இந்து கணவன் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து கொள்ளலாம். இந்து மதத்தைச் சார்ந்த ஒரு பெண் ஒழுக்கக்கேடான முறையில் தனது கணவ னல்லாத ஆணோடு உடலுறவு கொண்டால், அதன டிப்படையில் அவளை விவாக ரத்து செய்திடலாம். ஆனால், இப்படி ஓர் இந்து ஆண் நடந்து கொண்டால் விவாகரத்திற்கு அதைக் காரணமாக முன்வைக்க இயலாது. இத்தகைய காரணங்களால்தான் கோவா சட்டத்தை உதாரணமாக பாஜக சொல்லிக் கொண்டே இருக்கிறதா? அங்கு ஆட்சியதிகாரத்தில் அவர்கள் தான் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால், பெண்க ளுக்கு எதிரான இத்தகைய அம்சங்கள் எல்லாம் இன்னமும் ஏன் சட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன?
சமத்துவத்திற்கான பெண்களது உரிமைகளில் மையமாக உள்ள கேள்விகள்
தங்களது சொந்த சமூகங்களுக்குள்ளேயும், அனைத்து பெண்களுக்குமான சமூக மற்றும் சட்ட சீர்திருத்தங்களுக்காகவும் அனைத்து சமூகங்களை யும், அவற்றின் அமைப்புகளையும் சார்ந்த பெண்களே பல்வேறு தியாகங்களைப் புரிந்துள்ளனர். சமமான சட்ட உரிமைகள் என்பன போன்ற பெண்களின் மிக முக்கியமான பிரச்சனையை மதவெறி மயமாக்கும் பாஜகவின் நடவடிக்கையையும், பொது சிவில் சட்டம் என்ற பெயரில் சமூகத்தை பிளவுபடுத்திட அது மேற் கொள்ளும் முயற்சிகளையும் நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். பல்வேறு சமூகங்களைச் சார்ந்த பெண்களது சம உரிமைகள் என்பதே மையமான கேள்வியாகும். ‘ஒரே மாதிரி’ என்பதை ‘சமத்துவம்’ என்பதோடு பொருத்திப் பார்க்க இயலாது. அத்தகைய சமத்துவத் தன்மைக் கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல 21வது சட்டக் கமிஷனின் அறிக்கையை அடிப்படையாக கொள்ளலாம். இந்த அறிக்கையை விவாதிக்க பாஜக அரசு ஏன் மறுக்கிறது என்பதை நாட்டு மக்களிடம் அது தெரிவிக்க வேண்டும்.
தமிழில் : எம்.கிரிஜா