articles

img

காத்தவராயன் பிறந்த உடனே கழுமரமும் முளைத்தது...

காப்பீட்டுத் துறையில் 1950களில் நடைபெற்ற மோசடிகளும் நிறுவனங்கள் திவாலாகி மக்கள் சேமிப்பு வீணானதும்நாம் நன்கு அறிந்ததே. குறிப்பாக தனியார் காப்பீட்டுநிறுவனங்கள் எத்தனை வகையான மோசடிகளில் ஈடுபட்டன என்பதை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அன்று நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கியதும் இன்று  மாநாடுகள், வெளியீடுகள், தலைவர்கள் உரைபோன்றவை மூலம் பொதுமக்களிடம் கொண்டு செல்வதும்வரலாறு. அரசாங்கங்கள் பல்வேறு சட்டங்கள் கொண்டுவந்தும் அதிலுள்ள ஓட்டைகளாலும் அரசியல்வாதிகள் - அதிகாரிகள் கள்ளக் கூட்டினாலும் நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு மக்களின் பணத்தையும் பங்குதாரர்களின் பணத்தையும் சுருட்டிக்கொண்டு நொடித்தல்/ திவாலாதல்நாடகங்களை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. இந்தப் பின்னணியில் நொடிப்பு மற்றும் திவாலாதல் குறித்து சில விவரங்களைப் பார்க்கலாம். 

முதலில் நொடித்தல் மற்றும் திவாலாதல் என்றால் என்ன?
ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ அவர்/அது பெற்றகடன் தவணைகளை தீர்க்க முடியாதபோது அவர்/அதுநொடிப்புக்குள்ளாகிறது (insolvency). அந்த நொடிப்பைதீர்மானம் செய்து அதை தீர்ப்பதற்காக நீதிமன்றம் ஆணைகளைப் பிறப்பிக்கும்போது அது திவாலாகிறது (bankruptcy). ‘நொடிப்பு’ சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. அதில் சில:

• மாகாண நகர நொடிப்பு சட்டம் 1909 – சென்னை,பம்பாய், கல்கத்தா நகரங்களுக்கு பொருந்தக்கூடியது.

• மாகாண நொடிப்பு சட்டம்  1920 - மாகாணங்களின் எல்லாப் பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியது. 

• கம்பெனி சட்டம் 1956

• நலிந்த தொழில் நிறுவனங்கள் (சிறப்பு விதிகள்) சட்டம் 1985

• வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் வசூல் சட்டம் 1993

• நிதி சொத்துக்கள் பிணையப்படுத்துதல் மற்றும் மறுகட்டமைப்பு சட்டம் 2002 

• நொடிப்பு மற்றும் திவால் விதிகள் 2016இதேபோல் பல்வேறு குழுக்களும் அமைக்கப்பட்டன.

• திவாரி கமிட்டி – 1981

• நீதியரசர் வி.பி.பாலகிருஷ்ண எராடி கமிட்டி – 1999

• என்.எல்.மித்ரா கமிட்டி – 2001

• ஜே.ஜே. இரானி கமிட்டி – 2005

• திவால் சட்ட சீர்திருத்த குழு – 2014-15 (OVERVIEW OF INSOLVENCY LAWS IN INDIA INCLUDING CORPORATE INSOLVENCY (caaa.in)

நொடித்தலுக்கான காரணங்கள் என்று சொல்லப்படுவன:

 • சந்தை - மாறிவரும் நிலைமைகளை உணராதது. ஒளிப்படங்களிலிருந்து டிஜிட்டல் படங்களுக்கு மாறியது. இதில் தவறிய கோடக் நிறுவனம் திவாலானது.  

• மோசமான கடன்கள் – வாடிக்கையாளர்களிடமிருந்து வர வேண்டிய பணம் சரியான நேரத்திற்கு கிடைக்காதபோது சிறு நிறுவனங்கள் பாதிக்கப்படும். 

• நிர்வாகத் திறமையின்மை – தேவையான திறன்கள் பொறாமை, விவேகமற்ற கணக்கியல், தகவல் அமைப்புபோதாமை 

• நிதி – நீண்ட கால நிதி இல்லாமை, அதிக செலவில்கடன் வாங்குவது, வாங்கிய கடனுக்கேற்ற இலாபம் ஈட்டாதது, மற்றவர்களின் திவால்களினால் பாதிப்பு 

பிற காரணங்கள் – அதிகப்படியான நிர்வாக செலவுகள்  (OVERVIEW OF INSOLVENCY LAWS IN INDIA INCLUDING CORPORATE INSOLVENCY (caaa.in) இந்தக் காரணங்கள் எல்லாம் பாடப் புத்தகங்களுக்கானது போல தெரிகிறது. ஆனால் இந்திய நொடிப்புமற்றும் திவால் கழகம் (insolvency and bankruptcyboard of india - IBBI) 21.07.2021 அன்று நிறுவனங்களுக்கான நொடிப்பு சட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளது. இதன் நோக்கம் “நிறுவன நொடிப்பு தீர்வு செயல்பாடுகளில் கட்டுப்பாடு, வெளிப்படைத்தன்மை, பொறுப்புடமை ஆகியவற்றை மேம்படுத்துவது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (பிடிஐ செய்தி - தி இந்து ஆங்கில நாளிதழ் 22.07.2021) அந்த செய்தியிலிருந்து நாம் தெரிந்துகொள்வது கார்ப்பரேட் நிறுவனங்கள் எத்தனை வகையான  மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்பதே. 

ஒருதலைபட்ச பரிமாற்றங்கள் (PREFERENTIALTREATMENT); குறைமதிப்பீடு பரிமாற்றங்கள்(undervalued transactions); கந்துவட்டிக் கடன்கள் (extortionist loans); மோசடி வணிகம் (fraudulant transactions); தவறான வணிகம் என்றுபட்டியலிடப்பட்டுள்ளது.இவையெல்லாம் தவிர்க்கப்படவேண்டிய செயல்பாடுகள் என்று இதற்கு முன்னாலிருந்த சட்டங்களிலும் விதிகள்இருந்தன. இதிலெல்லாம் ஈடுபட்டார்களா என்பதை ஒருதீர்வு வல்லுநர் (resolution professional -RP) கண்டறிந்து தீர்வு மையத்திடம் சமர்ப்பிக்க வேண்டுமாம்.  மகாராஷ்டிரா மாநிலத்தில் என்ரான் நிறுவனம் மூடப்பட்டதிலும் ஹைதராபாத்தில் சத்யம் கம்ப்யூட்டர் திவாலானதிலும் முன்னணி தணிக்கை நிறுவனங்கள் உடந்தையாய் இருந்தன. ஆக இப்பொழுது சொல்லப்பட்டிருக்கும் வல்லுநர் எந்த அளவிற்கு நேர்மையாய் இருப்பார்? 

ஒரு நிறுவனம் திவாலாவதற்கு இப்பொழுது அரசாங்கம்சொல்லியிருக்கும் ஒருதலைபட்ச பரிமாற்றங்கள், குறைமதிப்பீடு பரிமாற்றங்கள், கந்துவட்டிக் கடன்கள், மோசடிவணிகம், தவறான வணிகம் ஆகியவற்றை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டாமா? இவற்றில் ஒன்றே ஒன்றைப் பார்க்கலாம்:குறை மதிப்பீட்டுப் பரிமாற்றங்கள் – ஒரு நிறுவனக்கடனாளி சிக்கலான நேரங்களில் எளிதாக ரொக்கப்பணம்பெறுவதற்காக தனது சொத்துகளை தானமாகவோ அல்லது கணிசமாகக் குறைந்த தொகைக்கு விற்பது. இத்தகைய பரிமாற்றங்கள் கடன் கொடுத்தவர்களை ஏமாற்றவேண்டும் என்கிற எண்ணத்துடன் செய்யப்படாமலிருக்கலாம். ஆனால் அது கடனாளியின் சொத்து மதிப்புகளை குறைத்து கடன் கொடுத்தவர்களுக்குக் கிடைக்கக் கூடிய சதவீதத்தை குறைத்துவிடும்.(Undervalued Transactions under IBC - S.S Rana &Co (ssrana.in)

திவால் நிலையிலுள்ள சில நிறுவனங்களையும் பார்க்கலாம்:ரிசர்வ் வங்கியின் தகவலின்படி 2017இல் மொத்த வராக்கடன்களில் 25% 12 நிறுவனங்களால் ஏற்பட்டுள்ளது. இவைதிவால் நடவடிக்கைகளுக்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை தவிர 488 நிறுவனங்கள் ஆறுமாத காலத்திற்குள் தங்களது கடன்களை மறு சீரமைக்க வேண்டும்; இல்லையெனில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்திற்கு முன் நிறுத்தப்படும். ரிசர்வ் வங்கியால் அடையாளம் காணப்பட்ட நிறுவனங்கள்:
பூஷன் ஸ்டீல் (44478 கோடி), லான்கோ இன்ஃபரா டெக்(44364கோடி), எஸ்ஸார் ஸ்டீல் (37284கோடி), பூஷன் பவர்&ஸ்டீல்(37,248 கோடி), அலோக் இண்டஸ்ட்ரீஸ் (22,075 கோடி),ஆம்டெக் ஆட்டோ (14,074 கோடி), மாநெட் இஸ்பட் எனர்ஜி (12,115 கோடி), எலெக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் (10,273 கோடி), எரா இன்ஃபரா என்ஜீனியரிங் (10,065கோடி), ஜய்பீ இன்ஃபரா (9,635 கோடி), ஏபிஜி ஷிப்யார்ட்(6,953 கோடி), ஜ்யோதி ஸ்ட்ரக்சர்ஸ் (5,165 கோடி)

(www.financialexpress.com/industry/banking-finance/indias-bad-loans-here-is-the-list-of-12-companies-constituting-25-of-total-npa/9033)

உபரி உழைப்பை உறிஞ்சும் மோசடி
புராணத்தில் ‘காத்தவராயன் பிறந்த உடனே கழுமரமும் முளைத்தது’ என்பார்கள். அரசகுமாரியைக் காதலித்தைத் தவிர எந்த குற்றமும் புரியாத அடித்தள சமுதாயத்தைச் சேர்ந்த காத்தவராயனை மேல்தட்டு சமூகம் கழுமரத்தில் ஏற்றி அழித்தது. அதற்கு நேர்மாறாக முதலாளித்துவம் பிறந்த உடனே கழுமரம் போல மோசடிகளும் கூடவேபிறந்தன. அதன் அடிப்படையே தொழிலாளியின் உபரி உழைப்பை உறிஞ்சும் மோசடி. ஆனால் அதற்கும் மேலாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அரசாங்கம், சட்டங்கள், நீதிமன்றங்கள் ஆகியவற்றை அமைத்துக்கொண்டு அந்த விதிகளையே மீறும் மோசடிகளை அதுநடத்திக்கொண்டிருக்கிறது. அதற்கு இந்த நொடித்தல் மற்றும் திவால் விதிகள் எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

கட்டுரையாளர் : இரா.இரமணன், எல்ஐசி அதிகாரி - பணி ஓய்வு