articles

img

நீ - மொசைக் குமார்

நீ?

மனிதர்கள் எவ்வளவாய் தவறாக புரிந்து கொள்கி றார்கள்! நல்லவர்கள் கெட்டவர்களாக தெரிவதும், கெட்டவர்கள் நல்லவர்களாக தெரிவதும் அவரவர் பார்வையைப் பொறுத்தது. சில நேரங்களில் பிறரை குறித்த நம்முடைய புரிதல்களே புரியாத புதிராகத்தான் இருக்கிறது. மாற வேண்டியவர்கள் மற்றவர்களல்ல! நாம்தான்;. யாருடைய பார்வை எப்படி இருந்தால் என்ன? அவர்களின் எண்ணங்களின்படியா நாம் இருக்கிறோம். நம்முடைய தோற்றத்திற்கு மதிப்பையும் மரியாதையையும் கூட்டு வதற்கும் குறைப்பதற்கும் இவர்கள் யார்? சக மனிதர்களை மனிதர்களாக நேசிக்கத் தெரியாதவர்கள். நாம் நாமாக இருக்கும்போது இவர்களை நினைத்து நாம் ஏன் புலம்ப வேண்டும், மனச்சோர்வும் அடைய வேண்டும்? இப்படித் தத்துவமான வார்த்தைகள் மதியமிருந்து என்னை நெருடாய் நெருடிக் கொண்டேயிருக்கிறது. மூக்குக் கண்ணாடியும், உற்று நோக்கிய பார்வையுமாய் பேக்கரி உரிமையாளரின் முகம் சதா வந்து வந்து மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது. சமீப நாட்களாக ‘வடைகள்’ சாப்பிடுவதை குறைத்துக் கொண்டேன். வாயுத் தொல்லை அவ்வப்போது இடுப்பு, முதுகு, கழுத்து, நெஞ்சுப்பகுதி என ஆங்காங்கே பிடிப்பை யும் வலியையும் கொடுத்து விளையாட்டு காட்டுகிறது. நாற்பது வயதிற்கு மேல் போனாலே எண்ணெய் உணவு களை குறைக்கச் சொல்லி ஆளாளுக்கு அறிவுறுத்து கிறார்கள். எனினும் டீ சாப்பிடுவதை நிறுத்த இயலாது. பார்க்கும் வேலை அப்படி. ஒரு கட்டிடத் தொழிலாளிக்கு அதுவும் இல்லையென்றால் எப்படி? இடம் சூழல்களுக்கு ஏற்றவாறு டீ வாங்கிவந்து சாப்பிடுவதும், ஆட்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் பக்கத்திலிருக்கும் கடைகளுக்கு சென்று வரு வதும் வழக்கம். இன்றும் அப்படித்தான் புதியதாக டைல்ஸ் ஒட்ட ஆரம்பித்த கட்டிடத்தில் நானும் நிமிந்தாளும் மட்டுமே வேலை செய்ததால் காலை பதினொன்றரை மணிக்குமேல் அருகாமையில் பிரதான சாலையோரமாய் இருந்த பேக்கரி ஓன்றிற்கு டீ சாப்பிட சென்றிருந்தோம். நீளவாக்கில் நான்கைந்து ஸ்டீல் டேபிள்கள். இருக்கை கள். ஓன்றிரண்டு நபர்கள் டீயும் சிகரெட்டுமாய் மிதந்து கொண்டிருந்தனர். இவ்விடம் புகைபிடிக்க தடை செய்யப்பட்ட  பகுதி என்ற பதாகையும் மதிப்பாரற்று தொங்கிக்கொண்டி ருந்தது. சகல தின்பண்டங்களும் கண்ணாடிப் பேழை களுக்குள் கிடக்க சில வடைகள் மாத்திரம் தட்டிலே கிடத்தி மேஜையின்மேல் இருந்தது. “ண்ணேய் வடைய எடுத்துக்கங்க...” நிமிந்தாளிடம் சொல்லிவிட்டு எனக்கு பத்துரூபாய் பிஸ்கட்  வாங்கிக் கொண்டேன். சாப்பிட்டுமுடிய ஆளுக்கொரு டீ. ‘’ண்ணேய் ரெண்டு வடை, ரெண்டு டீ. ஒரு பத்துரூவா பிஸ்கட்’’ கல்லாவின் முன் நூறு ரூபாயை நீட்டியபடி நின்றேன். அங்கே நின்றிருந்தவார் பேக்கரியின் உரிமையாளரோ என்னவோ! ரூபாயை வாங்கியபடி என்னையே கூர்ந்து பார்த்தார். எதையோ யோசிக்கிறார்போல! அந்தப் பார்வை என்னுள் பல உணர்வுகளை கிளரியது. ‘’என்ன சாப்டீங்க?’’ மீண்டும் கேட்கிறார். மறுபடியமாய் சொல்லுகிறேன். அப்போதும் திருப்தி அடையாதவரைப் போல என்னையே பார்க்கிறார். வடைத் தட்டையும் நோட்டம் விடுகிறார்.  ‘ஒருவேளை வடைகளை கூட எடுத்து தின்றுவிட்டு குறைவாக சொல்லுகிறோம் என எண்ணுகிறானோ!’ அந்தக்கணம் வயதிற்கான மரியாதை யை தர மறுத்து மனசு ஒருமையில் புழுங்கியது. எரிச்சலுற்றவனாய் சற்று வேகமாகவும் சத்தமாகவும் திரும்பவும் சொல்லுகிறேன். மீதத் தொகையை எந்திரமாய் எடுத்தத் தருகிறார். ‘’என்னன்ணே கடக்காரே பெரிய சந்தேகப் புத்தியா இருப்பாம்போலயே! ரெண்டு டீ வடைன்னு சொல்றேன். மூஞ்சியவே உத்து உத்து பாக்குறயான். கடந்தபின் நிமிந்தாளிடம் ஆதங்கத்தை கொட்டினேன். ‘’அது வேற ஒன்னுமில்லய்யா.. கைலியுங் கிய்லியுமா வேர்க்க விருவிருக்க போறோம்ல நம்மல பாத்தவொடனே என்னமோ நெனச்சுப்புட்டயாம் போல! பேன்ட் சட்டன்னு டீசன்டா போனா சொல்றத கேட்டுறுப்பயான்.’’ நிமிந்தாள் புதிதாக ஒரு கருப்பொருளை முன்வைத்தார். எனக்கும் ‘அப்படி இருக்குமோ’ எனத் தோன்றியது. சில சமயங்களில் நானும் அதை அனுபவத்தில் கண்டி ருக்கிறேன். பேன்ட் சட்டையில் செல்லும்போது வாங்க சார்,  போங்கசார், உக்காருங்க சார் என மரியாதை கொடுக்கிற வர்கள். அதேநேரம் கைலி பனியன் சட்டையில்  வேலையில் இருக்கும்போதோ வெளியிடங்களுக்கு போய் வரும் போதோ ‘’போ, வா, என்னாது’’ என சற்று மதிப்பை குறைத்துத்தான் கூப்பிடுகிறார்கள். ‘நண்டு மார்க் லுங்கி’ விளம்பர கதாநாயகனைபோல் மிடுக்காய் வந்தால் மட்டும்தான் மதிப்பார்கள் போல! கைலியோடு மட்டுமல்ல சாதாரணமாக வேட்டி சட்டை யுடன் கூட ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோருக்கு செல்ல முடி கிறதா? திரையரங்கம், ஜவுளிக்கடை என்று எங்காவது செல்லத்தான் முடிகிறதா! ‘ஆள்பாதி ஆடைபாதி’ என்பதை தவறாக புரிந்துகொண்டு செயல்படுகிறார்களோ என்னவோ! கடந்தமாதம் நண்பன் ஒருவன் நகரில் நவீனப் பொழிவுடன் கட்டி ஓடிக்கொண்டிருக்கும் ‘சினிமாஸ்’-க்கு  ‘தல’ படம் பார்க்கப் போயி திருப்பி விடப்பப்பட்டு தலையிலேயே அடித்துக்கொண்டிருந்தான். ‘போயி ட்ரெஸ் மாத்திட்டு அடுத்த ஸோ-விற்கு வா’ என அனுப்பிவிட்டார்களாம். நகரில் பிரபல ஜவுளிக்கடைகள் ஒன்றிரண்டு இருக்கிறது. அவைகளும் விதி விலக்கல்ல. ஒரு புத்தாடை  எடுக்கச் செல்லும்போது நாம் அணிந்திருக்கும் உடை களைப் பார்த்தே தரத்தை அவர்களாகவே நிர்ணயித்து விடுகிறார்கள். ‘’அத எடுங்க இத எடுங்க’’ என நம் விருப் பத்தை தெரிவிக்கும்போதே தட்டிக்கழிக்கிறார்கள். ‘’ அது  கொஞ்சம் காஸ்ட்லி’’ என புறக்கணிக்கிறார்கள். சேலை செக்சனிலும்  அந்த கூத்துத்தான். எடுக்கவரும் பெண்களின்  நடை உடை அலங்காரம் அணிகலன்களைப் பொருத்தே மரியாதையும் பொருமையும் கூடிக் குறைகிறது. பட்டுச்சேலை பக்கம் உட்காருவதற்கு நாற்காலி கூடவே டீ-ஸ்நாக்சும். மற்ற செக்சனில் பச்சை தண்ணீர்கூட பக்கத்தில்  கிடையாது. வாடிக்கையாளர்களின் தரத்தையும் பொருளாதா ரத்தையும் நிர்ணயிப்பதற்கு இவர்கள் யார்? சேல்ஸ்மேனாக சேல்ஸ்கேர்ள்-ஆக இருப்பவர்களும் ஒரு தொழிலாளர்கள்தானே. பாமரனுக்கு இவர்களே மதிப்பளிக்காவிட்டால் எப்படி! கட்டிடத் தொழிலாளியான நான் காலையில் வரும்போதும் மாலையில் வீட்டிற்கு செல்லும்போதும் பேன்ட்  சட்டையில்தான். வேலை செய்யும் இடங்களில் அதற்கு வசதியாக கைலியும்- டீ சர்ட்டும். அங்கேயும் சில முரன்பாடுகள்! வடமாநில தொழிலாளர்கள் ஏராளமாய் இங்கே தஞ்சம் புகுந்திருக்கின்றனர். அவர்களை பெரும்பாலும் பேன்ட் சட்டை அல்லது ட்ராக் பேன்ட்-ல்தான் பார்த்திருக்கிறேன். ஆனாலும் யாரும் அவர்களை ஆச்சரியமாய் பார்ப்ப தில்லை. என்னைப் போன்ற உள்ளு_ர்காரர்களை பார்த்தால் மட்டும் போதும். எங்கிருந்துதான் அப்படி வார்த்தைகள் எல்லாம் வருமோ...  ‘’அடேயப்பா என்னய்யா பெரிய இஞ்சினேரு மாதிரி வர்றே’’ ‘’ம்... அப்பரும்.. பார்ரா. அந்நியன் விக்ரம் மாதிரி அடிக்கடி கெட்டப்ப மாத்துரத!’’ ‘’நம்ம பாக்குற வேலைக்கி இந்த பந்தாவல்லாம் தேவையா.. பேன்ட் சோக்கு நமக்கு தேவதானா’’   ஆனால் அதற்கு நேர் மாறாக வெளியிடங்களில் பேன்ட் சட்டைக்கு மரியாதையும், சார் பட்டமும், கைலிக்கு கடைசி பெஞ்சியும், வா போ உக்காரு எந்திரி என்ற சட்டமும் பாய்கிறது. உடையில் என்ன இருக்கிறது! மனுஷனை மனுஷனாக பார்க்க தவறுகிறார்கள். ஆப்பிரிக்க பழங்குடி யின மக்களும், காட்டுவாசிகளும், உழவர்களும் பேன்ட் சட்டை சுடிதாரிலா இருக்கிறார்கள். அவர்களது கலாச்சாரம் அது. எந்த உடையாயினும் மனுஷன் மனுஷி என்ற நினைப்பைத்தவிர வேறேதும் அவர்களுக்கு தோன்றுவதாக எனக்குத் தெரியவில்லை. பேக்கரி உரிமையாளரின் உற்று நோக்கிய பார்வையும், மறுபடியும் மறுபடியுமான கேள்வியும் என்னை என்னென் னவோ சிந்திக்க வைத்துவிட்டது. மாலை மணி நான்கு முப்பதை தாண்டிவிட்டது. ‘’என் னய்யா போயி டீ சாப்புட்டு வந்துருவமா’’ நிமிந்தாள் கேட்டார். ‘’வாங்கணே போயிட்டு வந்துருவோம். பக்கத்துல வேற கடை எதுவும் இல்லையா’’ ‘’ம்.. எதுக்குய்யா. காலம்பர குடிச்ச டீ நல்லாத்தான இருந்துச்சு’’ ‘’டீ நல்லாத்தே இருந்துச்சு . ஆனா கடைக்காரே ஆள் சரியில்லையே. ஆவெ ஆளும் பார்வையும்’’ மற்ற டீக்கடைகள் இன்னும் சற்று தூரமாய் இருந்தன. போய் வருவது தாதமாகும். ‘’ப்ச்.. வாங்கண்ணே அவெங் கடைக்கே போயிட்டு வருவோம். நாளைக்கெல்லாம் வண்டிய எடுத்தட்டு அங்கிட்டு போயிரனும்ணே’’ மாலையில்... ‘ஒரு பஞ்சி, ரெண்டு டீ, ஒரு புட்டிங் கேக்’ அதே ஆள். இப்போதும் நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு என்னையே ஒரு தினுசாகப் பார்த்தார். ‘என்னாச்சு இந்தாளுக்கு’  சத்தம் உயர்த்தி ‘’ண்ணேய்.. ரெண்டு டீ.. ஒ..’’ சொல்லி முடிப்பதற்குள் இடைமறித்தார். ‘’நீ...? முருகேசன்ணே மகனா...!’’ ‘’....................’’ கோமாவில் கிடந்தவன் பல வருடங்கள் கழித்து நினைவு திரும்பியதைப் போல, ஒரு வினாடி எண்ணற்ற நினைவுகள் எனக்குள் புகுந்தது. பல ஆண்டுகளுக்குமுன்  அப்பாவிற்கு நெருக்கமாக இருந்து பின் பிரிந்துபோன அவரின் நண்பர் ஒருவர் என் மனதினுள் மின்னலாய் தோன்றினார். ‘’ஆம்மான்ணே.. நீங்க..? ண்ணேய்! பஸ்டாண்டு மிச்சர்கடை மாரியப்பனா நீங்க.. எப்டி இருக்கீங்கண்ணே. ஆளே அடையாளந் தெரியலையேண்ணே’’