என் குழந்தை நன்றாக தான் படிக்கிறான். ஆனால், தேர்வில் மதிப்பெண் குறைவாக இருக்கிறது - இப்படி பெரும்பாலான பெற்றோர்கள் சொல்வதுண்டு. இதற்கு காரணம், கவனக் குறைபாடும், ஞாபக மறதியும் தான். அந்த காலத்தில், வகுப்பறையில் மட்டுமே பாடங்களை கவனித்து, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற குழந்தை கள் இருந்தார்கள். ஆனால் இன்று, நாள் முழுக்க வகுப்பறையில் பாடங்களை கவனித்தாலும், மணிக்கணக்கில் டியூஷன் சென்று படித்தாலும், தேர்வில் பாஸ் மார்க் எடுப்பதற்கே சிரமப்படுகிறார்கள். இந்த கவனக் குறைபாட்டிற்கும், ஞாபக மறதிக்கும் சில காரணங்கள் உண்டு. பிறக்கும்போதே மூளை வளர்ச்சிக் குறை பாடு இருக்கக் கூடிய குழந்தைகளுக்கு இயல்பாகவே கவனிக்கும் திறன் குறைவாக இருக்கும். அவர்களின் ஐக்யூ அளவு சாதாரணக் குழந்தைகளுடன் ஒப்பிடும் போது வேறுபடும். இவர்களை வழிநடத்த சிறப்புக் கல்வி முறை உள்ளது. அதன் மூலம் இந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வி அறிவு கொடுத்து, வாழ்க்கையில் முன்னேற்றப்பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். சில தவறான பழக்கவழக்கங்கள், மூளை செயல்படும் திறனை மழுங்க வைக்கிறது. குழந்தைகளிடம் ஏதேனும் தீய பழக்கங்கள் உள்ளதா என பெற்றோர் கள் கண்காணித்தாலே இப்பிரச்சனையை சரி செய்துவிடலாம். கடுமையாக கண்டிக் காமல், புரியவைத்து அப்பழக்கத்தில் இருந்து மீட்டுக் கொண்டுவர முடியும்
அதற்கான முயற்சியை பெற்றோர்கள் தான் எடுக்க வேண்டும். குழந்தைகளை அடிமைப்படுத்தும் மொபைல் கேம்கள், கல்வி வளர்ச்சியைவிட பொழுது போக்கு வளர்ச்சி வேகமாக வளர்ந்து கொண்டிருக் கிறது. அவற்றில் ஆன்லைன் கேம்களுக்கு பிரதான இடமுண்டு இதற்கு அடிமையாகி விட்டால், கேமிங் டிஸ்ஆர்டர் கூட உருவாக லாம். அதிக வண்ணங்கள், அதிக ஆக்சன் காட்சிகள், அதிக சத்தம் என்று குழந்தை களை ஈர்க்கக் கூடிய, அடிமைப்படுத்தக் கூடிய அம்சங்கள் கேம்களில் நிறைய உள்ளது. எனது குழத்தை தினமும் 30 நிமிடம் தான் கேம் விளையாடுகிறது என்று சில பெற்றோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோம். கேம்கள் உளவியல் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. சரியாக 28வது நிமிடத்தில், புதிது புதிதாக ஒரு ஆயுதத்தை அந்த கேம் கொடுக்கும். தொடர்ந்து விளையாடச் சொல்லும். பெற்றோர்களின் பேச்சு அங்கே எடுபடாது. முதலில் கேம் விளையாடுவதை ஊக்கப்படுத்தக்கூடாது. அடம்பிடித்தால், ஆக்சன் கேம்களைத் தவிர்த்து, மூளைக்கு வேலை கொடுக்கக்கூடிய கேம்களை விளையாடலாம்.
அமெரிக்க உளவியல் சங்கத்தின் அறிவுறுத்தலின்படி, ஒரு குழந்தையின் ஒரு நாள் ஸ்கிரீன் டைம் வெறும் 2 மணி நேரம் மட்டும் தான். அதிலும் 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு ஒரு மணி நேரம் தான். மொபைல் போனில் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். அங்கே தோன்றுபவை எல்லாம் குறுகிய கால நினைவுகளில் மட்டுமே இருக்கும். தொடர்ச்சியாக வீடியோக்கள் பார்க்கும் போது, மூளையும் குறுகிய கால நினைவுகளுக்கு பழகிக்கொள்ளும். பாடங்களைப் படிப்பது நீண்டகால நினைவு களுடன் தொடர்புடையது. இதனால், மொபைல் போன் உள்ளிட்ட கேட்ஜெட்களில் அதிக நேரம் செலவிடும் குழந்தைகளால், பாடங்களை சரியாக படித்து மனதிற்குள் பதிய வைக்க முடியாது. தேர்விலும் நல்ல மதிப்பெண் எடுக்க முடியாது. கேட்ஜெட்களின் பயன்பாட்டை குறைப்பது நல்லது. தூக்கமின்மை பெரும்பாலான குழந்தை களிடம் பார்க்க முடிகிறது.
இதற்கு பெற்றோர்களின் அலட்சியமே காரணம். தந்தை இரவு 11 மணிக்கு தான் வருவார். அதுவரை காத்திருந்து தூங்கச் செல்வது தவறானது. சரியாக தூங்கவில்லை என்றால், பள்ளிக்கூடத்தில் மதிய உண விற்குப் பிறகு தூக்கம் வரும். 8 மணி நேர தூக்கம் உங்கள் மூளையை புத்துணர்ச்சி யோடு வைத்திருக்கும். உற்சாகமாக பாடங்களைப் படிக்க முடியும். சில பெற்றோர்கள் என்னுடைய குழந்தை டிப்ரசன்ல இருக்கு என்பார்கள். இது பெரிய வார்த்தை. பொதுவாக ஒரு குழந்தை சோகத்தில் இருக்கலாம். சின்ன சின்ன கவலையில் இருக்கலாம். பக்கத்தில் அமர்ந்து பேசினால் பிரச்சனை முடிந்துவிடும்.
தொடர்ச்சியான தோல்வி கள், தீராத பிரச்சனை, தினமும் அம்மா, அப்பா சண்டை போன்ற காரணங்களால் ஒரு குழந்தை மன அழுத்ததிற்குள் போகலாம். சில வீடுகளில், வரவு செலவு கணக்கு தொடர்பான உரையாடலில் குழந்தை களை சேர்த்துக்கொள்கின்றனர். நல்ல விஷயம் தான். அதே நேரம், கடன் பற்றியும், பணப் பற்றாக்குறை பற்றியும் நீங்கள் பேசும் போது, அக்குழந்தை வருத்தப் படும். உங்கள் கடன் விவரத்தை குழந்தை யிடம் சொல்லி என்ன சாதித்துவிடப் போகி றீர்கள்? எனவே, பெற்றோர்கள் தங்களின் பிரச்சனைகளை பிள்ளைகளின் மனதிற் குள் செலுத்துவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து குறைபாடு கூட மூளை வளர்ச்சியை பாதித்து, கவனக் குறை பாட்டிற்கும், ஞாபக மறதிக்கும் வழி வகுக்கும். கொழுப்பு மற்றும் சர்க்கரை மட்டுமே இருக்கும் துரித உணவுகளை தவிர்த்துவிட்டு, விட்டமின்கள் கொண்ட கீரை, காய்கறி, பழங்களைச் சாப்பிட்டால் நம்முடைய மூளை ஆரோக்கியமாக இருக்கும். பாடங்களை எளிமையாக புரிந்து படித்து, தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க முடியும். பொதுவாக மன அழுத்தத்தின் போது கார்டிசால் என்ற ஹார் மோன் உடலில் சுரக்கும். இது, ஞாபக சக்தி மற்றும் கவனிக்கும் திறனை குறைத்து விடும். எனவே, குழந்தைகள் மீது பொறுப்புணர்வோடு இருப்பது பெற்றோர்களின் கடமை ஆகும்.
இன்றைய காலகட்டத்தில் கல்லூரியில் சேர்வது முதல் வேலை கிடைப்பது வரை போட்டிச் சூழல் உருவாகிவிட்டது. கவனக் குறைபாடும், ஞாபக மறதியும் இருக்கக் கூடிய குழந்தைக்கு, போட்டிச்சூழல் கஷ்ட மாக இருக்கலாம். எனவே, பெற்றோர் கள், தங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கிய மான சூழலை உருவாகிக் கொடுப்பதும், நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுப்பதுமே கவனக் குறைபாட்டினை களைவதற்கான சிறந்த வழியாகும்.