அதிமுக வீர வரலாற் றின் பொன்விழா எழுச்சி மாநாடு ஆகஸ்ட் 20ந்தேதி மதுரையில் நடைபெற உள்ளது. ஓபிஎஸ் வகையறாவிடமிருந்து எடப்பாடி பழனிசாமி வகையறா கட்சியைப் கைப்பற்றிய பிறகு நடைபெறும் மாநாடு என்பதாலும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடை பெறும் மாநாடு என்பதாலும் அந்தக் கட்சி எந்த திசையில் செல்லப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாநாட்டிற்கான சமையல் வேலைகள் இப்பொழுதே துவங்கிவிட்டதாக அண்டா, குண்டா படங்கள் வெளியாகின்றன. சமையல் கலைஞர்கள் மற்றும் உதவியாளர்கள் மட்டும் பத்தாயிரம் பேர் சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. 300 ஏக்கரில் பார்க்கிங் வசதி, 65ஏக்கரில் மெகா பந்தல், 1.25லட்சம் நாற்காலிகள் என மாநாட்டு ஏற்பாடுகள் தடபுடலாக நடப்பதாக செய்திகள் வெளியாகிறது
மாநாட்டின் முகப்பில் ஓங்கி உயர்ந்த மலை போன்று கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறு கிறது. ஏற்கெனவே மதுரையில் யானை மலை, திருப்பரங்குன்றம் உட்பட பல மலைகள் உள்ளன. ஆனால், தனது நடை பயணத்தின் போது தொடர்ந்து அதிமுகவை சீண்டி இழிவுபடுத்தி வரும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இந்த மாநாடு என்ன பதில் தரப்போகிறது என்பதுதான் கேள்வி. ஜெயலலிதாவை ஊழல் பேர்வழி என்றும் அவரது ஆட்சியில் தான் ஊழல் உச்சத்தை தொட்டது என்றும் பாஜக அண்ணாமலை வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தார். இதை கண்டித்து அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மாநாட்டிலும் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்படுமா?. மண்டைக்காடு கல வரத்தைத் தொடர்ந்து ஆர்எஸ் எஸ் ஒரு ஆபத்தான அமைப்பு என அதிமுகவை உரு வாக்கிய எம்ஜிஆர் எச்சரித்தார். முதல்வராக இருந்த எம்ஜி ஆர் தில்லிக்கு சென்ற போது அவரிடமே சென்று வம்பு வளர்த்த னர் ஆர்எஸ்எஸ்-காரர்கள். அதைத்தொடர்ந்துதான் அவர் இவ்வாறு கூறினார்.
பாஜக பாணியில் ஆடு, கோழி பலியிடத் தடை சட்டம், மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்த ஜெயலலிதா தேர்தலில் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த சட்டங்களை வாபஸ் பெற்றுக் கொண்டார். சென்னை மெரீனா கடற்கரை கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தாம் செய்த பெரிய தவறு என்றும் இனி ஒரு போதும் அத்தகைய தவறை செய்யமாட்டேன் என்றும் ஜெயலலிதா சூளுரைத்தார். எனினும் அந்தக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைத்தார். எனினும், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியா இந்த லேடியா என்று அவர் தமிழக மக்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு காரணம் பாஜகவோடு ஏற்பட்ட முரண்பாடே ஆகும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதே பாஜக அதிமுகவை தின்று செரிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டது. அம்மையாரின் மறைவைத் தொடர்ந்து அதிமுகவை பல துண்டுகளாக உடைத்தது. பாஜகவின் சிலிப்பர் செல்லான துக்ளக் குருமூர்த்தி சொல்லித்தான் தர்மயுத்தத்தை தாம் துவக்கியதாக ஓபிஎஸ் வெளிப்படையாக ஒத்துக்கொண்டார். பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரது கையையும் அப்போதைய ஆளுநர் வித்யாசாகர் ராவ் சேர்த்து வைத்தார். அதிமுகவை நான்கு பிரிவுகளாக பின்னர் பிரித்துவிட்டதும் பாஜகதான்.
அதிமுக ஒரு மாநிலக் கட்சி என்பதை மறந்து ஆட்சியில் இருக்கும் வரை பாஜகவின் தப்புத்தாளங்களுக்கு ஆட்டம் போட்டு வந்தது. அப்போதுதான் ஆட்சியில் தொடர முடியும் என்பதற்காக ஒன்றிய பாஜக அரசின் தவறான சட்டங்களைக் கூட அதிமுக இரண்டு கைகளையும் தூக்கி ஆதரித்தது. மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக அதிமுக வாக்களித்தது. இதை ஆதரித்து கிராமம் கிராமமாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என எடப்பாடியார் கூறினார். விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்தின் காரணமாக அந்தச் சட்டங்களை கொண்டு வந்த மோடியே வாபஸ் வாங்கிக் கொண்டார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆத ரித்து மக்களவையில் அதிமுக வாக்களி த்தது. ஆனால் மாநிலங்களவையில் எதிர்த்து வாக்களித்தது. தற்போது நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அனைத்து மக்கள்விரோதச் சட்டங் களுக்கும் அதிமுக ஆதரவளித்துள்ளது. குறிப்பாக மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் தில்லி நிர்வாகத் திருத்த மசோதா விற்கும் அதிமுக ஆதரவளித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மோடி அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது அதிமுக மோடிக்கு முரட்டு முட்டாக கொடுத்தது.
ஆனால் தமிழ்நாட்டில் அதிமுகவை காலி செய்யும் வேலையைத்தான் பாஜக தொடர்ந்து செய்து வருகிறது. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை மிரட்டினார். பின்னர் அடக்கி வாசித்தாலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதிமுகவை இழிவுபடுத்த அவர் தயங்குவதில்லை. பாஜகவுக்கு தொடர்ந்து பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தால் அதிமுக சொந்த காசிலேயே சூனியம் வைத்துக் கொள்கிறது என்றுதான் அர்த்தமாகும். நீட் தேர்விலிருந்து விலக்கு கேட்டு அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என். ரவி நீட் விலக்கு மசோதாவிற்கு இப்போதும் ஒப்புதல் தர மறுத்து அடம்பிடிக்கிறார். ஆனால் ஆளுநர் ரவியைக் கண்டித்து அதிமுக ஒரு வார்த்தை பேசுவதில்லை. அவர் தேநீர் விருந்திற்கு அழைத்தால் முதல் ஆளாக ஆஜராகிவிடுகிறார்கள். மாநில உரிமைகளுக்காக அதிமுகவின் மதுரை மாநாடு குரல் கொடுக்கப் போகிறதா அல்லது பாஜகவின் பசிக்கு இரையாகப் போகிறதா என்பதுதான் மதுரை வளையங்குளம் மாநாடு எழுப்பும் வலுவான கேள்வி.