ஐவி.நாகராஜன் நினைவாற்றல் என்பது தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும்போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும். நினைவாற்றல் அதிகம் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கையும் அதிகமாக இருக்கும். பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். எனினும் உரிய நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் சிலர் தவிப்பார்கள். இவ்வாறு தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்தி உடனடியாக நினைவுக்குக் கொண்டு வரமுடியாததையே ஞாபக மறதி என்கின்றோம்.
மேலும் இன்றைய உலகில் குழந்தைகள் போட்டி நிறைந்த உலகிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். போட்டிகளும், கல்வி மீதான அழுத்தமும் குழந்தைகளின் உலகைச் சுருங்கச் செய்துவிட்டது என சொல்லலாம். இதனால் ஞாபக மறதி ஏற்பட்டு நினைவாற்றல் திறன் குறைகின்றது. கல்வி என்ற கற்றல் சார்ந்த விஷயங்களைக் கடந்து இன்று அனைவரின் வாழ்க்கையின் எல்லா நகர்வுகளுக்கும் நினைவாற்றல் அவசியமானதாக உள்ளது. ஆனாலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வரும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக ஞாபக சக்தி குறைபாடு காணப்படுகின்றது. நினைவாற்றல் குறைவதற்குப் பல காரணங்கள் அடிப்படையாக அமைந்துவிடுகின்றன. குறிப்பாக மூளை வளர்ச்சி குறைவு, மன அழுத்தம், மனப்பதற்றம் போன்ற பல காரணங்களைச் சொல்லலாம். எனினும் பொதுவாகச் சில எளிய வழிமுறைகளை மேற்கொள்ளும்போது சிறந்த நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளமுடியும். மனிதனின் நினைவாற்றலுக்கும், மனதை ஒருநிலைப்படுத்துதலுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். நாம் மனதை எந்த அளவிற்கு ஒரு நிலைப்படுத்தி குறித்த விஷயத்தில் கவனம் செலுத்துகின்றோமோ அந்தளவிற்கு அது மனதில் பதிந்துவிடும். எனவே, நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கான முதற்படியாகச் கவனச் சிதறல்களுக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைச் சரி செய்து மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.
யோகாசனம், தியானம் போன்றவை மூலமாக மனதை ஒருநிலைப்படுத்த முடியும். அது மட்டுமல்லாது மன அழுத்தம், மனப்பதற்றம் போன்றவையும் இவை மூலம் குறைந்திடும். ஆரோக்கியமான மூளையில் தகவல்களைப் பதியவைத்து நினைவாற்றலை பலப்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் நாம் மூளைக்கு சில பயிற்சிகளைப் அளிக்க வேண்டும். அதாவது, குறுக்கெழுத்துப் போட்டி. எண்புதிர் கணக்கு, அயல் மொழிகளைக் கற்றல் போன்ற சில பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வதன் மூலமும் சிறந்த நினைவாற்றலைப் பெற முடியும். நினைவாற்றலை வளமாக்குவதில் நம் உணவு முறைக்கும் பங்கு உண்டு. நமது நினைவாற்றலில் சேமித்த விஷயங்களைத் தேவையான நேரத்தில் எடுத்துக்கொள்ள உணவால் கிடைக்கின்ற சத்துகள் மூளைக்கு உதவுகின்றன. எனவே, நம் நினைவாற்றலை அதிகப்படுத்தும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை காலை உணவைத் தவிர்க்காமல் குறைவான அளவிலாவது எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களை உண்ணுதல், வல்லாரை, தூதுவளை போன்ற கீரை வகைகளை உணவாக எடுத்துக் கொள்ளும்போது நினைவாற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. பொதுவாக, நாம் எந்த அளவுக்குப் பயிற்சி செய்கிறோமோ
அந்த அளவுக்குத் தகவல்களை நினைவுபடுத்தும் திறன் வலுவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அதேசமயம் ஒரு மாணவரின் நீண்ட கால நினைவகத்தில் சேமிக்கப்பட்டு நாளுக்கு நாள் தக்கவைக்கப்பட்டாலும், அது எப்போதும் அப்படியே இருக்கும் என்பதற்கு இது உத்தரவாதம் அளிக்காது. பயன்படுத்தப்படாத நினைவுகள் தொலைந்து போகலாம் அல்லது மீட்டெடுக்க முடியாமல் போகலாம். ஆகவே கற்றலை மதிப்பிடுவதற்கும் கற்றுக்கொள்வதற்கும் தகவலைப் பயன்படுத்தி பயிற்சி செய்வது அவசியம். உங்கள் கற்றல் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட பாடங்களுடன் அட்டவணையைக் தயார் செய்து கொள்ளுங்கள். அதன்படி பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். அந்த வகையில் கையால் எழுதும் பயிற்சி உங்கள் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கும் கற்றலை எளிதாக்குவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். தட்டச்சு என்று வரும்போது, காகிதத்தில் எழுதுவதைவிட வேகமானது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர் அல்லது விரிவுரையாளர் குறிப்புகளைக் கட்டளையிடுவது போல, தட்டச்சு செய்வதன் மூலம் நீங்கள் சொல்லப்படும் வார்த்தைகளில் அதிகமானவற்றை பதிவேற்றலாம். ஆனால் கையெழுத்தைப் பொறுத்தவரை செயல்முறை சற்று கடினமானதாகவும் மெதுவாகவும் இருக்கும். அதேசமயம் அது உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமைந்து நினைவாற்றலைப் பலப்படுத்தும். ஆகவே கற்றதை நினைவில் நிலை நிறுத்த எழுத்துப்பயிற்சி மிகச்சிறந்த வழிமுறையாகும்.