articles

img

மே நன்னாளை முதன்முதலில் கொண்டாடிய முன்னோடி - புலவர் பா.வீரமணி ,அறங்காவலர், சிங்காரவேலர் சிந்தனைக் கழகம்

சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் பலதுறைகளில் முன்னோடியாக விளங்கியவர். தமிழகத்தில் முதன் முதலில் டார்வினின் கொள்கையை விளக்கியவர் அவர்; உளவியலை முதன் முதலில் அறிமுகம் செய்தவரும் அவரே; லாப்லசின் வானவியல் கோட்பாட்டை அறிமுகம் செய்தவரும் அவரே; கார்ல் மார்க்சின் கொள்கையை முதலில் விளக்கியவரும் அவரே; அறிவியல் சிந்தனைகளைத் தமிழில் தெளிவுற எழுத முடியும் என்பதற்கு வழிகாட்டியாக இருந்தவரும் அவரே; காங்கிரசுப் பேரியக்கத்தில் தொழிலாளி-விவசாயிகளுக்காக முதன் முதலில் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தவரும் அவரே; சென்னை நகரசபையில் 1925இல் பதவியேற்கும்போது, ‘‘கடவுள் சாட்சியாகப் பதவியேற்கிறேன் என்றநிலை இருந்தபோது, என் மனச்சான்றின் படி பதவி ஏற்கிறேன்’’ என்று முதன் முதலில் பதவி ஏற்றவரும் அவரே; அதே சபையில் ஆங்கிலத்தில் பதவி ஏற்பதை விடுத்து முதன் முதலில் தமிழில் பதவி ஏற்றவரும் அவரே; பள்ளிப்பாடங்களில் சமயங்களைப் பற்றியோ போர்களைப் பற்றியோ பாடங்கள் அமைக்கக் கூடாதென்று தீர்மானம் கொண்டு வந்தவரும் அவரே; மூட நம்பிக்கைகளை விஞ்ஞான அடிப்படையில் மறுத்து எழுதிய மூலவரும் அவரே; 1925ஆம் ஆண்டில் கான்பூரில் இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தைத் தோற்றுவித்த போது அதனைத் தொடங்கி வைத்துத் தலைமையுரை ஆற்றியவரும் அவரே; இந்தியாவில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அவர் முன்னோடியாக இருந்ததோடு இந்தியாவில் மே தினத்தை முதன் முதலில் 1.5.1923இல் கொண்டாடியவரும் அவரே ஆவார்; வேறு சில நிலைகளிலும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார்; அவர் அவ்வாறு இருந்ததால் தான் பாரதிதாசன் ‘‘சிங்காரவேலரைப் போல் எங்கேனும் கண்டது உண்டோ?’’ என்றும் கவிதை இசைத்தார்.

முதல் தொழிற்சங்கம்

இந்தியாவில் திட்டமுறைப்படி முதன் முதலில் உருவாக்கப்பட்ட (27.4.1918) தொழிற்சங்கம், சென்னை மாகாணத் தொழிற்சங்கமேயாகும் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவர்; இந்தச் சங்கத்தில் வாடியா தலைவராகவும், திரு.வி.க. துணைத்தலைவராகவும் இருந்தனர். அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி இருந்ததாலும், சிங்காரவேலர் தீவிர சோவியத்து ஆதரவாளராக இருந்ததாலும், அச்சங்கத்தில் அவருக்குப் பதவி அளிக்க அவர்கள் அஞ்சினர்; அச்சங்கம் சமயச் சொற்பொழிவுகளையும், பஜனைப் பாடல்களையும் நடத்திக் கொண்டு இருந்தது. தொழிலாளர்களின் உரிமைகளுக்குப் போராடுவதை விடுத்து, அவர்கள் சமயப் பணிகளில் செயல்பட்டனர். இந்நிலையில் சிங்காரவேலர் அவர்களின் செயல்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டி, அவர்களோடு ஒருங்கிணைந்து செயலாற்றி அவர்களுக்குப் போராட்ட உணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கினார். 21.10.1920 முதற்கொண்டு பி அண்டு சி மில் வேலை நிறுத்தப் போராட்டம் ஆறு மாதக்காலம் தொடர்ந்து நடந்தபோது, சிங்காரவேலரின் பங்கு மிகப்பெரிது; போலீஸ் தடியடியும், துப்பாக்கிச் சூடும், கருங்காலிகளின் சோடாபாட்டில் வீச்சும் நடந்தபோது, களத்தில் முன்னின்று போராடியவர் அவர். தொழிலாளர் ஊர்வலத்தின் போது காவல்துறை அதிகாரி துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, ஊர்வலத்தைக் கலைந்து செல்லுமாறு கூறியபோது, முன்னே சென்று ஊர்வலத்தைத் தொடர்ந்து நடத்தியவர் அவர்.

முன்னணிப்படை

துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் இறந்தபோது, ஊர்வலத்தை நடத்தி நீதி கேட்டுள்ளார். சிங்காரவேலரின் போராட்ட உணர்வைத் திரு.வி.க. தம் வாழ்க்கை வரலாற்றில் குறித்திருப்பது நோக்கத்தக்கது. வேலை நிறுத்தம் பல்வேறு வேண்டாத காரணங்களால் தோல்வியுற்றாலும், அதனை எண்ணித் தொழிலாளர்கள் சோர்ந்து விடாமல்இருக்க, அவர்களை அணுகி விளக்கியும், பேசியும் எழுச்சியையும், துணிவையும் அளித்தவர் அவர். சமுதாயத்தின் ஏற்றத் தாழ்வைப் போக்கும் சமத்துவ ஆட்சியை அமைக்க உதவும் முன்னணிப் படையே தொழிலாளி வர்க்கம் என்பதைச் சரியாக உணர்ந்து செயல்பட்டவர் அவர்; தொழிலாளர்கள் பால் கொண்ட பேரீடுபாட்டால் தான், கயாவில் 1922ஆம் ஆண்டில் நடந்த காங்கிரசு மாநாட்டில் ‘தோழர்களே’ என விளித்துப் பேசியதோடு, ‘‘உலகப் பொதுவுடைமை இயக்கத்தின் சார்பாக வந்துள்ளேன்’’ என்று கூறித் தொழிலாளர்களையும் விவசாயிகளையும் சுதந்திரப் போராட்டத்தில் இணைத்துப் போராடுவதோடு, அவர்களின் முன்னேற்றத்திற்கான சரியான திட்டத்தையும் காங்கிரசு வகுக்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்; தமது பேச்சினை அச்சிட்டு எல்லோர்க்கும் வழங்கியுள்ளார். அவரது உரையில் நியாயம் உள்ளது என்பதை உணர்ந்த காங்கிரசு மேலிடம், சிங்காரவேலர் உள்ளிட்ட எழுவர் கொண்ட தொழிலாளர் நலக் குழுவை அமைத்தது. இக்கூட்டத்தில் தான் எஸ்.ஏ.டாங்கே சிங்காரவேலரை முதன் முதலில் நேரில் சந்தித்தார்.

தொழிலாளி - விவசாயி கட்சி

பொதுவுடைமை இயக்கம் இந்தியாவில் தோன்றுவதற்கு முன்னரே அவர் மூன்றாம் அகிலத்தின் யோசனைப்படி, தமிழகத்தில் 1.5.1923  மே நாள் அன்று இந்தியத் தொழிலாளி-விவசாயக் கட்சியைத் தோற்றுவித்துள்ளார்; அந்நாளில் தான் இந்தியாவிலேயே முதன் முதலாகச் சிறப்பாக மே நன்னாளைச் சிறப்பாகக் கொண்டாடி உள்ளார். அன்று காலையில் தம் வீட்டில் கொடியேற்றி, அரசியல் தலைவர்களையும், தொழிலாளர் தலைவர்களையும், தொழிலாளர்களையும் அழைத்து விருந்தளித்துள்ளார். இளைஞர்களுக்கும், சிறார்களுக்கும் இனிப்பு வழங்கியுள்ளார்; மாலையில் உயர்நீதிமன்றத்தின் எதிரே உள்ள கடற்கரையில் ஒரு கூட்டத்தையும், திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தையும் சிறப்பாக நடத்தியுள்ளார். திருவல்லிக்கேணிக் கடற்கரைக் கூட்டத்திற்கு, கிருஷ்ணசாமி சர்மா தலைமை வகிக்க, சுப்பிரமணிய சிவாவும், சங்கரலாலும் உரையாற்றி உள்ளனர்; தலைமை உரைக்குப்பின் எம்.பி.எஸ்.வேலாயுதம்,தொழிலாளி-விவசாயி கட்சி தொடங்கப்பட்டதன் காரணங்களை விளக்கி, சிங்காரவேலர் வகுத்த கட்சித் திட்டத்தைப் படித்துக் காட்டியுள்ளார்.

தொழிலாளி - முதல் பத்திரிகை

உயர்நீதிமன்றம் கடற்கரைக் கூட்டத்தில் சிங்காரவேலர் தலைமையேற்றுப் பேருரையாற்றிப் பின்னர் இந்தியத் தொழிலாளர்- விவசாயி கட்சியைத் தோற்றுவித்து, அதன் செயல் திட்டங்களை விளக்கிய பின்னர், ‘தொழிலாளி’ என்ற பெயரில் மாதம் இரு முறை இதழையும், ‘‘Labour and Kissan gazettee’’ என்ற ஆங்கில இதழையும் (மாதம்இருமுறை) தொடங்கியுள்ளார். தமிழகத்தில் தொழிலாளி- விவசாயிகளைக் குறித்து வர்க்கக் கண்ணோட்டத்தில் முதன் முதலாகத் தமிழில் வெளிவந்த இதழ் ‘தொழிலாளி’ என்ற இதழேயாகும். சிங்காரவேலர் இதிலும் ஒரு முன்னோடியே ஆவர்; அவ்விதழின் முக்கியத்துவம் குறித்தும், உள்ளடக்கச் சிறப்புக் குறித்தும் ‘சுதேசமித்திரன்’ நாளிதழ் 24.10.1923 அன்று பாராட்டிக் கருத்துத் தெரிவித்துள்ளது. இதனைப் போன்ற இந்தியத் தொழிலாளி-விவசாயி கெசட் என்ற ஆங்கில இதழ் வெளிவந்ததும், அவ்விதழையும் மே தினக் கொண்டாட்டம் குறித்தும் எம்.என்.ராய் பெர்லினிலிருந்து வெளியிட்ட ‘‘இந்திய விடுதலை முன்னணிப்படை’’ (Vanguard of Indian Independence) என்ற இதழில் பாராட்டி15.6.1923 அன்று கட்டுரை எழுதியிருந்தார்; அதில் ஒரு பகுதியைக் கீழே காணலாம்: ‘‘எம்.சிங்கார வேலுவை ஆசிரியராகக் கொண்ட இந்தியக் கம்யூனிசத்தின் மாதமிரு முறை இதழாகிய ‘தொழிலாளர்- விவசாயி கெசட்டின் முதல் இதழின் பிரதிகளைப் பெற்றோம். அந்த ஏட்டின் கொள்கையாவது, தொழிலாளர், விவசாய தொழிலாளர் ஆகியோரது சுதந்திரத்துக்காகவும், உலகத் தொழிலாளர்களின் ஒருமைப்பாட்டிற்காகவும் அது பாடுபடும். இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காகவும் அது பாடுபடும். எல்லா நாடுகளின் எல்லாத் தொழிலாளரும், எல்லாக் காலங்களிலும் மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருப்பதற்கும் பாடுபடும். இதுவொரு மாபெரும் பணியாகும். புதிய போராட்டத் தோழனுக்கு எங்களது மனமார்ந்த வரவேற்பை அளிக்கிறோம். இந்தியப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தில் அது சிறப்பான பங்கினை ஆற்றுமென நாங்கள் நம்புகிறோம்’’.

எம்.என்.ராயின் நம்பிக்கைக்கு ஏற்ப, சிங்காரவேலர் இறுதிவரை தொழிலாளர்களுக்காகப் போராடிக் கொண்டே இருந்தார். பி அண்டு சி மில் போராட்டம், காரக்பூர் ரயில்வே தொழிலாளர் வேலைநிறுத்தம், நாகப்பட்டினம் தென்னிந்திய ரயில்வே வேலைநிறுத்தம், சென்னை பர்மாஷெல் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியவற்றில் பெரும் போராளியாகப் போராடி உள்ளார். நாகப்பட்டினம் ரயில்வே போராட்டத்தில் அவருக்கு 10 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. பிறகு தண்டனை குறைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுக்குப்பின் விடுதலை செய்யப்பெற்றார்; பர்மாஷெல் எண்ணெய்க் கம்பெனி வேலை நிறுத்தத்தில் ஒரு வெள்ளை அதிகாரி, தொழிலாளர்களைப் பயமுறுத்தி, ‘‘இது எண்ணெய்க் கிணறு, எளிதில் தீப்பிடித்துக் கொள்ளும் ஜாக்கிரதை’’ என்று மிரட்டி உள்ளார். அப்போது அருகிலிருந்த சிங்காரவேலர் அவரைநோக்கி, ‘‘தொழிலாளர் உணர்ச்சி, எண்ணெயைக் காட்டிலும் விரைவில் தீப்பிடித்துக் கொள்ளும்; நீங்கள் ஜாக்கிரதையாக இருங்கள்’’ என்றாராம். அதிகாரி வாயை மூடிக்கொண்டு அகன்று விட்டார். இப்படி எதற்கும் அஞ்சாமல் நேருக்கு நேர் போராடுபவர்தான் சிங்காரவேலர். எதனையும் மூடி மறைப்பதோ, மழுப்புவதோ, பின்வாங்குவதோ அவருக்குச் சிறிதும் பிடிக்காது. எதிலும் வெட்டு ஒன்று; துண்டு இரண்டு என்று வெடிப்புறப் பேசுபவர் தான் அவர். எதிலும் கண்டிப்பும் உறுதியும் உடையவர். இந்த அஞ்சாமையும், உறுதியும் அவருக்கு இறுதி வரை இருந்தது.

மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ...

மே தினத்தை 1.5.1923 முதல் கொண்டாடிய சிங்காரவேலர், தம் வாழ்நாளின் இறுதிவரை அக்கொண்டாட்டத்தில் பங்கேற்றுள்ளார். மே தினத்தை முதன் முதலில் கொண்டாடிய அவர், இந்தியா முழுதும் அதனைக் கொண்டாட வேண்டுமென்று பல மாநிலத் தொழிற்சங்கங்களுக்கு அவர் வேண்டுகோளும் விடுத்துள்ளார். அதனை ஏற்றுப் பலர் கொண்டாடி உள்ளனர். மே நன்னாளைக் கொண்டாடிய அவர், மே தினத்தை அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டுமென்று வேண்டுகோளும் விடுத்துள்ளார். இந்தியாவில் இப்படி முதன் முதல் அறிவித்தவரும் அவரே ஆவார். இப்போது நாம் மே தினத்தை விடுமுறையாக அனுபவிக்கிறோம் என்றால், அதற்கு மூலகாரணம் அவர் தான்.

பெண்களுக்கு ஆறு மணி நேர வேலை

மே தினத்தை முன்னிட்டு அவர் வகுத்தளித்த தொழிலாளர் திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் தொழிலாளர்களின் அனைத்து நிலைகளையும் ஆய்ந்துள்ளார்; தொழிலாளர்- விவசாயிகளை மட்டுமல்லாமல், சமுதாயத்தின் கடைக் கோடியிலுள்ள தலித் மக்களின் முன்னேற்றம் குறித்தும் பேசியுள்ளார். 1925-இல் கான்பூரில் நடந்த பொதுவுடைமை மாநாட்டிலும் தலித் மக்கள் முன்னேற்றம் குறித்து அலசியுள்ளார்; இந்திய அளவில், ஒரு கட்சி மாநாட்டில், தலித் மக்களைப்பற்றி முதன் முதலில் திட்டப்பாங்கோடு பேசியவர் சிங்காரவேலரே என்று தோழர் எஸ்.வி. இராஜதுரை தம் நூலில் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது. இதிலும் அவர்தான் முன்னோடி. தொழிலாளர்களின் வேலை நேரத்தை உலக அளவில் எட்டு மணி நேரமாக்கிய பெருமை மே தினத்தையே சாரும். மே தினத்தின் பயனாக எட்டு மணி நேரப் பணியை வரவேற்ற சிங்காரவேலர், தமது கட்சித் திட்டத்தில் இன்னொன்றையும் வலியுறுத்தினார்; அதாவது ஆண்களுக்கு வேலை நேரம் எட்டு மணி நேரம் என்றால், பெண்களுக்கு வேலை நேரத்தை ஆறு மணி நேரமாக ஆக்குதல் வேண்டும் என்றார். இதுவொரு சரியான முடிவாகும்; இதனை நமது அரசுகள் இதுவரை ஏற்கவில்லை; இனியாவது சிந்தித்து ஏற்க வேண்டும். தம் வாழ்நாள் இறுதிவரை மேதினம் குறித்தும், தொழிலாளர் நிலை குறித்தும் எழுதுவதும் பேசுவதுமாகவே இருந்துள்ளார். மே தினம் குறித்து அவர் ஓரிடத்தில் எழுதியிருப்பது நம் சிந்தனைக்கு உரியது.

அரசியல் சக்தியாக...

‘‘உலகிலுள்ள எந்த அரசாலும் உலக நெருக்கடியைப் போக்க முடியாது. உலக நெருக்கடிக்குக் காரணம் சிறுபான்மையோராகிய 45 முதலாளிகள் நாட்டில் எல்லாச் செல்வத்தையும் செலவிடாமல் கைக் கொண்டிருப்பதே காரணமாகும். எந்தக் காலத்தில் தொழிலாளர் ஆதிக்கம் பெற்ற சமதர்மம் நிலைக்கின்றதோ, அன்று தான் உலகம் பசியற்று, சண்டையற்றுச் சுகப்பட்டு வாழுமென அறிக. அன்று தான் சாந்தமும் சமாதானமும் உலகில் நிலவுமெனவும் அறிக’’. தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வையும், சில சலுகைகளைப் பெற்றுத்தருவது மட்டுமல்ல அவரது நோக்கம் என்பதை மேலுள்ள கூற்றிலிருந்து உணரலாம்; தொழிலாளர்கள் நாட்டு அரசியல் நிலைமையைப் புரிந்து கொண்டு, ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்பதே அவரது கொள்கையாகும். இங்குதான் மற்ற தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து அவர் வேறுபடுகிறார். இந்தக் கொள்கைக்காக உழைத்துப் போராடியவர் தான் அப்பெருமகன்; தமிழகம், இந்தியா ஆகியவற்றின் தொழிலாளர்களை மட்டுமல்லாமல்; உலகத் தொழிலாளர் முன்னேற்றத்திலும் ஈடுபாடு காட்டியவர்; அமெரிக்கத் தொழிலாளர்களுக்காகப் போராடிய தலைவர்களாகிய சாக்கோவையும், வான்சிட்டியையும் அமெரிக்க அரசு மின்சாரத்தைப் பாய்ச்சிச் சாகடித்த போது, அதனைக் கண்டித்து இந்தியாவில் கூட்டம் நடத்தி முதன் முதல் கண்டனம் செய்தவர் அவர்; இதிலும் அவர்தான் முன்னோடி.

நாளும் பொழுதும் தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காகவே சிந்தித்துச் செயல்பட்டவர்; போராடியவர் அவர்; இது காறும் கிடைத்த அவரது கட்டுரைகளில் முதன் முதலாக எழுதப்பட்ட கட்டுரை, தொழிலாளர்களைப் பற்றியதேயாகும்; அவர் காந்தியடிகளுக்கு எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் (Open letter to Mahathma Gandhi) பெரும்பாலும் தொழிலாளர் விவசாயிகளைப் பற்றியதேயாகும்; அவரது வாழ்க்கையின் இறுதியில் கடைசியாகப் பேசிய பேச்சும்(84 வயதில்) சென்னை அச்சுத் தொழிலாளர் சங்கக் கூட்டத்தில் தான்; அக்கூட்டத்தில், ‘‘தொழிலாளர்களுக்காக வாழ்வதும் பணிபுரிவதுமே எனக்கு மகிழ்ச்சி தருவதாகும்’’ என்று அவர் கூறியது சிந்திக்கத்தக்கது. உலகப் பொருளாதாரத்தைக் குறித்து, ‘‘உலக நெருக்கடியும் தொழிலாளர் துயரமும்’’ என்று அவர் சுயமரியாதை மாநாட்டில் ஆற்றிய உரை அரிய ஆராய்ச்சி உரை; உலகமயமாக்கல்,  தனியார்மயமாக்கல்,தாராளமயமாக்கல் எனும் இக்காலச் சூழலை அவர் அக்காலத்திலேயே அடையாளம் கண்டு மார்க்சியப் பொருளாதாரத்தை நுட்பமாகவும் எளிமையாகவும் விளக்கியிருப்பது, இன்றும் வழிகாட்டும் ஆவணமாகும். இந்தியாவில் மேதினத்தை முதன் முதலாகக் கொண்டாடி, காலம் முழுதும் தொழிலாளர்களுக்காகவே உழைத்து மறைந்த அப்பெரியாருக்கு இந்நன்னாளில் நன்றி செலுத்துவது நம் கடன் அன்றோ!

சங்கம் தொழிலாளிக்கமைந்ததும் அவனால் தமிழர்க் குப்புத் தெண்ணம் புகுந்ததும் அவனால் பாடுபவார்க்குரிமை உயிர்த்ததும் அவனால் பழமையில் புதுமைமலர்ந்ததும் அவனால் மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால் புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால் கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால் கூடின அறிவியல்; அரசியல் அவனால். -பாரதிதாசன்