சிதம்பரம் இரவிச்சந்திரன்
செல்லப்பிராணிகளாக விற்கப்படுவதால் எண்ணிக்கையில் குறைந்துவரும் வன உயிரி னங்களுக்கு சர்வதேச சட்டத்தின் மூலம் புதிய பாது காப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பனாமா நகரில் நடைபெற்ற சர்வதேச வன வளங்கள் வணிகத்தை ஒழுங்கு படுத்தும் அமைப்பின் (CITES Convention on International Trade in Endangered Species of wild founa&flora) அமர்வில் இது முடிவு செய்யப்பட்டது. இதன்படி சுறாக்கள், பாடும் பறவைகள், பல இன ஆமைகள், பல்லிகள் மற்றும் தவளையினங்கள் புதிய பாதுகாப்பைப் பெறுகின்றன.
500 உயிரினங்களுக்கு புதிய பாதுகாப்பு
இந்த மாநாட்டில் 500 உயிரினங்களுக்கு சட்டப்பூர்வ மாகப் புதிய பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. 1989இல் கொண்டு வரப்பட்ட யானைத்தந்தத்தின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்பட வில்லை. “இந்த உடன்படிக்கை உயிர்ப்பன்மயத் தன்மையைக் காக்க தூண் போல செயல்படுவதால் இந்த அமைப்பில் இருந்து வரும் செய்தி உண்மையில் வன உயிரினங்களைப் பாதுகாக்க உதவும் நல்ல செய்தியே. பூமியின் உயிர்ப்பன்மயத்தன்மை அச்சுறுத்தலிற்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில் காலநிலை மாற்றம், கொள்ளைநோய்கள் போன்றவற்றினால் வன உயிரி னங்கள் ஆபத்தை எதிர்கொண்டுவரும்நிலையில் இந்த உடன்படிக்கை இயற்கை வளங்களைக் காக்க உதவும்” என்று பன்னாட்டு வன உயிரி சங்கத்தின் சர்வதேசக் கொள்கைப் பிரிவின் துணைத்தலைவர் சூசன் லீபர்மேன் (Susan Lieberman) கூறுகிறார்.
ஆமை வேட்டை
ஆமைகளை செல்லப் பிராணிகளாக்கி வளர்க்க நடத்தப் ப்படும் வேட்டையால் உலகில் பாதி ஆமையினங்கள் ஆபத்திற்கு உள்ளாகியிருக்கின்றன. இந்த மாநாட்டில் அதிகரித்துவரும் கள்ளச்சந்தை, வாழிட இழப்பு, வன உயிரினங்களின் வணிகத்தில் தொடர்புடைய சட்டச் சிக்கல்களுக்கான தீர்வுகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் இந்த அமர்வில் ஏற்பட்டன. வன உயிரினங்களின் வணிகம் தொடர்பான முதல் உடன்படிக்கை 49 ஆண்டுகளுக்கு முன் வாஷிங்டனில் உருவானது. இது யானைத்தந்தம், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம், திமிங்கலங்கள், கடல் ஆமைகளின் சட்டவிரோத வணிகத்தைத் தடுக்க உதவியது. ஆனால் வாஷிங்டன் உடன்படிக்கையின் விதிமுறைகள் கள்ள வணிகத்தை முற்றிலும் தடுக்க உதவவில்லை என்று குற்றம் சாட்டப்பட்ட நிலையில் இப்போது இந்த புதிய உடன்படிக்கை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
எட்டு பில்லியன் டாலர் வியாபாரம்
ஆண்டிற்கு எட்டு பில்லியன் டாலர் அளவில் நடக்கும் வன உயிரினங்களின் கள்ள வணிகத்தைத் தடுக்க இம்மாநாட்டில் புதிதாக 54 வகை ரெக்ரியம் (requiem), பானெட்ஹெட் (bonnethead) மற்றும் ஹேமர்ஹெட் (hammerhead) வகை சுறாக்கள் உட்பட 90 வகை சுறாக்கள், சுறா போன்ற தோற்றத்தை உடைய 37 வகை கிடார் கதிர் மீனினங்கள் (guitarfish) உள்ளிட்ட பல உயிரி னங்கள் புதிய பாதுகாப்பு பெற்றுள்ளன. புதிய உடன் படிக்கையின் ரோமன் இரண்டாம் பிரிவின் கீழ் இந்த உயிரினங்களின் வணிகம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மீன் பிடித்தலால் மட்டும் ஆண்டிற்கு 100 மில்லியன் சுறாக்கள் உயிரிழக்கின்றன.
அழியும் சுறாக்கள்
ஆசிய நாடுகளில் பிரபலமாக இருக்கும் சுறா துடுப்பு களில் இருந்து தயாரிக்கப்படும் சூப்பிற்காக இவை கொல்லப்படுகின்றன. இப்போது இது ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளது. வரையறையற்றமுறையில் இறைச்சி மற்றும் துடுப்புகளுக்காக இவை அதிக எண்ணிக்கையில் விவேகமற்றமுறையில் வேட்டையாடப்படுகின்றன என்று வன உயிரினங்களை நீதியுடன் நடத்துவதற்கான சர்வதேச அமைப்பின் மூத்த இயக்குநர் ரெபெக்கா ரெக்னேரி (Rebecca Regnery)கூறுகிறார்.
கடல் ஆமைகளுக்கும் கண்ணாடித் தவளைகளுக்கும் பாதுகாப்பு
ii திருத்தத்தின்படி அழியும் ஆபத்தில் இல்லாத உயிரினங்கள் மிதமிஞ்சிய அழிவிற்கு காரணமாக அமை யாத விதத்தில் மட்டும் வணிகம் செய்ய அனுமதிக்கப்பட் டுள்ளது. ஒளி ஊடுருவக்கூடிய பளபளப்பான கண்ணாடி போன்ற தோலுடைய தவளையினங்கள் (glass frogs) உட்பட பல இன கடல் ஆமைகள், பல்லியினங்கள், பல வகை பாடும் பறவை இனங்கள் இந்த உடன்படிக்கை யின்படி பாதுகாக்கப்படும்.
இன அழிவை சந்திக்கும் கண்ணாடித்தவளைகள்
காலநிலை மாற்றம், வாழிட இழப்பு போன்றவற்றினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள கண்ணாடித்தவளைகள் அவற்றின் அழகிற்காக செல்லப்பிராணிகளாக வளர்க்கப் பட அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன என்று பந்நாட்டு விலங்கு நல நிதியத்தின் அமெரிக்கப் பிரிவு இயக்குனர் டேனியல் கெஸ்லர் (Danielle Kessler) கூறுகிறார்.
பாதுகாப்பில்லாமல் போன நீர்யானைகள்
ஆப்பிரிக்க நாடுகள், சூழல் அமைப்புகளால் வலி யுறுத்தப்பட்ட நீர் யானைகள் பாதுகாப்புச் சட்டம் ஐரோப் பிய ஒன்றியத்தின் தலையீட்டால் நிறைவேறவில்லை. பல நாடுகளிலும் இந்த உயிரினம் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றன. அதனால் இவற்றின் வணிகம் இவற்றின் உயிரின அழிவிற்கு ஆபத்தை ஏற்படுத்தவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் வாதாடி வெற்றிபெற்றது. உலகளவில் எண்ணிக்கையில் குறைவில்லாமல் வாழும் ரைனோக்கள், நீர் யானைகள், யானைகள், சிறுத்தைப்புலிகள் இம்மாநாட்டில் புதிய திருத்தங்கள் மூலம் பாதுகாப்பு பெறவில்லை என்று உயிர்ப் பன்மயத் தன்மை மையத்தின் சர்வதேச சட்டப்பிரிவின் இயக்குனர் டான்யா சானரி (Tanya Saneri) கூறுகிறார்.
இந்தியாவில் இருந்து இரண்டு கடல் ஆமையினங்கள்
1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி மட்டும் இந்தியாவிற்குள் பாதுகாக்கப்பட்டுவரும் மென்மையான மேலோடுடைய ஆமை மற்றும் ரெட் க்ரவுண்டு ரூஃப்டு ஆமை ஆகிய இரு ஆமையினங்களை இந்த உடன்படிக்கையின்படி பன்னாட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட உயிரினங்களின் பட்டியலில் சேர்க்க முயற்சிகள் நடை பெறுகின்றன. உலகளவில் இறைச்சி மற்றும் பிற தேவை களுக்காக வரையறையில்லாமல் இவை கொல்லப்படு வதைத் தடுக்க இந்தியச்சட்டம் போதுமானதாக இல்லை. இந்த முயற்சிகள் வெற்றிபெறும்போது இவை பிரிவு ஒன்றின் கீழ் பாதுகாக்கப்படும்.
நெஞ்சை நெகிழவைக்கும் அழிவின் காலம்
நெஞ்சை நெகிழவைக்கும் அழிவின் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மனித இனம் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களையும் பாதுகாக்க சர்வதேச உடன்படிக்கை ஏற்படவேண்டும். இல்லாவிட்டால் நாளை பூமி என்றொரு கோள் இருக்கும். ஆனால் மருந்துக்குக் கூட அதில் மனிதன் என்ற உயிரினம் இருக்காது.