world

img

சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதி கோர்பசேவ் மரணம்

சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதியும், பல துண்டுகளாக அந்நாடு சிதறிப் போனதற்குக் காரணமானவருமான மைக்கேல் கோர்பசேவ் தனது 91வது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

1985 முதல் 1991 ஆம் ஆண்டு வரையில் சோவியத் யூனியனின் ஜனாதிபதியாக இருந்த அவர், நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தால் உயிரிழந்தார். அமெரிக்காவுக்கு, சோவியத் யூனியனுக்கும் இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறிய அவர், சோவியத் யூனியனைப் பலவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கினார். அரசு மற்றும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பல்வேறு துறைகளை சீர்திருத்தம் என்ற பெயரில் நிர்மூலமாக்குவதற்கு அடித்தளம் அமைத்தார்.

1952 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான கோர்பசேவ், 1985 ஆம் ஆண்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சோவியத் யூனியனின் உச்சபட்சத் தலைவராக சர்வதேச சமூகத்தில் வலம் வந்து கொண்டிருந்த அவர், சர்ச்சைக்குரியவராக மாறினார். தங்களுக்குச் சாதகமாக சோவியத் யூனியனின் ஜனாதிபதியே செயல்பட்டதால் கோர்பசேவுக்கு மேற்கத்திய நாடுகள் புகழாரம் சூட்டின. 1990 ஆம் ஆண்டில் அவருக்கு நோபல் பரிசும் வழங்கின. அனைத்துத் துறைகளிலும் வலதுசாரி நாடுகளை விட ஒரு படி மேலே நின்ற சோவியத் யூனியன் சிதைந்த போனதைப் பார்த்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் களிப்படைந்தன. ஆனால், சோவியத் யூனியன் பல நாடுகளாகப் பிரிந்தபிறகு, கோர்பசேவை அமெரிக்கா உள்ளிட்ட எந்த மேற்கத்திய நாடும் கண்டு கொள்ளவில்லை.

கோர்பசேவின் மரணத்திற்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் உள்ள நோவோடெவிச்சி சமாதியில் அவருடைய உடல் புதைக்கப்படவுள்ளது.