world

img

அனைவரையும் உள்ளடக்கிய பிரேசில் லூலா உறுதி

அடுத்து அமையவிருக்கும் அரசு அனைவரின் நலன்களையும் கவனிக்கக்கூடியதாக இருக்கும் என்று பிரேசில் தொழிலாளர் கட்சியின் தலைவரும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இருக்கப் போகிறவருமான லூலா டி சில்வா உறுதியளித்துள்ளார்.

வரும் அக்டோபர் மாதத்தில் பிரேசிலின் புதிய ஜனாபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதுள்ள வலதுசாரி ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ மீது மக்கள் கடும் அதிருப்தி கொண்டிருக்கிறார்கள். தற்போது வெளியாகி வரும் கருத்துக் கணிப்புகளில் லூலாவுக்கும், போல்சனாரோவுக்கும் இடையில் 20 விழுக்காடு வாக்குகள் வேறுபாடு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வரக்கூடிய தேர்தல் மற்றும் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்துக் கருத்து தெரிவித்துள்ள லூலா, "நாட்டு மக்களின் அனைத்துப் பகுதியினருடனும் நான் பேச விரும்புகிறேன். பிரேசிலை மீண்டும் கட்டமைக்க வேண்டும். நான் தொழிலாளி மற்றும் முதலாளி ஆகிய இருவரிடமும் பேச விரும்புகிறேன். வங்கி உரிமையாளர், விவசாயி மற்றும் கிராமப்புறத் தொழிலாளி என்று அனைவரிடமும உரையாட விரும்புகிறேன். இந்த நாட்டை மீண்டும் கட்டமைக்க அனைவரிடமும் பேச வேண்டிய அவசியம் உள்ளது" என்றார்.

கூடுதல் ஊதியத்துடனான நல்ல வேலைகளை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்றும், அதை எங்கள் ஆட்சி அமைந்தவுடன் செய்வோம் என்று லூலா உறுதியளித்திருக்கிறார். இதன் மூலம் தற்போது பிரேசிலில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வைக் குறைக்க முடியும் என்ற அவர், மக்களுக்கு வாங்கும் சக்தி தேவை. அவர்கள் நிறையப் பொருட்களை வாங்க வேண்டும். அப்போதுதான் தொழில் நிறுவனங்கள் மீண்டும் பொருட்களை உற்பத்தி செய்யும் என்று சுட்டிக்காட்டினார்.

அவருக்கு ஆதரவாக இருப்பவர்கள் லூலாவின் முந்தைய பதவிக்காலத்தை நினைவு கூர்கிறார்கள். அந்தக் காலகட்டத்திற்கு மீண்டும் பிரேசில் போக வேண்டும் என்று விரும்புவதாகவும் தெரிவிக்கின்றனர். வனப்பகுதி அழிவு என்பது வலதுசாரிகளின் ஆட்சியில் அன்றாட நிகழ்வாக மாறியுள்ளதைச் சுட்டிக்காட்டும் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆட்சி அமைய வேண்டும் என்கிறார்கள். அவர்களின் கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் லூலா, இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும் என்று உறுதியளிக்கிறார்.