ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி 100 வயதான முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
இன்றைய அவசர காலகட்டத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவது பெரும் கடினமாகும். அவரவர் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். மேலும் கொரோனா காலத்தில் பலரும் தங்களது வேலைகளை இழந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில் பிரேசிலில் 100 வயதான முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை மட்ட ஊழியராக பணியை தொடங்கி வால்டர் ஆர்த்மன் என்பவர், படிப்படியாக முன்னேற்றம் அடைந்து தற்போது விற்பனை மேலாளராக உள்ளார். தற்போது 100 வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வரும் வால்டர், அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் வெற்றி நிச்சயம் என்றும் பணியை விரும்பி செய்தால் ஒரே நிறுவனத்தில் நீடிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
பணி உயர்வு, அத்துடன் கூடிய சம்பள உயர்வால் நிறுவனத்தை விட்டு வெளியேற மனமில்லாத அவர் 84 ஆண்டுகள் அங்கேயே பணியாற்றி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த இவருக்கு சக ஊழியர்கள் மற்றும் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.