லண்டன், ஆக. 5- இங்கிலாந்தில் முஸ்லிம் அகதி ஒருவர் 3 சிறுவர்களை குத்தி கொலை செய்ததாக பரப்பப்பட்ட பொய்ச் செய்தியால் நாடு முழுவதும் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. கடந்த வாரம் இங்கிலாந்தின் வடமேற்கு கடற்கரையில் உள்ள சவுத்போர்ட்டில் டெய்லர் ஸ்விப்ட் இன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்நிகழ்வில் மர்ம நபர் ஒருவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்த துவங்கினார். அந்த தாக்குதலில் 6, 7 மற்றும் 9 வயதுடைய மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 10 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அந்த தாக்குதலை நடத்தியது 17 வயதான ஆக்செல் ருடகுபனா என்ற இங்கிலாந்து குடிமகன் என தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் ஒரு முஸ்லிம் அகதி என தீவிர வலதுசாரிகள் பொய்ச் செய்தியை பரப்பினர். இங்கிலாந்தில் பல ஆண்டுகளாக அகதிகள், முஸ்லிம்க ளுக்கு எதிராக தீவிர வலதுசாரிகள் இனவெறி வெறுப்புப் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் நடந்து முடிந்த பிரதமர் தேர்தலில் கூட அகதிகள் குறித்து வெறுப்புப் பிரச்சாரங்களும், அவர்களை நாடு கடத்துவது பற்றியும் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இசை நிகழ்ச்சியில் நடைபெற்ற கொலை களை வைத்து போலிச் செய்திகளை பரப்பியதை தொடர்ந்து நாடு முழுவதும் கலவரம் வெடித்துள்ளது.
நூற்றுக்கணக்கான கலவரக்காரர்கள், அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ள ஒரு ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தி அடித்து நொறுக்கினர். இந்த கலவரம் லிவர்பூல், மான்செஸ்டர், பிரிஸ்டல், பிளாக்பூல் மற்றும் ஹல் என நாட்டின் பிரதான நகரங்களில் பரவியுள்ளது.
முஸ்லிம்கள், அகதிகளுக்கு எதிரான வெறுப்புக் கோஷங் கள் எழுப்புவது, அவர்களது உடைமையின் மீது தாக்குதல் நடத்தி சேதத்தை உருவாக்குவது என கலவரக்காரர்கள் காவல்துறையினரை மீறிச் செயல்பட்டு வருகின்றனர். பொய்ச் செய்தியால் பரவிய கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு காவல்துறை அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.