world

img

பாகிஸ்தான் : நகரங்களில் ராணுவம் குவிப்பு; எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது

இஸ்லாமாபாத், மே 12- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீதான நடவடிக்கைகளையொட்டி நாடு முழுவதும் எழுந்துள்ள எதிர்ப்பைக் கட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தைப் பல்வேறு நகரங்களில் நிறுத்தியிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சித் தலைவர்களைக் கைது செய்யும் பணியையும் அந்நாட்டின் ராணுவமே மேற்கொண்டு வருகிறது. நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி மற்றும் இம்ரானின் அரசியல் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் துணைத்தலைவர் ஆகியோரையும் கைது செய்திருக்கிறார்கள். வெவ்வேறு இடங்களில் நடந்த மேலும் சில கைது நடவடிக்கைகளில் கட்சியின் முக்கியத் தலைவர்களான அசத் உமர் மற்றும் ஃபவத் சவுத்ரி ஆகியோரும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தனது டுவிட்டர் வாயிலாக குரேஷி வெளியிட்டுள்ள செய்தியில், "படுமோசமான பிரச்சாரத்தை எங்கள் கட்சிக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ளார்கள். பயங்கரவாத வன்முறையைக் கையாள்பவர்களாக எங்களைச் சித்தரிக்கிறார்கள். எங்கெல்லாம் சாத்திமிருக்கிறதோ, அங்கெல்லாம் அமைதியான முறையில் நாடு தனது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்திருக்கிறார். ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அந்நிய சதி

தன்னைப் பதவியில் இருந்து வெளியேற்ற அந்நிய சக்திகள் சதி செய்து வருவதாகவும், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது கோடிக்கணக்கான டாலர்கள் பரிமாறியதாகவும் இம்ரான்கான் குற்றம் சாட்டியிருந்தார். அவருடைய கைதையும் "கடத்தல்" என்றே தெஹ்ரீக்-இ.இன்சாப் கட்சி கூறி வருகிறது. அவரின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும், அவரைச் சிறையில் அடைத்து வரும் தேர்தலில் போட்டியிடாமல் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

அனைத்து வகை சமூக வலைத்தளங்களையும் முடக்கி வைத்திருக்கிறார்கள். பணம் செலுத்தும் செயலிகள் கூட முடக்கப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் சேர்த்து, இழுத்து மூடப்பட்டிருக்கின்றன. ஆண்டிறுதித் தேர்வுகளையும் ரத்து செய்து விட்டார்கள். நாடு முழுவதும் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கும் கடுமையான பற்றாக்குறை நிலவி வருகிறது.

சட்டவிரோதம்

இம்ரான்ரானின் கைது நடவடிக்கை சட்டவிரோதம் என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டது. வேறொரு வழக்கில் அவரைக் கைது செய்ய பாகிஸ்தான் அரசு திட்டமிட்டு வருகிறது. அவர் மீது 121 வழக்குகள் சுமத்தப்பட்டிருக்கின்றன. லாகூர் காவல்துறையினர் இம்ரான் கானைக் கைது செய்வதற்கான ஆவணங்களுடன் இஸ்லாமாபாத் பயணம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது ஆட்சியில் உள்ளவர்களில் சிலர், இம்ரான் கானை முடக்குவதில் பெரும் கவனம் செலுத்தி வருகிறநார்கள் என்றும், அவர் வெளியில் இருந்தால் அவர்களின் பதவிகளுக்கு ஆபத்து நேரிடும் என்று கருதுவதாகவும் இம்ரான் கான் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். மக்களின் ஆதரவு யாருக்கு உள்ளது என்பதை நாட்டின் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கும் எண்ணிக்கை காட்டுவதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கிறார்கள். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, மக்களின் போராட்டம் வன்முறை நிறைந்ததாக மாறியுள்ளது. ஸ்ரீநகர் நெருஞ்சாலையில் காவல்துறையினரின் வாகனம் ஒன்று எரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.