திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் ஒன்றிய அரசு உடனடியாக தலையிட்டு, நிதியுதவி அளித்திட வேண்டும் என ஆர்.சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஆர்.சச்சிதானந்தம் எம்.பி ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எழுத்திய கடிதத்தில் கூறியதாவது:
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகள் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், ஒன்றிய அரசின் உடனடி தலையீட்டையும், நிதி உதவியையும் கோரி விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன்.
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாம்பழ விவசாயிகள்
இந்த கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட காலநிலை நிலவரம் காரணமாக மாம்பழ விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் மாவட்டங்களில் மாம்பழ சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோரப் பகுதிகளான ஆயக்குடி, நத்தம், அய்யம்பாளையம் போன்ற பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னை, மாம்பழம், காபி சாகுபடியையே மேற்கொள்கின்றனர்; நம்பியுள்ளனர்.
விலை வீழ்ச்சியால் தவிக்கும் விவசாயிகள்
பாரம்பரிய மாம்பழ விவசாயிகள் கடந்த ஆண்டு நல்ல மகசூல் கிடைத்தபோது டன் ஒன்றுக்கு ரூ.18,000/- என்ற நல்ல விலை பெற்றனர். ஆனால் தற்போது மிகக் குறைந்த மகசூல் கிடைத்திருக்கும் நிலையில், கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு வெறும் ரூ.4,000/- மட்டுமே கிடைக்கிறது.
உற்பத்தி செலவுகள் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருப்பதால், விவசாயிகள் பழங்களை மரத்திலேயே விட்டுவிட்டு, சாலைகளில் வீசி எறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குளிர்பதன வசதி இல்லாததும் இந்த பிரச்சனையை மேலும் அதிகரித்துள்ளது.
அரசின் உடனடி தலையீட்டுக்கு கோரிக்கை
தற்போது விவசாயிகள் அரசின் ஆதரவைக் கோரி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்:
முதன்மை கோரிக்கைகள்:
- பிரதமர் அன்னதாதா ஆய் சம்ரக்ஷண் அபியான் (PM-AASHA) திட்டத்தின் கீழ் சந்தை தலையீட்டு விலையை உடனடியாக வழங்க வேண்டும்
- தோட்டக்கலை ஒருங்கிணைந்த மேம்பாட்டு மிஷன் (MIDH) திட்டத்தின் கீழ் குளிர்பதன வசதிகள் மற்றும் மாம்பழ கூழ் உற்பத்தி அலகுகளை அமைக்க வேண்டும்
கொள்கை மாற்றங்கள்:
- பழரச பானங்களில் 20% பழரச கூழ் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும் என்ற நிர்ணயிக்கப்பட்ட நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்
- பானப் பொருட்களில் செயற்கை ரசாயனங்கள் சேர்ப்பதற்கு பதிலாக இயற்கை பழரசத்தைப் பயன்படுத்த வேண்டும்
- விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளை (FPOs) பயன்படுத்தி விவசாயிகள் மற்றும் நுகர்வோர் நலனுக்காக இந்த முயற்சியை மேற்கொள்ள வேண்டும்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்:
- நடுத்தர வணிகர்களின் சிண்டிகேட் அமைப்பை ஒழிக்க கடுமையான ஒழுங்குமுறை விற்பனை முறையை அமல்படுத்த வேண்டும்
- விவசாயிகளை அடக்கி ஒடுக்கும் நடுத்தர வணிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்
- நஷ்டத்திற்கு நிதி உதவி வழங்க வேண்டும்
மாம்பழ விவசாயிகளுக்கு உடனடி நேரடி நிதி உதவி வழங்கவும், மாம்பழ விலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தவும், MIDH மற்றும் APEDH திட்டங்களின் கீழ் போதுமான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி "பழங்களின் அரசன்" எனப்படும் மாம்பழத்தின் மகசூலை இந்த பருவத்தில் பாதுகாக்க வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.