சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாடு வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. 9 கோடியே 60 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு உலகிலேயே மிகப்பெரிய அரசியல் கட்சியாக இருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு உலக அரங்கில் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டதாக அமைந்தது. புதிய தலைமையும், மூன்றாவது முறையாக பொதுச் செயலாளராக ஜி ஜின்பிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநாடு நடந்த வேளையில், கடந்த பத்தாண்டுகளில் மக்கள் சீனம் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி சர்வதேச அரங்கில் விவாதம் நடந்தது. கருத்துக்களைச் சொன்ன சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் அனைவருமே சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு இல்லாமல் இத்தகைய வளர்ச்சி சாத்தியமே இல்லை என்று கூறினர். கடுமையான வறுமை ஒழிப்பு, விண்வெளி ஆய்வில் சாதனைகள், உற்பத்தியில் முதலிடம், நாட்டின் பொருளாதாரம் இரட்டிப்பு, அரசியல் நிலைத்தன்மை உள்ளிட்டவை கடந்த பத்தாண்டு சாதனைகளில் சில அம்சங்களாக இருக்கின்றன. “மார்க்சியம் அறிவியல் தன்மை கொண்டது மற்றும் அது நடைமுறையில் செல்லத்தக்கது என்று சீனாவில் முழுமையாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் நவீனம் மெய்பிக்கப்பட்டிருக்கிறது. இதன் விளைவாக உலகம் முழுவதும் சோசலிசத்திற்கு ஆதரவான நிலை உருவாகியுள்ளது” என்று ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கென்னடி ஜூகானோவ் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் இடதுசாரி சக்திகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சீனாவின் வளர்ச்சி அமைத்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
1978 ஆம் ஆண்டில் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2 விழுக்காடாக இருந்த சீனப் பொருளாதாரம், தற்போது 18 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது. 70 கோடி கிராமப்புற மக்களை வறுமையின் பிடியில் இருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். உலகின் தொழிற்சாலை என்று அழைக்கும் அளவுக்கு உற்பத்தித்துறையில் சீனா முன்னேறியுள்ளது. வருங்காலத்திலும் புதிய சாதனைகளை சீனா படைக்கும் என்று ஜப்பானின் முன்னாள் பிரதமரான யுகியோ ஹடோயமா கூறியுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சோசலிச அரசின் தலைமை இந்த சாதனைகளோடு திருப்தி அடைந்து விடவில்லை. கட்சியின் பொதுச்செயலாளராக மூன்றாவது முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங், “அனைத்து வகைகளிலும் தலைசிறந்த நவீன சோசலிச நாடாக சீனாவை மாற்றும் புதிய பாதையில் நடைபோடுகிறோம்” என்று கூறியிருக்கிறார். 2035 ஆம் ஆண்டிற்குள் இதை சாதிக்க இலக்கும் நிர்ணயித்திருக்கிறார்கள். சீனாவின் சிறப்பம்சமே, இலக்குகளை கால வரம்புக்கு முன்னதாகவே நிறைவேற்றுவது என்பது குறிப்பிடத்தக்கதாகும். செழிப்பான, வலுவான, ஜனநாயக, கலாச்சாரத்தில் முன்னேறிய, நல்லிணக்கம் கொண்ட மற்றும் அழகான நாடு என்பதையே தலைசிறந்த நவீன சோசலிச நாடு என்பதற்கான இலக்கணமாகச் சொல்லியுள்ளனர். மற்ற சமூக அமைப்புகளைப் போலவே சோசலிச சமூக அமைப்பும் மாற்றங்களை அடைந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற பிரெடரிக் ஏங்கல்சின் கூற்றை மக்கள் சீனம் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது.