world

img

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர்-சீன ஆய்வில் புதிய தகவல்

நாம் கணித்ததற்கு முன்பே செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்திருக்க வேண்டும் என்றும், அதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன என்றும் சீன ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
நீர் ஏறிய கனிமங்கள் செவ்வாய் கிரகத்தில் இருப்பதை வைத்து சீன விஞ்ஞானிகள் செவ்வாய்க் கிரகத்தில் தண்ணீர் இருந்ததை மீண்டும் உறுதி செய்கிறார்கள். அதோடு, அந்தக் கனிமங்களை வருங்காலத்தில் நமது பயன்பாட்டுக்காகக் கொண்டு வர முடியும் என்றும் கருதுகின்றனர். திரவ நிலையில் தண்ணீர் இருந்ததற்கும், அந்த நிலையில் அது இயங்கியதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. நீரேறியுள்ள கனிமங்களை ஆய்வு செய்யும் பணிகளையும் சீன ஆய்வு தொடர்ந்து மேற்கொள்கிறது.
சீன அறிவியல் நிலையத்தின் கீழ் இயங்கும் தேசிய விண்வெளி அறிவியல் மையத்தின் ஆய்வாளர்கள் செவ்வாய்க் கிரகத்தின் வடபகுதியில் இருந்து கிடைக்கும் மாதிரிகளை பரிசோதித்து வருகிறார்கள். பெரும் பிரகாசத்துடன் காணப்படும் பாறைகள் சீன விண்கலத்தால் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் பதிவாகியுள்ளன. இந்தப் பாறைகள் தண்ணீரை உள்வாங்கியுள்ளதை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகின்றனர். உயர்ந்து வந்த தண்ணீர் மட்டம், பனிப்பாறைகள் உருகுதல் உள்ளிட்டவை பாறைகளின் இந்த நிலைக்குக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஏற்கனவே கிடைத்த சான்றுகள் மற்றும் தற்போது கிடைத்துள்ள சான்றுகளுக்கிடையில் உள்ள வேறுபாடுகளையும் சீன விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகிறார்கள். திட நிலையில் உள்ள நிலப்பரப்பு மற்றும் பாறைகள் தண்ணீர் ஆவியானதால் உருவாகியிருக்கும் என்று அவர்கள் கருதுகின்றனர். நீரேறியுள்ள கனிமங்கள், பாறைகள் மற்றும் நிலப்பரப்பில் உள்ள பனிக்கட்டிகள் ஆகியவை தண்ணீர் இருந்ததற்கான அடையாளங்கள் என்ற அனுமானத்துடன் கூடுதல் ஆய்வுகளில் விஞ்ஞானிகள் இறங்கியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட 360 கோடி ஆண்டுகளுக்கு முன்பாக செவ்வாய்க் கிரகத்தில் தற்போது பூமியில் உள்ளதுபோன்று உயிரினங்கள் வாழ்ந்ததாகவும், அதற்குப் பின்பாக மிகப்பெரிய விண்கல் ஒன்று மோதியதால் உயிரினங்கள் அழிந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் பற்றிய ஆய்வுகளில் அமெரிக்காவின் அனுபவம் அதிகமாக இருந்தாலும், சீனாவின் அண்மைக்கால ஆய்வுகள் புதிய, புதிய தகவல்களைத் தருகின்றன. பழைய அனுமானங்களுக்குப் பல விடைகளைத் தருவதாகவும் சீன விஞ்ஞானிகளின் ஆய்வுகள் அமைந்துள்ளன.