கனடாவில் பழங்குடி மக்கள், கத்தோலிக்க பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மத்தியில் பேசிய போப்பிரான்சிஸ் மிகுந்த வருத்தத்துடன் மன்னிப்புக் கேட்பதாக கூறினார்.
கனடாவில் கத்தோலிக்க தேவாலயத்தால் இயங்கிய பள்ளிகளில், பூர்வ பழங்குடிகளாக இருந்த மெடிஸ், இனுய்ட் போன்ற பழங்குடி மக்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர்.
சுமார் 1,50,000-க்கும் அதிகமான பழங்குடிகளின் பிள்ளைகள் 1870-ஆம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் சேர்க்கப்பட்டனர். அங்கு பழங்குடி மாணவர்கள் கலாசார ரீதியாக துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிற்காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது. இது சர்வ தேச சமூகம் அதிகார மையமான வாடிகனை நோக்கி பல கேள்விகளை எழுப்பவும் காரணமாகியது.
இந்தச் சூழலில் இந்தத் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று போப் பிரான்ஸிஸ் ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முக்கிய நோக்கமான தனது மன்னிப்பை ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் முன் போப் பதிவுச் செய்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
கனாடாவின் மாஸ்வாசிஸ் நகரில், திங்கட்கிழமை பழங்குடி மக்கள் சூழ்ந்திருக்க நடந்த நிகழ்வில் போப் பிரான்சிஸ் பேசியது: “மிகுந்த வருத்தத்துடன் இந்த மன்னிப்பைக் கேட்கிறேன். கத்தோலிக்க பள்ளிக்கூடங்கள் இங்கிருந்த பழங்குடிகளின் மொழி மற்றும் கலாசாரம் அழிய காரணமாகியுள்ளன. பழங்குடியின மக்களுக்கு எதிராக கிறிஸ்தவர்கள் செய்த கொடூரத் தீமைகளுக்கு வெட்கித் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த மன்னிப்பு பழங்குடிகள் மீது நடத்தப்பட்ட கொடுமைகளைக் கண்டறிவதற்கான விசாரணையை தீவிரப்படுத்தவும், கடந்த காலங்களில் வலிகளை அனுபவித்த பழங்குடி மக்களுக்கு சிறு மருந்தாகவும் உதவும்” என போப் பிரான்சிஸ் பேசினார்.
போப் பிரான்சிஸின் மன்னிப்பைக் கேட்டு அங்கிருந்த பழங்குடி மக்களும், கத்தோலிக்க பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களும் கண்ணீர் விட்டு உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர்.