world

img

"பெண்கள் - வாழ்க்கை - விடுதலை" ஈரானில் மாற்றம் கோரி பெண்கள் முழக்கம்

டெஹ்ரான், அக்.27- ஈரானில் மதவழக்கப்படி உடை அணியவில்லை என்று கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற 22 வயது பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. 

குர்தீஷ் பகுதியைச் சேர்ந்த ஈரானியப் பெண்ணான அமினி செப்டம்பர் 16ஆம் தேதி உயிரிழந்தார். மதப்பழக்கங்களைக் கண்காணிக்கும் காவல்துறையால் கைது செய்யப்பட்ட மூன்றாவது நாளில் அவர் மரணமடைந்தார். பெண்களுக்கு இஸ்லாமிய மதம் விதிக்கும் உடையை அவர் அணியவில்லை என்ற காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி ஈரானியப் பெண்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்கள். 
அமினி மறைந்து 40 நாட்கள் ஆன நிலையில் அதை நினைவு கூரும் வகையில் ஊர்வலம் நடந்தது. அஞ்சலி செலுத்துவதற்காகக் கூடிய மக்கள் அதை கண்டனப் பேரணியாக மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இவ்வளவு எண்ணிக்கையில் மக்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்காத காவல்துறையினர் கூட்டத்தைக் கலைக்க முயற்சித்தனர். ஒரு கட்டத்தில் துப்பாக்கிச்சூடும் நடத்தினார்கள். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள்  தாக்குதல்களை நடத்தியதாக காவல்துறையினர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடந்ததாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. மஹ்சா அமினியின் நினைவிடத்திற்கு வந்த சிலர் தாக்குதல் நடத்தியதாகவும், அவர்களைக் காவல்துறையினர் கலைத்து விட்டதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. அந்தச் செய்தியின்படி 10 ஆயிரம் பேர் குழுமியிருக்கிறார்கள். ஆனால் துப்பாக்கிச்சூடு பற்றி இந்தச் செய்தி எதையும் குறிப்பிடவில்லை.

தடைகளை மீறிய மக்கள்
மேற்கு குர்திஸ்தான் மாகாணத்தின் சாகேஸ் நகரில் உள்ள மஹ்சா அமினியின் 40ஆவது நாள் நினைவு ஊர்வலம் நடக்கும் என்று காவல்துறை எதிர்பார்த்தே இருந்தது. ஆனால், மக்களைப் பெருமளவில் வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தார்கள். ஆனால் அனைத்தையும் மீறி ஆயிரக்கணக்கான மக்கள் சாகேஸ் நகருக்குள் நுழைந்தனர். அரசுக்கும், காவல்துறைக்கும் எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. 

கால்பந்து வீரர் கைது?
சர்வதேச அளவில் பிரபலமானவரும், ஈரானுக்கு சர்வதேச அளவில் பல வெற்றிகளை ஈட்டித்தந்த கால்பந்து வீரருமான அலி டேய் அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சாகேஸ் நகருக்கு வந்தார். ஏற்கனவே அமினியின் மரணம் தொடர்பாகத் தனது டுவிட்டரில் அவர் செய்த பதிவு உலக அளவில் கவனத்தை ஈர்த்தது. ஈரான் அரசின் அதிருப்திக்கும் ஆளானது. அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன. சில மேற்கத்திய ஊடகங்கள் அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.

டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 40ஆவது நினைவு நாளையொட்டி கல்வி நிலையங்களில் இருந்து வெளியேறித் தங்கள் எதிர்ப்பை மாணவர்கள் காட்டியிருக்கிறார்கள். மஹ்சா அமினியின் மரணம் நிகழ்ந்து ஐந்து வாரங்கள் ஆகியும் போராட்டங்களின் வீச்சு குறையவில்லை. மாறாக, 40ஆவது நினைவு நாளன்று தீவிரமாகியுள்ளது. இந்தப் போராட்டங்களைப் பயன்படுத்தி ஈரானில் குழப்பங்களை விளைவிக்க மேற்கத்திய நாடுகள் முனைந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால், மேற்கத்திய ஊடகங்கள் சிலவற்றிற்கு ஈரான் தடை விதித்துள்ளது. குறிப்பாக சில ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்க ஈரானுக்குள் நுழைய அனுமதியும் மறுத்திருக்கிறார்கள்.