tamilnadu

ரயில், பேருந்து, மெட்ரோவில் ஒரே டிக்கெட் சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம்

ரயில், பேருந்து, மெட்ரோவில் ஒரே டிக்கெட் சென்னையில் அடுத்த மாதம் அறிமுகம் 

சென்னை, ஜூன் 25 - சென்னையில் பயணிகளின் போக்குவரத்தை எளிமையாக்க  புதிய செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் மக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல பொது போக்குவரத்தாக  பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ  ரயில் வசதிகள் உள்ளன. இதில்  இதுவரை மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு வாங்கி பயணம் செய்து வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்திலும் பயணம் செய்ய ஒரே பயணச்சீட்டு முறை அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப் பட்டு இருந்தது. இதற்காக தனியாக செயலி உருவாக்க சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து  குழுமம் ஒப்பந்தம் கோரி இருந்தது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சென்னையில் மாநகர பேருந்துகள், புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில் என அனைத்திலும் ஒரே பயணச்சீட்டில் பிரயாணம் செய்யும் வகையில் புதிய செயலியை அடுத்த மாத இறுதியில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது. இந்த செயலி மூலம் எந்த பகுதிகளுக்கு எப்படி செல்ல  வேண்டும், எந்த வகை  போக்குவரத்தை பயன்படுத்தினால் விரைவாக செல்ல முடியும்  என்பது உள்ளிட்ட பல்வேறு  தகவல்களை பயணிகள் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.