டெல் அவிவ்,அக்.27- காசா மீது மிகப்பெரிய தரைவழி தாக்குதலை நடத்தத் தயாராகி வரும் இஸ்ரேல் ராணுவம் முழு அளவிலான தரைவழித் தாக்குதலின் முன்னோட்டமாக, ராணுவ டாங்குகளுடன் காசாவின் பகுதிக்குள் சில கிலோமீட்டர்கள் உள்ளே சென்று இரவில் தரைவழி தாக்குதலை நடத்தியுள்ளது. மூன்று வாரமாக காசா மீது கொடூரமான வான்வழி தாக்குதலை நடத்திவரும் இஸ்ரேல் ராணுவம் வியாழனன்று இரவு நேரத்தில் காசாவின் நிலப்பகுதியில் கவச வாகனங்கள் பீரங்கிகளுடன் சில கிலோமீட்டர்கள் ஊடுருவிச் சென்று தாக்குதல் நடத்தியதாக வீடியோ ஒன்றை வெளியிட்டது.அதில் இது அடுத்த கட்டப் போருக்கான சோதனை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வீடியோவில் குறிப்பிட்ட இலக்குகளை மட்டும் குறிவைத்து நகர்ந்ததாகவும், ஹமாஸ் குழுவின் உள்கட்டமைப்பு மற்றும் அவர்கள் நிறுவியிருந்த பீரங்கி எதிர்ப்பு நிலைகளை தாக்கி கணிசமான அளவு சேதப்படுத்தியதாகவும், சிலரைக் கொன்றதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் திறன்களை சோதிக்கும் இஸ்ரேலின் உத்தியின் ஒரு பகுதியே இந்த இரவு நேர தாக்குதல் என அரசியல் ஆய்வாளர் எலிஜா மேக்னியர் கூறியுள்ளார்.