world

img

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை

டெஹ்ரான்,ஜூலை 31- ஹமாஸ் அமைப்பின்  தலைவர் டாக்டர். இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் ராணுவம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் படுகொலை செய்துள்ளது. 

ஈரான் புதிய ஜனாதிபதி  பதவியேற்பு விழாவில் ஹனியே பங்கேற்ற பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஈரான் தலை நகரில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல், ஈரானின் இறையாண்மை, பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.  இத் தாக்குதலுக்கு அமெரிக்காவின் உளவுத்துறைதான் இஸ்ரேலுக்கு உதவி உள்ளது என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை, இஸ்மாயில் ஹனியேவின்  மரணத்தை உறுதி செய்துள்ளது. அவ்வமைப்பின் மற்றொரு மூத்த தலைவரான சமி அபு ஸுஹ்ரி  பேசியபோது, “எங்கள் பாலஸ்தீன விடுதலை நோக்கத்தை முறியடிக்கும் எண்ணத்துடன் சகோதரர் ஹனியே படுகொலை செய்யப்பட்டுள்ளார். தனிநபர்களை கொலை செய்வதால் எங்கள் இலக்கில் இருந்து எங்களை விலக்கி விட முடியாது.  பாலஸ்தீன விடுதலைக்கான எங்கள் போராட்டம் தொடரும்” எனத் தெரிவித்துள்ளார். 

பாலஸ்தீன - இஸ்ரேல் போரை நிறுத்தி மத்திய கிழக்கில் அமைதியை நிலை நாட்டுவதற்காக தொடர்ந்து பேச்சுவர்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஹமாஸ் தரப்பில் இருந்து சில நிபந்தனைகளுடன் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டாலும் இஸ்ரேல் அரசாங்கம் போரை நிறுத்த மறுத்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் தலைவரின் படுகொலை மத்திய கிழக்கில் நிரந்தர அமைதியை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாசுக்கு இடையே  மத்தியஸ்தராக செயல்பட்டு வரும் கத்தார் நாட்டின்  பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான், “ஒரு தரப்பு மறு தரப்பில் உள்ளவரை     படுகொலை செய்யும் போது இந்த பேச்சுவார்த்தை எப்படி வெற்றிபெறும்?” என   கேள்வி எழுப்பியுள்ளார்.