இலங்கையில் குர்ணாகல் பகுதியிலுள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக் காரர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதையடுத்து, இரண்டாவது முறையாக அவசரநிலையை கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பிரகடனம் செய்தார்.
இந்த நிலையில், இலங்கையில், மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியிலிருந்து திங்களன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலி ஈடுபட்டனர்.இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், குர்ணாகல் பகுதியிலுள்ள மகிந்த ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். உடனடியாக போலீசார் போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி விரட்டியடித்தனர்.
இதேபோல் மெதமுலன பகுதியிலுள்ள ராஜபக்சே குடும்பத்தின் பூர்வீக வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.