world

img

ஆயுத விற்பனையில் பிரான்ஸ் மும்முரம்

பாரிஸ், டிச.05- ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான கோடிகள் மதிப்பிலான ஆயுதங்களை விற்பதில் பிரான்ஸ் முனைந்திருப்பதால் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏமன் மீது சவூதி அரேபியா தனது தாக்குதல்களைத் துவக்கியது. அமெரிக்காவின் ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைக் கொண்டும், ஐக்கிய அரபு  அமீரகம் உள்ளிட்ட சில நாடுகளின் உதவியுடனும் ஏமன் மீதான தாக்குதல்களை சவூதி அரேபியா  தொடர்ந்தது. அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இது பற்றி கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. தங்கள் ஆதரவு ஆட்சியாளர்களை அதிகாரத்தில் அமர்த்துவதற்காகவே சவூதி அரேபியாவின் தாக்குதல் இன்றும் நடக்கிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவின் போர்க் கூட்டாளி, ஐக்கிய அரபு அமீரகமும் ஆயுதங்களைக் குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. 80 ரபேல் போர் விமானங்கள் மற்றும் 12 ஹெலிகாப்டர்களை பிரான்சிடமிருந்து வாங்குகிறார்கள். எந்தவித போருக்கான வாய்ப்பும் இல்லாத நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் இவ்வளவு போர் விமானங்களை வாங்குவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேற்கு ஆசிய நாடுகளில் பதற்றத்தை அதிகரிக்கவே இது உதவும் என்று சில மேற்கு ஆசிய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

மக்ரோன் பயணம்

சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இரண்டு நாட்கள் பயணமாக பிரான்ஸ் ஜனாதிபதி மானுவல் மக்ரோன் வந்துள்ளார். இவரது இந்த பயணத்தில் ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் விற்பனை பற்றியே பேசப்பட்டிருக்கிறது. ஏற்கனவே  போட்டிருந்த ஆயுத விற்பனை ஒப்பந்தங்களை காலாவதியாக்கி விடாமல் ஆயுதங்களைத் தருவதில் மக்ரோன் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஏமனில் அதிகாரத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள், “போர்க்குற்றங்கள் பற்றி  பிரான்சுக்கு எந்த வித அக்கறையும் இல்லை. குழந்தைகள் உள்ளிட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கிறார்கள். ஆனால் அவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் சவூதி அரேபியாவிற்கு ஆயுதங்களை பிரான்ஸ் விற்பனை செய்கிறது” என்று குற்றம் சாட்டியுள்ளனர். 2018 ஆம் ஆண்டில் வாஷிங்டன் போஸ்ட் கட்டுரையாளரும், பத்திரிகையாளருமான ஜமால் கஷ்ஷோகி படுகொலை செய்யப்பட்ட பிறகு, சவூதி அரேபியாவிற்கு பயணம் செய்யும் முதல் மேற்கத்திய நாடுகளின் தலைவர் மக்ரோன் என்பது குறிப்பிடத்தக்கது.