ஏதென்ஸ், செப்.24- கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரில் இளம் கம்யூனிஸ்டுகள் ஏற்பாடு செய்துள்ள “ஓடிஜிடிஸ்” திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது. இந்தத் திருவிழாவின் முழக்கமாக, “21-ஆம் நூற்றாண்டிற்கான விடை சோசலிமே!” என வைக்கப்பட்டிருக்கிறது. கிரீஸ் இளம் கம்யூனிஸ்டுகள் நடத்தி வரும் பத்திரிகையின் பெயர் ஓடிஜிடிஸ் ஆகும். இதன் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் இசை நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள், நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன. இளைஞர்கள் மட்டுமல்லாமல், பல தரப்பட்ட மக்களும் ஆயிரக்கணக்கில் இந்த விழாவுக்கு வருவது வழக்கமானதாகும். கிரீஸ் நாட்டில் நடைபெறும் திருவிழாக்களில் பெரிய திருவிழாவாக இது கருதப்படுகிறது. தற்போது 48-ஆவது ஓடிஜிடிஸ் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் நாளன்று இசை நிகழ்ச்சிகள் மற்றும் அரசியல் விவாதங்கள் அடங்கிய பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. ஏதென்ஸ் நகரத்தில் இருந்து மட்டுமல்லாமல், பிற நகரங்களிலிருந்தும் ஏராளமானோர் இதில் பங்கேற்க வந்துள்ளனர். ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து போன பிரபல நடிகரும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த கோஸ்டாஸ் கசகோஸ் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
உக்ரைனில் நடைபெறும் ஏகாதிபத்தியப் போரும், கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடும் என்ற தலைப்பில் அரசியல் விவாதம் நடைபெற்றது. கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழுவின் சர்வதேச விவகாரக்குழுத் தலைவரான எலிசியோஸ் வானெனாஸ் தொடக்கவுரையாற்றினார். ரஷ்ய இளம் கம்யூனிஸ்டு லீக் (போல்ஷெவிக்குகள்) சார்பாக இவான் ஜகோரோவ் உரையாற்றினார். உக்ரைன் கம்யூனிஸ்டுகள் ஒன்றியத்தின் சார்பாக ஒரு அறிக்கை இந்த நிகழ்வில் வாசிக்கப்பட்டது. மற்றொரு நிகழ்வில், “முதலாளித்துவத்தின் உண்மைகளும், பொய்களும்” என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது. இந்த நூலில் ஏகாதிபத்தியம் தூண்டி விடும் போர்களைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. கிரீஸ் இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்பின் மத்தியக்குழு உறுப்பினர் பிரிக்சோஸ் புரோஸ்கோஸ் இந்த நூலை வெளியிட்டார். உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த ஏகாதிபத்தியப் போர்களால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றன என்று நிகழ்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.
வெளிநாட்டுப் பிரதிநிதிகள் ஏராளமான வெளிநாட்டுப் பிரதிநிதிகள் இந்தத் திருவிழாவில் பங்கேற்க கிரீஸ் வந்துள்ளனர். இந்தத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் டிரிட்சிஸ் பூங்காவின் மையப் பகுதியில் “சர்வதேச நகரம்” அமைக்கப்பட்டுள்ளது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் இளம் கம்யூனிஸ்டுகள் அமைப்புகள் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இளைஞர்கள் அமைப்புகளும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பியுள்ளன. அவர்களின் எண்ணிக்கை 35 என்று நிகழ்வு அமைப்பாளர்கள் கூறுகின்றனர். ஐரோப்பாவில் உள்ள சிறு நாடுகளை, அவர்களின் அனுமதியில்லாமலேயே போர்களில் ஈடுபடச் செய்யும் அவலம் நிலவுகிறது என்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஓடிஜிடிஸ் திருவிழாவில் பங்கேற்று வரும் அந்தத் தலைவர்கள் விமானத்தளங்கள், போர்க்கப்பல்கள் உள்ளிட்டவற்றை ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவாக போர்க்களத்தில் நிறுத்தியிருப்பதற்குக் கடும் கண்டனங்களைக் கூறியுள்ளனர்.