உலக நாடுகள் மீதான பரஸ்பர வரிவிதிப்பை அமெரிக்க வணிக நீதிமன்றம் தடை செய்து உத்தரவிட்டது.
அமெரிக்க மீது பல்வேறு நாடுகளும் அதிகளவிலான வரி விதிப்பதாகக் கூறி, அந்நாடுகளின் மீது பரஸ்பர வரியை விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. இதனிடையே வரிவிதிப்பை ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், இந்த வரிவிதிப்பு குறித்து அமெரிக்க வணிக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வரி விதிப்பு உத்தரவை தடை செய்தது.
நீதிமன்றத் தீர்ப்பில் கூறியிருப்பதாவது, அமெரிக்க அரசியலைப்பின்படி, வெளிநாடுகளுடனான வணிக ஒழுங்குகளை. அமெரிக்க பேரவையான காங்கிரஸுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஆனால் அவசரகாலச் சட்டங்களை டிரம்ப் பயன்படுத்தி, அதாவது பயங்கரவாதிகள் அல்லது அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படும் நாடுகள் மீது பொருள் முடக்கம் செய்யப் பயன்படுத்தப்படும் சட்டமான சர்வதேச அவசர பொருளாதார சட்டத்தை டிரம்ப் பயன்படுத்தியுள்ளார்.
இந்தச் சட்டத்தை முதன்முறையாக வரிவிதிப்புக்கு டிரம்ப் பயன்படுத்தியுள்ளார். அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்தி, வரிகளை ஜனாதிபதி விதிக்க இயலாது.ஆகையால் டிரம்பின் இந்த செயல் சட்டவிரோதமானது.
தனது அதிகார வரம்புகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, டிரம்பின் உத்தரவுக்கு நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்தது.
அதுமட்டுமின்றி, தனது வரிவிதிப்பு உத்தரவால்தான், இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த முடிந்தது என்று டிரம்ப் கூறி வந்தார். இதே வாதத்தை அமெரிக்க அரசு தரப்பில் இருந்தும் அந்நாட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசு தரப்பிலான இந்த வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.