சியோல், ஜூலை 15- ஃபுகுசிமா அணுஉலையில் இருந்து மாசுபடுத்தப்பட்ட தண்ணீரை பசிபிக் பெருங்கடலில் கலக்க விடுவதற்கு பசிபிக் பகுதி நாடுகளில் பெரும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஃபுகுசிமா அணுஉலை 2011 ஆம் ஆண்டில் விபத்தைச் சந்தித்தது. அப்போதிருந்து அணுஉலைகளுக்கு எதிரான போராட்டங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. சுத்திகரிக்கப்பட்ட அணுஉலை நீரை வெளியேற்றுவது தொடர்பாக சர்வதேச அளவில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ஃபுகுசிமா அணுஉலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றுவதற்கு சர்வதேச அணுசக்தி முகமை ஒப்புதல் தெரிவித்தது. இந்தத் தண்ணீர் கடலுக்குள் செலுத்தப்படக்கூடாது என்று பசிபிக் பகுதியில் உள்ள நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கத் தொடங்கியுள்ளன. தென் கொரியாவிற்கு முகமையின் பொது இயக்குநர் வருகை தருகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றன. “பசிபிக் பெருங்கடல் கழிவுத் தொட்டியல்ல” என்றுஎழுதப்பட்ட பதாகைகளுடன் போராட்டங்கள் தற்போதும் தொடர்கின்றன. சுத்திகரிக்கப்பட்டு, வெளியேற்றப்படும் நீர் சர்வதேசத் தரத்தில் உள்ளதா என்பதைப் பரிசோதித்த பிறகே, வெளியேற்ற வேண்டும் என்று தென்கொரியா வலியுறுத்தி வருகிறது.