world

img

அமெரிக்காவின் கோரிக்கை நிராகரிப்பு மக்கள் எழுச்சிக்குப் பணிந்தது கிரீஸ் அரசு

ஏதென்ஸ், ஜூன் 15- கைப்பற்றப்பட்ட ஈரானிய எண்ணெய்க் கப்பல்களை விடுவிக்க வேண்டாம் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை நிராகரித்த கிரீஸ் அரசு, தாங்கள் ஏற்கனவே எடுத்திருந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ளது. ஏப்ரல் 19, 2022 அன்று ஈரான் கொடியுடன் மிதந்து வந்த எண்ணெய்க் கப்பலை தங்கள் கடற்பகுதியில் இபோயியா என்ற தீவுக்கருகில் கிரீஸ் கப்பற்படை கைப்பற்றியது.  முறையான ஆவணங்கள் மற்றும் அனுமதியுடன் சென்று கொண்டிருந்த அந்தக் கப்பலைக் கைப்பற்றியதற்கு அமெரிக்காவின் தூண்டுதலே காரணம் என்று சொல்லப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்து 1 லட்சத்து 15 ஆயிரம் பீப்பாய்கள் எண்ணெய் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் என்று கிரீஸ் அரசாங்கம் அறிவித்தது, இந்த சந்தேகத்தை உறுதிப்படுத்தியது. இதற்கு எதிராக ஈரான் அரசும், எண்ணெய் நிறுவனமும் சட்டரீதியான முயற்சிகளைத் தொடுத்தன. அமெரிக்காவின் தூண்டுதலோடு நடத்தப்பட்ட கடற்கொள்ளை என்று குற்றம் சாட்டி வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்காவுக்கு எண்ணெய் வளத்தை கடத்த அனுமதிக்கக் கூடாது என்றும், ஈரான் வசம் மீண்டும் கப்பல் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வாதாடினார்கள். அவர்களின் வாதங்களை ஏற்றுக் கொண்ட கிரீஸ் நீதிமன்றம், எண்ணெய்க் கப்பலை ஈரானிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது.

இந்த நிலையில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கிரீசை அபாயத்தில் தள்ளிவிடும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தன. நீதிமன்றத் தீர்ப்பு வந்ததும், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், மேல் முறையீடு செய்யக்கூடாதென்று கோரிக்கை வைத்தன.  மக்கள்திரள் போராட்டங்கள் பெரும் அளவில் நடைபெற்றன. மக்களின் எழுச்சியைப் பார்த்து அரண்டு போன கிரீஸ் அரசு, மேல் முறையீடு செய்யப் போவதில்லை என்றும், ஈரானிடம் எண்ணெய்க் கப்பலை திருப்பித் தருவது என்றும் முடிவெடுத்துள்ளது. மற்ற ஐரோப்பிய நாடுகளைத் தாக்க அல்லது மிரட்டத் தங்கள் நிலத்தை அமெரிக்கா பயன்படுத்தக்கூடாது என்று கிரீசின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நேட்டோ ராணுவக் கூட்டணியின் பீரங்கிகள் உள்ளிட்ட ராணுவ வாகனங்களை மறித்து திரும்பிப்போ என்று கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி முழங்கியது. இந்தப் போராட்டங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பெரும் எழுச்சியுடன் பங்கேற்று வருகிறார்கள். அண்மையில் நடந்த பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இளம் கம்யூனிஸ்டுகள் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.