world

img

அமெரிக்காவால் தொடரும் யுத்தம்

மாஸ்கோ, டிச.25- போர் குறித்து உக்ரைன் உள்பட அனைத்து தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புடின்  அறிவித்துள்ளார்.  உக்ரைன்- ரஷ்யா இடையிலான போர் ஞாயிறன்று 305-வது நாளை எட்டியுள்ளது. இந்தப்  போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்குத் தேவையான ஆயுதங்கள் வழங்குவதுடன் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.  அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத  உதவியாலேயே இந்தப் போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.  போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து  வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.  ஆனால், உக்ரைனுக்கு ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா சமீபத்தில் அதிநவீன ‘பேட்ரியாட்’ வான்பாதுகாப்பு ஏவுகணை, போர் விமானங்களில் பொருத்தப்படும் அதிநவீன குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் உள்பட மேலும் 1.80 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி  வழங்க முடிவு செய்துள்ளது. இத்தகைய ஆயுத  உதவியால் போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.  

இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்  ஞாயிறன்று அறிவித்துள்ளார்.  இது குறித்து   அவர் ரோசியா-1 அரசு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ‘‘உக்ரைன் போர் தொடர்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளைப் பற்றி சம்பந்தப்பட்ட அனைவரு டனும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். உக்ரைனும் அதன் ஆதரவு மேற்கத்திய நாடுகளும் தான் அமைதிப் பேச்சு வார்த்தையை ஏற்க மறுக்கின்றன’’ என்றார். மேலும் அவர் கூறுகையில், “ரஷ்யாவைத் துண்டாடுவதையே மேற்கத்திய நாடுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன. வரலாற்றுப் பூர்வ மான ரஷ்யாவை துண்டாடுவதே எமது புவிசார் அரசியல் எதிரிகளின் கொள்கை. எங்களது இலக்கு ரஷ்ய மக்களை ஒன்றிணைப்பதுதான்’’ என்றார்.