பெய்ஜிங், ஜூன் 21- சீனாவின் ஜனாதிபதி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங்கின் சீனப் பண்புகளுடனான சோசலிசம் என்ற கருத்தை முன்னெடுத்துச் செல்லப் போவதாக சீன இளம் கம்யூனிஸ்டுகள் லீக் முடிவெடுத்துள்ளது. சீன இளம் கம்யூனிஸ்டுகள் லீக்கின் 19ஆவது தேசிய காங்கிரஸ் அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களான ஜி ஜின்பிங், ஜாவோ லெஜி, வாங் ஹுனிங், டிங் சவோஜியாங், லி ஜி ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதிநிதிகளிடம் உரையாற்றினார்கள். இந்த லீக்கில் மொத்தம் 7 கோடியே 30 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சார்பாக 1,500 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர். தலைவர்கள் வந்தபோது பிரதிநிதிகள் பலத்த கரவொலியுடனான வரவேற்பு கிடைத்தது. 18ஆவது தேசிய காங்கிரசில் இருந்து ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் எண்ணத்தில் உருவான சீனப் பண்புகளைக் கொண்ட சோசலித்தைப் புதிய பாதையில் முன்னேறுவதற்கான அம்சமாக சீன இளம் கம்யூனிஸ்ட்டுகள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு சார்பாக உரையாற்றிய காய் கி தெரிவித்தார். மேலும் உரையாற்றிய அவர், “இரு மாநாடுகளுக்கிடையில் இளம் கம்யூனிஸ்ட்டுகளின் அரசியல் உணர்வுகள் மேம்பட்டுள்ளன. சிறந்த நவீன சோசலிச நாடாக சீனாவை ஆக்க வேண்டும் என்கிற இலக்கை அடைய இளம் கம்யூனிஸ்ட்டுகள் தங்கள் பங்களிப்பை முழுமையாக செலுத்த வேண்டும். மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இளைஞர்கள் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.