இலங்கையை கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் போராடி வந்த நிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோரின் குடும்ப ஆட்சியில் மக்களை பிரித்தாளும் இனவாதக் கொள்கையாலும், மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையாலும் இலங்கை தேசம் இதுவரை சந்திக்காத பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளிடம் கடன் பெற்றாலும் பொருளாதார நெருக்கடி சீராகவில்லை. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.அத்தியாவசிய பொருட்களும் கிடைக்காததால், சாமானிய மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இதனால் கொந்தளிப்படைந்த இலங்கை மக்கள் இன, மத வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்றுபட்டு அமைதியாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இலங்கை மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையை அடுத்து அந்நாட்டில் ஊரடங்கு அமல்பட்டிருந்த நிலையில், இலங்கை பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.