இந்தியா- பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடந்து கூறி வருகிறார். அதே நேரத்தில் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு பாகிஸ்தான் அரசு நன்றி தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனிர் சமீபத்தில் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அரசு டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்துள்ளது.
இதுதொடர்பாக ட்ரூத் சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதிவிட்டுருப்பதாவது,
காங்கோ ஜனநாயக குடியரசுக்கும், ருவாண்டா குடியரசுக்கும் இடையே பல ஆண்டுகளாக நடந்து வரும் போரில் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்தை நான் ஏற்பாடு செய்திருக்கிறேன். இரு நாடுகளின் தலைவர்களும் திங்கள்கிழமை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாஷிங்டன் வருகிறார்கள். இது ஆப்பிரிக்காவிற்கும், உலகிற்கும் ஒரு சிறந்தநாள். இதற்கான எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதற்காக எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது. செர்பியா-கொசோவே, எகிப்து, எத்தியோப்பியா நாடுகளுக்கு இடையேயான அமைதியை ஏற்படுத்தியதற்கு எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
மேலும், மத்திய கிழக்கில் ஒப்பந்தங்களைச் செய்ததற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்காது.
ரஷியா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் உள்பட நான் என்ன செய்தாலும் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்காது.
மேலும், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய டிரம்ப் நான் இதுவரை 4 அல்லது 5 முறை நோபல் பரிசு பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் எனக்கு தரமாட்டார்கள் என புலம்பி தீர்த்துள்ளார்.
2016ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஜனாதிபதியாக முதன் முறையாக டிரம்ப் பதவியேற்றார்.அப்போது இருந்து அவரது ஆதரவாளர்கள் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
2018, 2020, 2021, 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் நோபல் பரிசுக்காக முன்மொழிதல் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார்கள்.
ஆதரவாளர்களை வைத்து பேச வைத்த டிரம்ப் ஒரு கட்டத்திற்கு மேல் தனக்குத்தானே தம்பட்டம் அடித்து கொள்ள தொடங்கினார்.
இந்நிலையில், தற்போது அமைதிக்கான நோபல் பரிசு டிரம்புக்கு வழங்க வேண்டுமென பாகிஸ்தான் பரிந்துரை செய்தததை அடுத்து, தனக்கு நோபல் பரிசு கிடைக்காது என மீண்டும் டிரம்ப் புலம்பி தீர்த்துள்ளார்.