பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50% வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளதற்கு பிரேசில் ஜனாதிபதி பதிலடி கொடுத்துள்ளார்.
அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி இந்திய உட்பட பல்வேறு நாடுகளுக்கு தொடர்ந்து வரிகளை விதித்து வருகிறார்.
இந்நிலையில், பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரேசில் முன்னாள் ஜனாதிபதியும், வலதுசாரியுமான போல்சனாரோவுக்கு எதிராக நடைபெறும் வழக்கை மேற்கோள்காட்டி டிரம்ப் வரி விதித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது மோசடி செய்து ஆட்சி தக்க வைத்துக்கொள்ள நினைத்ததாக போல்சனாரோ மீது பிரேசில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றன.
இந்த வழக்கின் விசாரணை தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், பிரேசிலுக்கு ஆகஸ்ட் 1 முதல் 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி லூலாவுக்கு எழுதிய கடிதத்தை பகிர்ந்து, போல்சனோரோவுக்கு எதிரான விசாரணை நடக்கக்கூடாது. உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் கடிதத்துக்கு பதிலளித்துள்ள லூலா எக்ஸ் தளத்தில் தெரிவித்ததாவது:
பிரேசிலில் ஆட்சி கவிழ்ப்பைத் திட்டமிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கை பிரேசிலின் நீதித்துறை அதிகார வரம்புக்குள் மட்டுமே வருகின்றன. நீதித்துறை சுதந்திரமாக செயல்படக்கூடியவை. எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டவை அல்ல.
பிரேசிலில் கருத்து சுதந்திர ஆக்கிரமிப்பு மற்றும் வன்முறை நடைமுறைகள் எடுபடாது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தும் பிரேசில் சட்டத்துக்கு உட்பட வேண்டும்.
அமெரிக்காவுடன் கடந்த 15 ஆண்டுகளில் 410 பில்லியன் டாலர் வர்த்தகத்தை பிரேசில் கொண்டுள்ளதாக அமெரிக்க அரசின் புள்ளிவிவரங்களே காட்டுகின்றன. அமெரிக்காவின் வரி விதிப்பை பிரேசிலின் பொருளாதார சட்டத்தின்படி எதிர்கொள்வோம் என பதிலடி கொடுத்துள்ளார்.