world

img

வெள்ளத்தின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் தென்னாப்பிரிக்கா

தென்னாப்பிரிக்காவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஏப்.11 ஆம் தேதியன்ற தென்னாப்பிரிக்காவில் குவாசுலு – நடால் மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. இந்த கடுமையான மழைப்பொழிவால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு சார்பில் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், தென்னாப்பிரிக்கா சந்தித்து வரும் கடுமையான இயற்கை பேரிடர்களுக்கு காலநிலை மாற்றமே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் வழக்கமான பாதிப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருந்ததை சுட்டிக்காட்டியுள்ள விஞ்ஞானிகள், இதுவரை 400க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தென்னாப்பிரிக்கா இதுவரை கண்டிராத பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றத்தால் வளிமண்டலத்தில் அதிகரிக்கும் வெப்பநிலையானது அதிகளவு தண்ணீரை தேக்கி வைத்து கூடுதல் மழைப்பொழிவுக்கு வழிவகுப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், கடந்த காலங்களில் 40 ஆண்டுகளக்கு ஒருமுறை மட்டுமே பெய்யும் மழைப்பொழிவை ஒப்பிடும்போது, தற்போது 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை இதுபோன்ற தீவிர மழைப்பொழிவு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.