world

img

மீண்டும் அரசின் கட்டுப்பாட்டில் மோனோமெரோஸ்; அமெரிக்காவின் சதி தவிடுபொடி

காரகாஸ், அக்.11 கொலம்பிய மண்ணில் இருந்து இயங்கும் வெனிசுலா நிறுவனமான மோனோமெரோஸ் மீண்டும் வெனிசுலா அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

விவசாயத்திற்காக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் பூஞ்சைக்கொல்லிகள் போன்றவற்றைத் தயார் செய்யும் வேளாண் வேதிப்பொருள் நிறுவனமாக வெனிசுலாவின் மோனோமெரோஸ் நிறுவனம் இயங்கி வந்தது. வெனிசுலா அரசின் நிறுவனமான இந்த மோனோமெரோஸ் நல்ல லாபத்தைத் தந்த நிறுவனமாகும். வெளிநாடுகளில் இருக்கும் வெனிசுலா அரசின் சொத்துகள் இரண்டாவது அதிகமான மதிப்பைக் கொண்டது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வெனிசுலா அரசின் பேகுயிவென் என்ற நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இந்த மோனோமெரோஸ் நிறுவனம் இயங்கிக் கொண்டிருந்தது. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அமெரிக்க ஆதரவுடன் பல்வேறு சதிவேலைகளைச் செய்தன. இந்த சதிவேலைகள் முறியடிக்கப்பட்டன. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டாவை இடைக்கால ஜனாதிபதியாக அமெரிக்கா மற்றும் அதன் சில கூட்டாளிகள் அங்கீகரித்தனர். 
கொலம்பியாவில் வலதுசாரி மற்றும் அமெரிக்க ஆதரவு அரசு அப்போது இருந்ததால், இந்த வேளாண் வேதிப்பொருட்களைத் தயாரிக்கும் மோனோமெரோஸ் நிறுவனம் எதிர்க்கட்சிகளின் வசம் சென்றது. மே 2019 முதல் தற்போது வரையில் ஏராளமான நிதி முறைகேடுகளும் நடந்துள்ளன. இந்த நிறுவனத்தை அரசிடம் ஒப்படைக்க எதிர்க்கட்சிகள் மறுத்து வந்தன. அமெரிக்காவின் ஆதரவில் கொலம்பிய அரசையும் நிர்ப்பந்தித்து, நிறுவனத்தை சூறையாடி வந்தனர்.
ஆனால் கொலம்பியாவில் இடதுசாரிக் கொள்கைகளை முன்னிறுத்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற குஸ்தவோ பெட்ரோ பொறுப்பேற்றார். கொலம்பிய மண்ணில் இயங்கி வந்த மோனோமெரோஸ் நிறுவனத்தை மீண்டும் வெனிசுலா அரசின் பேகுயிவென் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பெட்ரோ முடிவு செய்தார். அமெரிக்காவின் தடைகளை மீறி, தற்போது இந்த நிறுவனம் மீண்டும் வெனிசுலா அரசிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. 
பெருமைக்குரிய நிறுவனம்
பேகுயிர்வென் நிறுவனத்தின் தலைவரான பெட்ரோ ரபேல் டெல்லிசியா ருயிஸ் கொலம்பியா சென்று மோனோமெரோஸ் நிறுவனத்தைப் பார்வையிட்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாங்கள் உலகிற்கு சொல்லப் போகிறோம். பெருமையுடையவர்களாக உணர்கிறோம். மோனோமெரோஸ் போன்ற நிறுவனத்தைப் பெற்ற நாங்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லப் போகிறோம்" என்றார். 
கொலம்பியாவின் உரத் தேவையில் பாதியை இந்த நிறுவனத்தின் ஆலைகள் தயார் செய்து தந்தன. வேளாண் வேதிப்பொருட்களின் தேவையில் 70 விழுக்காட்டை மோனோமெரோஸ் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த நிறுவனத்தின் வருமானம் வெனிசுலாவின் எதிர்க்கட்சிகளால் கொள்ளையடிக்கப்பட்டது. "நிறுவனத்தை முழுமையாக மீட்கும் பணியில் நாங்கள் இருக்கிறோம். புதிய இயக்குநர்களின் கூட்டமும் நடந்துள்ளது"  என்று பொருளாதார விவகாரங்களுக்கான துணைத்தலைவர் எல் அய்சாமி தெரிவித்துள்ளார். 
இந்தப் புதிய நிகழ்வுகள் பற்றி அமெரிக்க அரசு இதுவரை கருத்துத் தெரிவிக்கவில்லை. ஆனால், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை வட்டாரங்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.