சீனாவின் வளர்ச்சிப் பாதையில் மறுக்க முடியாத பல மாற்றங்களையும் மறைக்க முடியாத பல ஏற்றங்களையும் நிகழ்த்திய மிகப்பெரும் தலைவர் மா சே துங்.
நவ சீனத்தின் சிற்பியாகவும், புரட்சிக்கு சொந்தக்காரராகவும் திகழ்ந்த இவர் 1893 டிசம்பர் 26 அன்று சீனாவின் ஷாவ்ஷான் கிராமத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். 6 வயதில் விவசாய வேலைகளை பார்த்த இவர், 13 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு முழுநேர விவசாயி ஆனார்.
இவருக்கு 18 வயது இருக்கும் போது, சீனா குடியரசாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலையான, ஒற்றுமையான அரசு ஏற்படவில்லை. இந்நிலையில் இடதுசாரி அரசியல் கொள்கைகள் இவரைக் கவர்ந்தன. கொள்கைப் பற்றுமிக்க கம்யூனிஸ்ட்டான இவர், 1920இல் கட்சியின் உயர் அதிகாரக் குழு உறுப்பினர் ஆனார். ஆட்சியைப் பிடிப்பதில் சீனப் பொதுவுடைமைக் கட்சி படிப்படியாக முன்னேறியது.
1935 இல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின், அரசை எதிர்த்து நீண்ட நெடும் பயணம் நடத்தினார். புரட்சியில் கட்சி வெற்றி பெற்றது. 1949 இல் சீனா குடியரசு நாடானது. தனது 56 ஆவது வயதில் மக்கள் சீனக் குடியரசின் முதல் ஜனாதிபதியாக மா சே துங் பதவி ஏற்றார்.
அதல பாதாளத்தில் இருந்த சீன பொருளாதாரத்தை முன்னேற்ற வலிமையும் வளமும் மிக்க சீனா.. முன்னோக்கி பெரும் பாய்ச்சல் என்ற தொலைநோக்குடன் பாடுபட்டார். தொழில்மயமாக்கல், கல்வி வளர்ச்சி, விவசாயம், பொது சுகாதாரம் ஆகியவற்றில் நாடு முன்னேற்றம் கண்டது. அரசியல் பொருளாதாரப் புரட்சி மட்டுமின்றி, சமூகப் புரட்சியையும் நடத்தி னார் மாவோ. பல நூற்றாண்டு கால அந்நிய ஆக்கிரமிப்புக்குப் பிறகு, 20 ஆம் நூற்றாண்டில் சீனா மகத்தான வளர்ச்சி கண்டது. இவரது கொள்கைகள் மாசோயிசம் என்று புகழ்பெற்றன.