ஏதென்ஸ், நவ.10- வறுமை, பட்டினி, சுரண்டல் மற்றும் போர்கள் ஆகியவற்றை உருவாக்கும் மக்கள் விரோத வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து தனது கடுமையான எதிர்ப்பை கிரீஸ் தொழிலாளி வர்க்கம் காட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பெரும் நெருக்கடி உருவாகியுள்ளது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை இந்த நாடுகளும் நடைமுறைப்படுத்தியதும் இந்த நெருக்கடிக்கு முக்கியமான காரணமாக உள்ளது. குறிப்பாக, ரஷ்யாவிடமிருந்து கிடைத்துக் கொண்டிருந்த எரிபொருள் தற்போது கிடைக்கவில்லை. அதைத் தர ரஷ்யா தயாராக இருந்தும், அமெரிக்காவின் முடிவை அப்படியே பின்பற்றுவதால் ஐரோப்பிய நாடுகள் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டன. இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
இந்த எரிபொருள் தட்டுப்பாடு கிரீஸ் நாட்டையும் கடுமையானத் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதல்களிலிருந்து விடுபட சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களில் உயர்வு, நிலையான வேலை மற்றும் உரிமைகளுக்கான உத்தரவாதம், மின்சாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளை குறைந்த விலைகளை மக்களுக்குத் தருதல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்துத் தொழிலாளர்கள் போராடி வருகிறார்கள். தற்போது நடைமுறையில் உள்ள வலதுசாரிக் கொள்கைகள் வறுமையையும், பட்டினியையும் உருவாக்குவதால், இந்தக் கொள்கைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 9 ஆம் தேதியன்று 24 மணி நேர வேலை நிறுத்தத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே மேடையில் இணைந்து நின்று அழைப்பு விடுத்தனர். தலைநகர் ஏதென்ஸ் தெருக்கள் தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தன. புரோபிலியா பல்கலைக்கழகத்தின் வாயிலில் இருந்து புறப்பட்ட பெரும் பேரணி நாடாளுமன்றத்தை நோக்கிச் சென்றது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணி சின்டாக்மா சதுக்கத்தில் நிறைவு பெற்றது. தொழிலாளர்கள், மாணவர்கள், அனைத்து வயதினையும் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பேரணியில் கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்கள் பெரும் அளவில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கட்சியின் பொதுச் செயலாளர் டிமிட்ரிஸ் கோட்சோம்பாஸ், "இன்று நடைபெற்றுள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தம் கிரீஸ் முழுவதற்கும், ஐரோப்பா முழுவதற்கும் ஒரு செய்தியை அனுப்பியுள்ளது. ஆளும் வர்க்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளைப் பார்த்துக் கொண்டு கிரேக்கத் தொழிலாளர் வர்க்கம் சும்மா இருக்காது. அழுகிப் போன முதலாளித்துவ அமைப்பை சகித்துக் கொள்ள மாட்டோம்" என்று குறிப்பிட்டார்.
கோபத்தின் வெளிப்பாடு
வேலை நிறுத்தம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருப்பது பற்றிக் கருத்து தெரிவித்துள்ள அனைத்து கிரீஸ் தொழிற்சங்கக் கூட்டமைப்பு, "பெரும் அளவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். எந்த அளவுக்கு அரசு மற்றும் முதலாளிகளுக்கு எதிராகத் தொழிலாளர்கள் திரண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் கோபம் உறுதியானதாக மாறியிருக்கிறது. உரிமைகளைப் பாதுகாக்க தலைநகர் ஏதென்சின் தெருக்களில் திரண்டதை நம்மால் பார்க்க முடிந்தது" என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
கிரீசின் தொழிலாளர் வர்க்கம் தலைநகர் ஏதென்சில் மட்டும் பேரணியை நடத்தவில்லை. அந்நாட்டில் 60க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த எதிர்ப்புப் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. கிரீஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான தெஸ்ஸாலோனிகியிலும் வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்நகரத்திலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற பேரணிகள் நடந்தன.