world

இலங்கையில் மலர்ந்தது இடதுசாரி அரசு நாடு முழுவதும் செங்கொடி ஏந்தி வெற்றிப் பேரணி - கொண்டாட்டம்

கொழும்பு, செப். 23 - இலங்கையின் 9-ஆவது ஜனாதிபதியாக, மக்கள் விடுதலை முன்னணி(ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தி முன்னணி யின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (55) திங்களன்று (செப். 23) தலைநகர் கொழும்புவில் உள்ள ஜனாதிபதி மாளிகை யில் பதவியேற்றுக் கொண்டார்.

இதன் மூலம் இலங்கையில் முதன்முறை யாக ஓர் இடதுசாரிக் கட்சித் தலைவர் ஜனாதிபதியானார். இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணத்தை, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) மற்றும் தேசிய மக்கள் சக்தி முன்னணியின் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நாடு முழுவதும், சுத்தியல் அரிவாள் சின்னம் பொறிக்கப்பட்ட செம்பதாகைகளுடன் மாபெரும் பேரணிகளை நடத்தினர்.

 மக்களின் எதிர்பார்ப்பிற்கு   ஏற்பப் பணியாற்றுவேன்!

பதவியேற்புக்குப் பின் பேசிய புதிய  ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, “இலங்கை எதிர்கொள்ளும் பிரச்சனைகளின் சிக்கலான தன்மையை நான் புரிந்து கொண்டேன், தேர்தலில் எனக்கு வாக்க ளிக்காத மக்களின் உணர்வுகளையும் புரிந்து,  அனைத்து இலங்கை மக்களின் நம்பிக்கையையும் பெறுவதற்கு கடினமாக உழைக்கப் போகிறேன். ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக மீட்டெடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்” என்று தெரிவித்தார்.

மேலும், நான் ஒன்றும் மந்திரவாதி அல்ல, நான் ஒரு சாதாரண இலங்கை குடிமகன் தான். என்னிடம் திறமைகள் மற்றும் இயலாமைகள் உள்ளன. எனக்கு தெரிந்த மற்றும் தெரியாத விஷயங்களும் உள்ளன. ஜனாதிபதியாக துவங்கும் இந்தப் பயணத்தில் எனது திறன்களை நான் மேலும் மேம்படுத்திக் கொண்டு அதிக அறிவைப் பெற விரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

உலக நாடுகளின்  தலைவர்கள் வாழ்த்து!

அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், கியூப ஜனாதிபதி மிகுவேல் தியாஸ் கேனல், மாலத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) தலைவர் புஷ்ப கமல் தஹால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்தியக்குழு, இந்திய நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜீலி சுங், ஜப்பான் தூதர் மிசுகோஷி, டிரை காண்டினெண்டல் இயக்குநரும் பேராசிரியருமான விஜய் பிரசாத் மற்றும் அண்டை நாடுகளின் தலைவர்கள் பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

55.89 சதவிகித வாக்குகளைப் பெற்ற அனுர திஸாநாயக்க! 

முன்னதாக, வெற்றியைத் தீர்மானிக்க,  இரண்டாவது முன்னுரிமை வாக்குகள் யாருக்கு அதிகமாக கிடைத்துள்ளன என்று பார்க்கப்பட்டது. இதில், அனுர குமார திஸாநாயக்க, 1 லட்சத்து 5 ஆயி ரத்து 264 வாக்குகளைப் பெற்றார். சஜித் பிரேமதாச 1 லட்சத்து 67 ஆயிரத்து 867 வாக்குகளைப் பெற்றார். இதன்மூலம், முதல் மற்றும் இரண்டாவது சுற்றுகளில் மொத்தம் 55.89 சதவிகித வாக்குகளைப் (57 லட்சத்து 40 ஆயிரத்து 179 வாக்குகள்) பெற்ற அனுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்றவராக அறிவிக்கப்பட்டார். சஜித் பிரேமதாச 45 லட்சத்து 30 ஆயிரத்து 902 வாக்குகளுடன் (44.11 சதவிகிதம்) இரண்டாமிடம் பெற்றார்.

இதையடுத்து, இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க திங்களன்று பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஒற்றுமை யுகம் துவங்கியுள்ளது!

“சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய, அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமை தான்  புதிய யுகத்திற்கான அடிக்கல்லாக அமையும். அதன்மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்” என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வானதைத் தொடர்ந்து, தமது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அனுர குமார திஸாநாயக்க பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“பல நூற்றாண்டு காலமாக நாம் கண்டுவந்த கனவு இறுதியில் நனவாகிக் கொண்டிருக்கிறது. பல சிரமங்களுக்கு மத்தியில் லட்சக்கணக்கான மக்களாகிய நீங்கள் அனைவரும் கடந்த காலத்தில் மேற்கொண்ட முயற்சி இந்த கனவை நனவாக்குவதற்கு பலனளித்துள்ளது. அதற்காக நான் உங்களுக்கு நன்றிகூறப் போவதில்லை. காரணம் அந்த வெற்றி என்னுடையதல்ல, நமது கூட்டுமுயற்சியின் விளைவாகும். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. 

நம்முடைய இந்த நீண்ட கால கனவிற்காக தங்கள் உழைப்பையும், கண்ணீரையும், ஏன் தங்கள் உயிரையும் கூட அர்ப்பணித்த பலரது  தியாகத்தால் தான் நம்முடைய இந்த புதிய பயணம் உருவாகியுள்ளது. அவர்களுடைய எந்த  தியாகமும் மறக்கப்படவில்லை. அதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களை நாம் தொடர்வோம். எமக்கு முந்தைய தலைமுறையினர் எம்மிடம் கையளித்த குறுந்தடியில் வீணாகிப் போய்விடாத அவர்களின் முடிவிலா அர்ப்பணிப்பே பொதிந்துள்ளது. அவற்றை நாம்  சுமந்து செல்லவேண்டும் என்ற பொறுப்பு நாம் அறிந்ததே. 

நம்பிக்கையினாலும் எதிர்பார்ப்பினாலும் நிரம்பிய கோடிக்கணக்கான கண்கள் நம்மை முன்னோக்கித் தள்ளுகின்றது. இலங்கையின் வரலாற்றினை புதிதாக எழுதவேண்டுமென எமக்கு அழைப்பு விடுக்கின்றன. அந்த வகையில், கனவை முழுமையாகவே யதார்த்தபூர்வமானதாக அமைத்துக்கொள்வதற்காக இந்த மண்ணுக்கு புத்தம் புதிய ஆரம்பமொன்று அவசியமாகும்.

சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் ஆகிய, அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமை தான் புதிய யுகத்திற்கான அடிக்கல்லாக அமையும். அதன்மீது தான் புதிய மறுமலர்ச்சி யுகம் கட்டியெழுப்பப்படும்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கை வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராவோம். நாம் தேடும் புதிய மறுமலர்ச்சி உருவாகும். நாம் ஒன்றாக இணைந்து இந்த எதிர்காலத்தை மாற்றி வடிவமைப்போம். வாருங்கள் அதற்காக நாம் கைகோர்ப்போம்!”  இவ்வாறு அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இடதுசாரிக் கட்சி ஆட்சி,
ஒரு வரலாற்று நிகழ்வாகும்! திஸாநாயக்கவுக்கு சிபிஎம் வாழ்த்து

புதுதில்லி, செப். 23 - இலங்கை மக்கள் 2022-ஆம் ஆண்டு நடத்திய ‘அரகலயா’ எனும் மாபெரும் எழுச்சியை வழிநடத்திய அனுர  திஸாநாயக்க இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மத்தியக்குழு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மத்தியக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

மாபெரும் ‘அரகலயா’ எழுச்சிக்குப் பிறகு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான முறையில் தங்களின் வாக்குகளை அளித்துள்ள இலங்கை மக்களுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

இத்தேர்தலில் இலங்கையின் நிர்வாக அதிகாரம் கொண்ட 9-ஆவது ஜனாதிபதியாக மக்கள் விடுதலை முன்னணி (ஜனதா விமுக்தி பெரமுனா) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர திஸாநாயக்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் முதன்முறையாக ஓர் இடதுசாரி வேட்பாளர் வெற்றி பெற்றமையானது ஓர் வரலாற்று நிகழ்வாகும்.

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிசெய்து, சமூகப் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் மக்கள் நலப் பாதையில் நாட்டை இட்டுச் செல்வார் என நம்புகின்றோம். அவரது  முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய வாழ்த்து கிறோம். இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.