அசன்சியோன், ஏப்.27- தென் அமெரிக்க நாடான பராகுவேயில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றால், அதிகார மட்டத்தில் ஊடுருவியிருக்கும் கொள்ளையர்கள் பிடியிலிருந்து ஆட்சியைக் காப்பாற்றுவேன் என்று இடதுசாரி வேட்பாளரான எப்ரெய்ன் அலிக்ரே வாக்குறுதி அளித்துள்ளார். ஏப்ரல் 30 ஆம் தேதியன்று பராகுவேயின் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, 45 செனட் உறுப்பினர்கள், 80 கீழவை உறுப்பினர்கள், 17 ஆளுநர்கள் மற்றும் மெர்கோசர் நாடாளுமன்றத்திற்கு 18 உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 40 லட்சம் பேர் தகுதி பெற்றவர்களாவர். 1989 ஆம் ஆண்டில் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்ற பின்னர், பராகுவேயில் நடைபெறும் எட்டாவது பொதுத் தேர்தல் இதுவாகும். இந்தத் தேர்தலில் ஜனாதிபதி பதவிக்கு இடதுசாரி வேட்பாளர் எப்ரெய்ன் அலிக்ரேவுக்கும், தற்போதைய ஆளுங்கட்சியின் வேட்பாளரான சாண்டியாகோ பெபியாவுக்கும் இடையில்தான் போட்டி உள்ளது. பிப்ரவரி மாதத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த அலிக்ரே, ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட மூன்று கணிப்புகளிலுமே முதலிடத்தில் இருக்கிறார். தான் தேர்வு செய்யப்பட்டால், மின்கட்டண விலைக் குறைப்பு, அத்தியாவசிய மருந்துகளுக்கு நிதியுதவி செய்ய வங்கி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பேன் என்று அலிக்ரே வாக்குறுதிகளைத் தனது 148 பக்க தேர்தல் அறிக்கையை மக்கள் முன் வைத்திருக்கிறார். குறைவான வருமானம் ஈட்டக்கூடியவர்களுக்கு 90 விழுக்காடு வரையில் மின்கட்டணம் குறையும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.