உயிர்ப்பன்மயத்தன்மையின் அழி வைத் தடுக்க பத்தாண்டுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய ஒரு அரிய வாய்ப்பு மாண்ட்ரீலில்(கனடா) கூடும் உலகளாவிய உயிர்ப் பன்மயத்தன்மை திட்டம் (GBF Global Biodiversity Frame work) எனப்படும் காப்15 மாநாட்டில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. டைனோசார்களின் காலத்திற்குப் பின் பூமி மிகப்பெரும் பன்மயத் தன்மைப் பேரழிவைச் சந்தித்துவருகிறது. கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் சீனா தலை மையேற்று நடத்தும் இந்த ஐநா மாநாட்டில் இதற்கு ஒரு நல்ல தீர்வு காணப்படுமா? உயிர்ப்பன்மயத்தன்மையைக் காக்கும் நோக்குடன் நடத்தப்படும் மாநாடே காப்15. காலநிலை மாற்றம் பற்றி சமீபத்தில் எகிப்தில் முடிந்த காப்மாநாடு போன்றதில்லை இது. ஐநா உயிர்ப்பன்மை ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ள நாடுகளே இதன் உறுப்புநாடுகள் (COP). கொரோனா நோய் நிலைமை இம் மாநாட்டை இரு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதப்படுத்தியது. 2010இல் நகோயாவில் (ஜப்பான்) கூடிய காப்10 மாநாட்டில் 2030ஆம் ஆண்டிற்குள் உலகில் உயிர்ப்பன்மை முக்கி யத்துவம் உள்ள இடங்களின் நிலப்பரப்பை 17 விழுக்காடு அதிகரிப்பது என்று முடிவு செய் யப்பட்டது.
ஏன் முக்கியனமானது?
மனித நாகரீகத்தின் அடித்தளத்தையே ஆட்டம் காணவைக்கும் ஆறாம் இனப்பேரழிவு நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மனிதனின் விவசாயமுறை, வளங்களை மாசு படுத்துதல், நுகர்தல் போன்றவை மிதமிஞ்சிய அளவில் மீளமுடியாத இழப்புகளை பூமிக்கு ஏற்படுத்துகிறது. இயற்கையால் தாங்கக்கூடிய அளவு மனித நுகர்வை கட்டுப்படுத்தும் நல்ல வழி காப்15இல் ஏற்படும் என நம்பப்படுகிறது. இயற்கையில்லையென்றால் மனிதன் இல்லை இயற்கையுலகின் ஆரோக்கியமான செயல்பாட்டில்தான் உலக நாடுகளின் பாதிக் கும் மேலான உள்நாட்டு வளர்ச்சி உள்ளது என்று பன்னாட்டு ஸ்விஸ் ரீ (Swiss Re) காப்பீட்டு நிறுவனம் கூறுகிறது.
காப்15 இயற்கையை எவ்வாறு காப்பாற்றும்?
பசுமைக்குடில் வாயுக்களின் உமிழ்வைக் குறைப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு நடத்தப்படும் காலநிலைமாற்றம் பற்றிய மாநாடுகள் போலல்லாமல் இம்மாநாடுகள் உயிர்ப்பன்மையை நீடித்த நிலையான வளர்ச்சி யுடையதாக்கிப் பயன்படுத்துவது, மரபணு வளங்களைப் பகிர்தல் மற்றும் வளங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டு நடக்கின்றன. தீங்கேற்படுத்தக்கூடிய விவசாய முறைகள், ஆக்கிரமிப்பு உயிரினங்க ளின் ஊடுருவலைத் தடுத்தல் போன்றவற்றில் நல்ல தீர்வுகள் ஏற்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 2030க்குள் 30/30 என்றழைக்கப்படும் 30 விழுக்காடு வளமான நில மற்றும் கடற் பரப்பைப் பாதுகாப்பது பற்றி முக்கியமாக இறுதி அறிக்கையில் ஒப்பந்தம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் பாதுகாக் கப்பட்ட இடங்களின் பரப்பை அதிகப்படுத்தி னால் மட்டும் இயற்கையின் அழிவை தடுக்கமுடி யாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்பு உயிரி னங்கள் பரவுவதைத் தடுப்பது, தீங்கை ஏற்படுத் தும் விவசாய முறைகளுக்கு உலக நாடுகள் வழங்கும் 490 பில்லியன் டாலர் நிதியைக் குறைத்து இயற்கையைக் காப்பாற்றப் பயன் படுத்துதல் போன்ற அம்சங்கள் குறித்து பேசப்படும்.
முட்டுக்கட்டைகள் என்ன?
நிதி, உயிரி டிஜிட்டல் திருட்டு (bio digital piracy) போன்றவை மாநாட்டின் முக்கிய முட்டுக்கட்டைகளாகக் கருதப்படுகின்றன. கால நிலை உச்சிமாநாட்டில் பேரிடர் பாதிப்பு நாடு களுக்கு இழப்பீடு வழங்க நிதியம் அமைக்க ஒப்பந்தம் ஏற்பட்டது போல இயற்கை வளம் மிக்க ஏழை நாடுகள் வளம் குறைந்த மற்றும் பணக்கார நாடுகள் தங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று கோரிவருகின்றன. இதற்காக ஜெர்மனி ஒரு பில்லியன் டாலர் நிதியை தனது காலநிலை நிதியுதவி திட்டத்தில் ஒதுக்கியுள்ளது. மற்ற நாடுகளும் இதேபோல செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியப்புள்ளிகள் யார்?
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், யு கே, கொலம்பியா, கோஸ்டாரிக்கா போன்ற நாடுகள் 2015 பாரிஸ் காலநிலை மாநாட்டில் 1.5 டிகிரி குறிக்கோளை வரையறை செய்ய முக்கியக் காரணமாக இருந்ததுபோல இம்மாநாட்டிலும் செயல்படும் என்று கருதப்படுகிறது. இந்த மாநாட்டில் நூற்றிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கின்றன. ஆப்பிரிக்கக்குழு என்ற கூட்டமைப்பில் நமீபியா, கென்யா, தென் னாப்பிரிக்கா மற்றும் கபோன் ஆகியவை டிஜிட்டல் திருட்டைக் குறைக்க வலியுறுத்த வுள்ளன.
சீனாவின் மகத்தான பங்கு
உயிர்ப்பன்மயத்தன்மை குறித்த மாநாட்டை முதல்முதலாகப் பொறுப்பேற்று நடத்தும் சீனா காப்15 மாநாட்டிற்கு சூழல் நாகரீகம் (Ecological civilization) என்று பெயரிட்டுள்ளது. மாநாடு வெற்றியடைய பாடுபடுகிறது. விவசாயம் தொடர்பான மாற்றங்களைக் கொண்டு வர மிகப்பெரிய விவசாய நாடுகளான பிரேசில், அர்ஜெண்டினா ஆகியவை முட்டுக்கட்டை போடுகின்றன. ஆனால் இடதுசாரி தலைவர் லூலா டி சில்வா தலைமையிலான அரசு தன் நிலையை இப்போது மாற்றிக்கொண்டுள்ளது என்பது மகிழ்ச்சி தரும் செய்தி.
நடக்கப்போவதென்ன?
அக்டோபர் 2020இல் சீனாவின் கனா மிங்கில் கூட இருந்த இம்மாநாடு கொரோனா பரவல் தடங்கல்கள் காரணமாக இப்போது மாண்ட்ரீலில் நடைபெறுகிறது. கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும் சீனத் தலைவர் கனடா மாநாடு வெற்றி பெற தன் முழு ஒத்து ழைப்பை வழங்கி வருகிறார். இயற்கைவளப் பாதுகாப்பில் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ள பிரபல திரைப்பட நட்சத்திரம் லியனார்டோ டிகாப்ரியோ (Leonardo Dicaprio) மாண்ட்ரீ லில் நடக்கும் நிகழ்வுகளை 19 மில்லியன் ரசிகர்கள் உள்ள தன் டிவிட்டர் பக்கத்தில் உட னுக்குடன் வெளியிட கனடா வந்துள்ளார். பாரிஸ் உடன்படிக்கையில் 1.5 டிகிரி வெப்ப உயர்வு வரையறை என்ற முக்கிய குறிக்கோளை அடைய காரணமாக இருந்த கோஸ்டாரிக்கா நாட்டின் ராஜதந்திரி கிறிஸ்டியானோ ஃபீகர்ஸ் (Christiana Figueres) காப்15இல் முக்கியப்பங்கு ஆற்றுகிறார். பூமியின் கோடிக்கணக்கான உயிரினங்க ளைக் காக்க நாளை நம் வாரிசுகள் வாழும் இடமாக பூமியை நிலை நிறுத்த டிசம்பர் 7 முதல் சீனாவின் தலைமையில் மாண்ட்ரீ லில் ஒன்றுகூடும் காப்15 மாநாடு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்தி ருக்கிறது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்