டெஹ்ரான், ஜூலை 11- பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து பொது நாணயம் ஒன்றை உருவாக்க முயற்சி செய்து வருவதற்கு ஈரான் வரவேற்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து ஈரானின் தெற்கு ஆசிய வெளியுறவுத்துறை அலுவலகத் தலைவர் ரசூல் மவுசவி பேசியபோது, “தங்கத்தின் மதிப்பை பின்னணியாகக் கொண்டு பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவுள்ளனர். இதற்கு 41 நாடுகள் ஆதரவும் தெரிவித்துள்ளன. டாலரையும், யூரோவையும் இது மதிப்பிழக்கச் செய்யும்” என்றார். மேலும் பேசிய அவர், “ஈரான் போன்ற நாடுகளுக்கு இந்த நாணயம் பெரும் அளவில் பலனளிக்கும். மேலும், தங்கத்தை சேமித்து வைத்திருக்கும் ஈரானியர்கள் தங்கள் சொத்தின் மதிப்பு பல மடங்கு உயருவதைக் காண முடியும். மேற்கத்திய நாடுகளின் நாணயங்களை நம்பியிருக்காமல் வர்த்தகம் செய்யலாம்” என்று தெரிவித்தார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் அடுத்த உச்சிமாநாடு ஆகஸ்ட் மாதத்தில் தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் நடைபெறவுள்ளது. அந்த மாநாட்டில் பொது நாணயத்திற்கான முன்மொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.