world

img

வெளியேறுங்கள்! - பிரான்ஸ் ராணுவத்திற்கு வலியுறுத்தல்

ஓகடோகோ, ஜன.23- பிரான்ஸ் ராணுவத்தை தங்கள் மண்ணில் இருந்து வெளியேறுமாறு கோரி நூற்றுக்கணக்கான மக்கள் பர்கினோ ஃபாசோவில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபாசோவில் பிரான்ஸ் ராணுவத்தின் முகாம் உள்ளது. காம்போய்ன்சின் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த முகாமை அகற்றுமாறு மக்கள் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள். தங்கள் மண்ணில் பிரான்ஸ் நாட்டின் ராணுவம் இருப்பதால் பாதுகாப்புப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்றும், தீர்ப்பதற்கான வாய்ப்புகளும் இல்லை என்றும் போராடும் மக்கள் கூறுகிறார்கள். பர்கினோ ஃபாசோவில் உள்ள பிரான்ஸ் நாட்டுத் தூதுவர் லக் ஹல்லாடேவை சந்தித்துத் தங்கள் கோரிக்கையை போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

அதற்கு முன்பாக நாட்டின் தலைவர் ஓகாடோகோவின் வீதிகளில், ‘‘பிரான்சே வெளியேறு’’ என்ற முழக்கத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் வலம் வந்தனர். போராட்டத்தில் பங்கேற்ற சிலர் பிரான்ஸ் நாட்டுக் கொடியை எரிக்கவும் செய்தார்கள். போராட்டக்களத்தில் இருப்பவர்கள் தற்போது பர்கினோ ஃபாசோவின் இடைக்காலத் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றுள்ள இப்ராகிம் டிராவோரேயின் ஆதரவாளர்களாவர். நாடு முழுவதும் பிரான்ஸ் மற்றும் அதன் ராணுவத்திற்கு எதிரான மனநிலை நிலவுகிறது. பர்கினா ஃபாசோவின் பாதுகாப்புக்காக முன்னாள் ஆட்சியாளர்களால் பிரான்ஸ் ராணுவம் அனுமதிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரையில் உள்நாட்டு நெருக்கடியில் தீர்வு காணப்படவில்லை. இந்நிலையில், நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரான்ஸ் ராணுவத்திற்கு பர்கினா ஃபாசோ அரசு உத்தரவிட்டிருக்கிறது.