world

img

அமெரிக்காவில் வேலைநிறுத்தங்கள்!

ரயில்வேயில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததை கண்டித்து அமெரிக்க ரயில் தொழிலாளர் மாதக் கணக்கில் போராடி வருகின்றனர். நவம்பர் 30-ல் ஜோ பைடன் அரசு நாடாளுமன்ற கீழவையில் ரயில்வே தொழிலாளிகளின் வேலை நிறுத்த உரிமையை தடை செய்யும் மசோதாவை நிறைவேற்றியது. மசோதா செனட்டிற்கு செல்கிறது. உணவுப் பொருள்கள், எரிபொருள், மருந்து உட்பட பல அத்தியாவசியமான சரக்குகள் ரயில் மூலம் செல்கிறது. ரயில்வே வேலை நிறுத்தம் என்றால் பொருளாதாரமே ஸ்தம்பிக்கும். 4 அல்லது 5 பகாசுர ரயில் கம்பெனிகளின் கொள்ளை லாபத்திற்கு பைடன் அரசு துணை போகிறது. வாரக் கணக்கில் ரயில்வே தொழிலாளர் வீடுகளுக்கு திரும்ப முடிவதில்லை. பணி நேரம் முடிந்து ஓய்வில் இருக்கும் போது கூட அவசரப் பணிக்காக ரயில் தொழிலாளர் அழைக்கப்படுகின்றனர். கடும் பணிச்சுமையால் ரயில்வே தொழிலாளர்களின் உடல்நலம் சீர்கேடு அடைகிறது. மருத்துவமனைக்கு சென்று வைத்தியம் பார்க்க வேண்டுமானால், ஊதியம் இழந்து,

விடுப்பு எடுத்துத் தான் செல்ல முடிகிறது. அமெரிக்க ரயில்கள் மைல் கணக்கில் நீண்டு உள்ளது. ஆனால் தொழிலாளர் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. 2000 -ம் ஆண்டு காட்டிலும் ரயில்வே கார்ப்பரேட்டுகளின் லாபம் 85 சதவிகிதம் கூடியுள்ளது. தொழிலாளர்களின் பணி நேரம் திடீர் திடீரென நீட்டிக்கப்படுகிறது. தொழிலாளர்கள் கோரிவரும் ஊதியத்துடன் கூடிய 15 நாட்கள் மருத்துவ விடுப்பை நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்கு 68.8 கோடி டாலர் மட்டுமே செலவாகும். 2020 -21 இல் மட்டும் அவர்கள் லாபம் ஈட்டியது 2000 கோடி டாலர் .3.5% லாபத்தை மருத்துவ விடுப்புக்கு செலவிட கூட கார்ப்பரேட்டுகள்  தயார் இல்லை என்றால் அவர்களது பேராசை, லாபவெறி எந்த அளவு கொடூரமானது என்பதை பார்க்க முடியும். அமெரிக்க மக்கள் பிற்போக்கான வர்கள்; 10% தொழிலாளர்களே தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாகியுள்ளனர் என்றெல்லாம் கூறப்பட்டாலும், ரயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை அமெரிக்க மக்கள் ஆதரிக்கின்றனர்.