அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் கனடா பொருள்களுக்கு 35% வரி விதித்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் இந்திய உள்பட பல்வேறு நாடுகளுக்கு அதிக இறக்குமதி வரி விதித்து டிரம்ப் அச்சுறுத்தி வருகிறார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 அல்லது 20 சதவிகிதம் மட்டுமே வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக டிரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திடீரென வரி விதிப்புகளுக்கான அறிவுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதில், கனடாவுக்கு 35 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இது வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்த வரி விதிப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் வரி அதிகரிப்பு நடவடிக்கைகளை எடுத்தால் கனடா கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு சமூக வலைதளப் பக்கமான ட்ரூத் சோஷியலில் டிரம்ப் எழுதியுள்ள கடிதத்தில், அமெரிக்காவிற்குள் போதைப் பொருள் கடத்தப்படுவதைத் தடுப்பதில் கனடாவின் தோல்வியடைந்துவிட்டது என்றும் விமர்சித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக தனது வர்த்தக போர் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரப்படுத்தி வருவதன் ஒரு பகுதியாக தற்போது கனடாவுக்கும் 35 சதவிகித வரியை விதித்துள்ளார். ஏற்கனவே, ஜப்பான், தென்கொரியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கு 50% வரி விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.