கஜா புயல் பாதிப்பு: 1 லட்சம் பேருக்கு வீடுகள்!
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டித்தரப் படும் என்ற தமிழக அரசு அறிவித்த திட்டம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்ற நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரின் கேள்விக்கு பதில் அளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “ வீடுகள் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் இந்த திட்டத்திற்கு பிரதமரிடம் சிறப்பு அனுமதி கேட்டுள்ளோம். இந்த பணிகளுக்காக தற்போது மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்றார்.
திமுக உறுப்பினர் கும்பகோணம் அன்பழகன் கேள்விக்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், “கஜா புயலால் சேதமடைந்த 2.5லட்சம் மரங்கள், விவசாய நிலங்கள், நீர்வரத்து கால்வாய்களில் விழுந்து கிடப்பதை அப்புறப்படுத்தி புதிய மரக்கன்றுகள் நடுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
கபடி வீரருக்கு பாராட்டு!
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 15 கோடியே 67 லட்சம் செலவில் ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்றும் இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கோரப்பட உள்ளதாகவும் எதிர்க் கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்தார்.
சமீபத்தில் நடந்த ஆசிய கபடி போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய கணேஷ் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தவர். இவர் மட்டுமல்ல மேலும் பலர் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். இவர்களை போன்றவர்கள் பயிற்சி பெற அரசு சார்பில் மைதானம் இல்லை. எனவே, உடன்குடியில் கபடி, கால்பந்து, கைப் பந்து, கிரிக்கெட் விளையாட்டுக்களுக்கான மைதானம் அமைக்க அரசு முன் வருமா? என்று திமுக உறுப்பினர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வினவினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிய கபடியில் விளையாடி வெற்றி வாகை சூடிய கணேசனுக்கு பேரவை சார்பில் வாழ்த்து தெரிவித்தார். திருச்செந்தூரில் மினி ஸ்டேடியம் ரூ. 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த விளையாட்டு மைதானம் அமைக்க இடம் கொடுத்தால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.
குடிமனை பட்டா: அரசாணை கால நீட்டிப்பு
சென்னையைச் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 32 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குடிமனை பட்டா வழங்க அரசு விதித்துள்ள தடை தளர்த்தப்ப டுமா? என்று திமுக உறுப்பினர் சுதர்சனம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,“ சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு முறை வரன்முறைப்படுத்தும் திட்டத்திற்காக அரசாணை வெளியிடப்பட்டு பட்டா வழங்கப்பட்டு வந்தது. மக்களவை தேர்தல் காரணமாகத் திட்டம் நிறுத்தி வைக்கப்பட் டிருந்தது. அதனை கால நீட்டிப்பு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வீட்டுமனைகளின் விலை கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்தவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசாணைகள் 405, மற்றும் 496 மூலம் சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளுக்கு இலவச மனைப் பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்றார்.