what-they-told

img

முகம்மது நபிகளை அவதூறாக பேசிய நூபுர் சர்மாவுக்கு துப்பாக்கி உரிமம்!

புதுதில்லி, ஜன. 12 - முகமது நபிகள் குறித்து அவதூறாக பேசிய நூபுர் சர்மா, கைத்துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கு தில்லி காவல்துறை உரிமம் வழங்கியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் சர்மா, கடந்த 2022 மே 26-ஆம் தேதி தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபிகள் குறித்து அவதூறு செய்தார். இது சர்வதேச அளவில் கவனம் பெற்று, இந்தியாவுக்கு கண்டனங்களைப் பெற்றுக் கொடுத்தது. இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருந்த நாடுகளே கூட நூபுர் சர்மாவின் அவதூறு பேச்சையும், அவர் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதையும் தங்கள் தூதர்கள் மூலமாக கண்டித்தனர். இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்யப் போவதில்லை என்றும் அறிவித்தனர்.  இந்தியாவில் பல்வேறு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், கான்பூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் நூபுர் சர்மா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, இவ்விஷயத்தில் நூபுர் சர்மாவை உச்ச நீதிமன்றம் கண்டித்தாலும், கைது செய்வதற்குத் தடை விதித்தது.  அதேநேரம், நடவடிக்கை எடுத்து விட்டோம் என்று உலகிற்கு காட்டிக்கொள்வதற்காக, நூபுர் சர்மாவை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக அறிவித்த பாஜக, மறுபுறத்தில் தில்லி காவல்துறை மூலம் நூபுர் சர்மாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் தில்லி காவல்துறை மூலம் பாதுகாப்பு அளித்திருந்தது. இந்தச் சூழலில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் துப்பாக்கி வைத்துக் கொள்ளக் கேட்டு, நூபுர் சர்மா விண்ணப்பம் செய்திருந்ததன் பேரில், அவருக்கு தில்லி காவல்துறையானது, தற்போது துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் வழங்கியுள்ளது.