கதா காலட்சேபம் செய்பவர் மீது தாக்குதல் : சிபிஎம் போராட்டம்
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டாவா மாவட்டத்தில் கதா காலட்சேபம் (மதக் கதை சொல்பவர்) பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்ததால், பிராமணர்கள் அவரை கொடூரமாக தாக்கி, மொட்டையடித்து, காலால் மூக்கைத் தேய்த்து, சிறுநீர் கழித்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எட்டாவா மாவட்டக் குழு,”மதக்கதை சொல்பவர் மீதான தாக்குதல் இந்திய அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு நபரின் கண்ணியம், மரியாதை மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. மேலும் இந்தச் செயல் சமூகத்தில் வெறுப்பைப் பரப்புவதற்கும், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிப்பதற்கும் வழிவகுக்கிறது. இது கடுமையான குற்றத்தின் வகையைச் சேர்ந்தது. அதனால் இந்த விவகாரத்தில் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என போராட்டத்துடன் எட்டாவா மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தது.